Pa Raghavan's Blog, page 23
April 24, 2016
பொன்னான வாக்கு – 32
சில பேருக்குச் சில ராசி உண்டு.
என் தம்பி பத்தாவதோ ப்ளஸ் ஒன்னோ படிக்கும்போது ஒரு சட்டை போட்டிருப்பான். வெளிர் நீல நிறத்தில் அழுத்தமான நீலமும் சிவப்பும் அடுத்தடுத்து வரும்படியான கோடுகள் போட்ட ஒரு சட்டை. ஏதோ ஒரு பரீட்சைக்கு அந்தச் சட்டையைப் போட்டுக்கொண்டு போய் நல்ல மார்க் எடுத்துத் தேர்வாகிவிட்டதை நினைவுகூர்ந்து, அந்தச் சட்டையை ஸ்விஸ் பேங்கில் கொண்டு போய் வைக்காத குறையாகத் தேர்வுகளுக்கென்று மட்டும் பத்திரப்படுத்தி வைத்தான். அவன் ப்ளஸ் டூ முடித்து, மூன்று வருட கல்லூரிப் படிப்பை முடித்து, அதன்பின் சில வருடங்கள் சிஏ படித்து, அதையும் முடிக்கும்வரை அந்தச் சட்டை அவனிடம் அப்படியே இருந்தது. அத்தனை தேர்வுகளுக்கும் அதைத்தான் அணிந்து செல்வான். தோய்த்தால் ராசி போய்விடும் என்று தோய்த்ததுகூட இல்லை என்று நினைக்கிறேன். ஒரு கிருமி பாம் போல அந்தச் சட்டை எங்கள் வீட்டில் வெகுகாலம் அனைவரையும் அச்சமூட்டிக்கொண்டிருந்தது.
எனக்கும் இப்படிப்பட்ட ஒரு ராசி இருந்தது. சிறு வயதில் நான் டிவியில் கிரிக்கெட் பார்க்க உட்கார்ந்தால் அன்றைய மேட்சில் கண்டிப்பாக இந்தியா தோற்கும். தேச நலன் கருதி இதனாலேயே கிரிக்கெட் பார்ப்பதை விட்டேன். அதன்பிறகுதான் இந்தியா அதிக மேட்ச்களில் தோற்க ஆரம்பித்தது என்பது ஒரு வரலாற்றுப் பிழையே ஆனாலும், இங்கு சொல்லிவைப்பது நல்லது. ஏனெனில் எனது மேற்படி ராசி வேறு பல சந்துபொந்துகளிலும் சமயம் பார்த்துக் காலை வாரிவிடுவதைத் தற்செயலாக இப்போது கவனித்தேன்.
ஒரு நாலு நாள் நான் இந்தப் பத்தி எழுதவில்லை. அதனாலேயே என்னவாவது அதிசயம் நிகழ்ந்து, தமிழக அரசியலில் தடாலடித் திருப்பங்களோ, திடுக்கிடும் மாற்றங்களோ ஏற்பட்டுவிடும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். தேர்தல் சமயம் வேறு. ஜெயலலிதா பிரசாரத்துக்குப் போகிற இடத்திலெல்லாம் யாராவது சூனியம் வைத்துவிடுகிறார்கள். உடனே யாராவது பலியாகிவிடுகிறார்கள். திடீர் வாட்சப் செய்தியாளர்கள் அடுத்த பலி இங்கே அல்லது அங்கே என்று ஆரூடமெல்லாம் சொல்லத் தொடங்கிவிட்டதில் சற்றுக் கலவரமானது உண்மையே. நல்லவேளை திருச்சி தப்பித்தது.
ஆனால் சொன்னேனல்லவா, என் ராசி சில வரலாற்றுப் பிழைகளை உருவாக்குமென்று? அதுதான் நிகழ்ந்திருக்கிறது. அதிமுகவுக்காகத் தேர்தல் பிரசாரம் செய்யத் தயார் என்று ஜெயலலிதாவை நேரில் போய்ப் பார்த்துத் தம் விருப்பத்தைச் சொல்லிவிட்டு வந்திருக்கிறார், மதுரை ஆதீனம் அருணகிரி தேசிகர். பொதுக்கூட்ட பலிகளைக் காட்டிலும் பேஜார் தரத்தக்கதாக உள்ளது இது.
ஆதீனவாதிக்கு அரசியல் ஆர்வம் இருக்கக்கூடாதா என்றெல்லாம் கேட்டுவிடாதீர்! அவர் அதை ஒளித்ததே இல்லை. ஞானசம்மந்தரின் வழித்தோன்றல் அவ்வப்போதாவது கொஞ்சம் ஆன்மிகவாதியாகவும் இருந்துவிட்டால் பிரச்னையில்லை என்பதுதான் விஷயம். ஆயிரத்தைந்நூறு வருஷ பாரம்பரியம் மிக்க ஒரு மடத்தின் பீடாதிபதியானவர், ரத்தத்தின் ரத்தங்களின் பிரியாணி, பேட்டா கூட்டங்களில் வரிந்துகட்டிக்கொண்டு வசைமாறி பொழியப் போகிறார் என்பதை எண்ணிப் பார்க்கச் சங்கடமாக இருக்காதா?
ஏழாம் நூற்றாண்டில் திருஞான சம்மந்தரால் நிறுவப்பட்ட மதுரை ஆதீன மடம், தமிழகத்தில் சைவமும் தமிழும் செழிக்க எத்தனையோ செய்திருக்கிறது. காண்டெம்ப்ரரி கரஸ்பாண்டண்ட் சுவாமிகளோ, தமிழகம் செழிக்க இரட்டை இலைக்கு வாக்களிப்பீர் என்கிறார். விட்டால் ஒரு கோலி சோடா உடைத்துக் குடித்துவிட்டு, ஒற்றைக்கையில் மைக் பிடித்து, ஏ கருணாநிதியே என்று என்றைக்கு வேண்டுமானாலும் ஆரம்பித்துவிடுவார் போலிருக்கிறது.
செய்தியில் இருப்பதுதான் நோக்கம் என்றால் அதற்கு சுவாமிகள் வேகாத வெயிலில் களமிறங்கி வாக்குச் சேகரிக்கவேண்டிய அவசியமே இல்லை. நித்யானந்தாவோடு அவர் இணைந்து கலக்கிய திடுக்கிடும் திருப்பங்கள் நிறைந்த சமகாலக் காவியம் ஒன்று போதும், அவரது அருமை பெருமைகளை எடுத்துச் சொல்ல.
என் கேள்வி அதுவல்ல. ஒரிஜினல் நயம் திராவிட நாத்திகப் பெருந்தகைகளின் வாரிசுகள் நூற்றெட்டுப் போற்றி சொல்லி பிரசாரம் தொடங்கினால் சந்தோஷப்படும் சமூகம், போலி ஆத்திகப் போர்வையாளர்களின் களப்பணியாரங்களையும் அதே ஆர்வத்துடன் அள்ளிச் சாப்பிடுமா?
ஒரு காலத்தில் மடங்கள், மடாதிபதிகள் மீதிருந்த மட்டுமரியாதையெல்லாம் மக்களுக்கு இன்று அப்படியே இருக்கிறதா என்று தெரியவில்லை. காசுள்ள கனவான்களுக்கு கார்ப்பரேட் சாமியார்களின் ஸ்டைலிஷ் யோகா வகுப்புகள் போதும். காசற்றவர்களுக்குக் கடவுளே போதும். ஆயிரத்தைந்நூறு வருடப் பாரம்பரியம் கொண்ட மடாலயத்தின் அருமை பெருமைகளையே காப்பாற்ற இயலாத மடதாரி, வெறும் நாற்பத்தி நாலு வருஷ சரித்திரம் கொண்ட கட்சிக்குப் பிரசாரம் செய்து என்ன சாதித்துக்கொடுத்துவிடுவார் என்று ஜெயலலிதா எதிர்பார்க்கிறார்?
ஆதீனதாரி அருணகிரி தேசிகரோடு ஒப்பிட்டால், நவரசத் தென்றல் நமீதாவின் வரவு அதிமுகவுக்குச் சற்றும் சந்தேகமின்றிப் புது ரத்தம் பாய்ச்சக்கூடியது. ரத்தத்தின் ரத்தங்களெல்லாம் இனி மச்சான்களாகிவிடுவார்கள். மேடையில் வீசும் மெல்லிய (சரி, கனத்த) பூங்காற்று வெகு நிச்சயமாக இந்தக் கோடை வெயிலுக்குச் சரியான தீர்வு. இது மயக்க யோகம் அல்லது மரண யோகத்தையும் ஒருவேளை தடுத்தாலும் தடுக்கும்.
ஆனால் ஒன்று. ஜெயலலிதாவின் “எனது தலைமையிலான அதிமுக அரசு” அடுத்த முறையும் அமைந்து, அருமை ஆதீனருக்கு ஒரு மாநிலங்களவை எம்பி பதவியாவது கிடைத்தாலொழிய அவர் அடங்கமாட்டார் என்று நினைக்கிறேன். நமீதாவோடு இணைந்து அவர் பிரசார ‘குத்துக் கலை நிகழ்ச்சி’ நடத்திவிடுவதற்குள் திருஞான சம்மந்தர்தான் அவரைத் தடுத்தாட்கொள்ள வேண்டும்.
Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
April 18, 2016
பொன்னான வாக்கு – 31
நண்பர் ஒருவருக்கு பாரதிய ஜனதாவில் சீட்டுக் கொடுத்தார்கள். அவர் அந்தப் பக்கம் பச்சையாரஞ்சுத் துண்டு போட்டு போட்டோவுக்கு நிற்பதற்கு முன்னால் இந்தப் பக்கம் அவர் பேரில் ஒரு வாட்சப் குழுமம் ஆரம்பிக்கப்பட்டது. எப்படியாவது அவரைத் தேர்தலில் வெற்றி பெற வைத்துவிடுவதற்கு சஹிருதயர்கள் என்ன செய்யவேண்டும்? ஆலோசனைகளை அள்ளி வீச ஒரு தளம். தொழில்நுட்பம் சட்டை பாக்கெட்டுக்கு வந்துவிட்ட பிறகு கருத்துப் பரிமாற்றங்களை நெஞ்சிலிருந்து நெஞ்சுக்கு நேரடியாகக் கடத்துவதில் சிக்கலேதுமில்லை.
ஆனால் நடந்ததுதான் நாராசம். குழுமம் ஆரம்பித்து நாலைந்து தினங்கள் ஆகிவிட்டன. இன்னும் நண்பருக்கு வாழ்த்துச் செய்திகளை மட்டுமே அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கு வாழ்த்து. போட்டியிடுவதற்கு வாழ்த்து. வெற்றி பெற வாழ்த்து. பிறரைத் தோற்கடிக்கச் செய்யப் போவதற்கு வாழ்த்து. போட்டியிட முன்வந்தமைக்கே வாழ்த்து. வாட்சப் குழுமம் அமைத்தமைக்கு வாழ்த்து. பிரசாரம் தொடங்கவிருப்பதற்கு வாழ்த்து.
ஏவுகணைத் தாக்குதல்போல் வினாடிக்கொரு வாழ்த்துச் செய்தியாக அனுப்பி கதிகலங்கச் செய்துகொண்டிருக்கிறார்கள் சகோதர ஜிக்கள். இந்த வாழ்த்து அமில மழை பொறுக்காமல் சில கனபாடிகள் இணைந்த சூட்டிலேயே நைசாக நழுவியும் போனார்கள். நண்பரின்மீதுள்ள பாசத்தில் மிச்சமிருப்போர் மட்டும் ம்யூட் செய்துவிட்டு அமைதியாக இருக்கிறார்கள். எப்போதாவது போனால் போகிறதென்று அன்ம்யூட் செய்தால் அப்போதும் ஆயிரக்கணக்கில் வந்து விழுகிறது வாழ்த்துச் செய்திகள். நண்பர் நூறாண்டு காலம் மக்கள் சேவை செய்து சௌக்கியமாக வாழ்வேண்டியவர்தாம். அதில் சந்தேகமில்லை. ஆனால் வாழ்த்துச் செய்தியிலேயே வடை சுட்டுக் காலம் தள்ளி விட முடியுமா?
தமிழகத்தில் பாரதிய ஜனதா என்ன நிலைமையில் உள்ளது என்பதற்கு இந்த வாட்சப் குழுமம் ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக எனக்குப் பட்டது. எண்ணி ஒரு மாதத்தில் தேர்தல். இந்த அறிவிப்பே மிகவும் தாமதமாக வந்திருப்பது. இருக்கிற தினங்களில் உருப்படியாக என்னென்ன செய்யலாம் என்று ஆளுக்கு ஒரு யோசனைகூடவா தோன்றாது? நெருங்கிய உள்வட்டத்திலேயே இதுதான் நிலைமை என்றால் வெளியே என்ன வாழும்?
கட்சி எது, கூட்டணி என்ன, இந்தத் தேர்தலுக்குக் குறைந்தபட்ச செயல்திட்டம் என்ன என்பதையெல்லாம் தாண்டி, ஒரு வேட்பாளர் ஒரு தொகுதியில் வெல்லவேண்டுமானால் அதற்கு அடிப்படைத் தகுதி, தொகுதியில் உள்ள அத்தனை பேருக்கும் அவரது முகம் பரிச்சயமாகியிருக்க வேண்டும் என்பது. வீடு தோறும் வணக்கம் வைத்துவிட்டு வருவதும் வீதி அடைத்து கட்டவுட் வைப்பதும் வேறு எதற்காக?
சரி கட்டவுட்டுக்கு வழியில்லை. போஸ்டருக்கு வழியில்லை. கணக்கு வாத்தியார் தேர்தல் கமிஷனர் கோபித்துக்கொள்ளுவார். அதனாலென்ன? களத்தில் செய்ய எத்தனையோ இருக்கிறது.
அடிப்படையில் ஒன்றைக் கவனிக்கவேண்டும். ஐம்பதாண்டுகளுக்கு மேலாக காங்கிரஸ் போராடி வருவதும் முப்பதாண்டுகளுக்கு மேலாக பாரதிய ஜனதா போராடி வருவதும் ஒரே ஒரு விஷயத்துக்காகத்தான். மறத்தமிழனுக்கு இவையெல்லாம் இன்றளவும் வடக்கத்தி இயக்கங்களே. இந்தப் பிம்பத்தை உடைப்பதுதான் சவால். சுற்றிச் சுற்றி திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைத்து, அவர்களது பிரசார உத்திகளைத் தமதாக்கிக்கொண்டு தமிழ்நாடு காங்கிரஸ் இன்று ஓரளவுக்குத் தமிழகக் கட்சி போன்ற தொலைதூரச் சாயலைப் பெற்றிருப்பதை மறுக்க இயலாது. குமரி அனந்தன் போன்றோரின் நடைப் பயணங்கள் அல்ல; இளங்கோவன் வகையறாக்களின் தடாலடி ஸ்டேட்மெண்டுகளுக்கே இதில் முக்கிய இடம் என்பதையும் மறுக்க முடியாது.
தேசியக் கட்சிகளின் பொதுவான கொள்கைகள் பிராந்திய எல்லைகளைக் கடக்கும்போது சந்திக்க நேரும் இயல்பான விட்டுக்கொடுத்தல்களுக்கு இடமிருக்க வேண்டும். தொட்டதற்கெல்லாம் பெரிய ஜிக்களிடம் பர்மிஷன் கேட்டுக்கொண்டுதான் இங்கே அரிசிக்கே உலை வைப்பேன் என்பது போன்ற அபத்தம் வேறில்லை. தவிரவும் மாநிலத்தில் அறுபத்தி மூவர் மாதிரி நாலஞ்சு வரிசைக்குத் தலைவர்களே உட்கார்ந்திருந்தால், வாக்காளர்களை விடுங்கள்; தொண்டர்கள் யாருக்கு தண்டன் சமர்ப்பிப்பார்கள்?
அதிமுக என்றால் ஒரு ஜெயலலிதா. திமுக என்றால் ஒரு கலைஞர். பாமக என்றால் ஒரு அன்புமணி. அட மதிமுகவில் இருப்பதே ஒரே ஒருவர்தான் என்றாலும் அந்த ஒருவரை ஊருக்கே தெரியுமே? ஆனால் தேசியக் கட்சிகளில் உறுப்பினராகும்போதே தலைவராகும் எண்ணத்தோடுதான் எல்லோரும் போய்ச் சேருவார்கள் போலிருக்கிறது. மேலிடமும் சுழற்சி முறையில் பிராந்தியத் தலைவர்களை நியமித்து ஆடு வளர்ப்பது போல் கட்சி வளர்க்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.
தமிழகத்தில் பாரதிய ஜனதா என்ற கட்சிக்கு முதலில் வேண்டியது ஒரு முகம். வசீகர முகம். சுயமாக சிந்திக்கத் தெரிந்த, சிறப்பாகப் பேசத் தெரிந்த, மக்களோடு நெருங்கிப் பழகத் தெரிந்த, மக்களுக்காக உழைக்கத் திராணியுள்ள ஓர் ஒற்றைத் தலைமை. சந்தேகத்துக்கு இடமின்றி அனைவரும் ஏற்கக்கூடிய தலைமை. அது அமைந்துவிட்டால் மற்ற எதுவும் பெரிய பிரச்னையாக இராது.
ஏனெனில் வேட்பாளர்களின் முகமும் தரமும் பார்த்து ஓட்டுப் போடும் வழக்கம் துரதிருஷ்டவசமாகத் தமிழ்நாட்டில் இல்லை. தலைமை உவப்பானதாக இருக்கவேண்டும் என்பதுதான் ஒரே சட்டதிட்டம். தமிழ்நாட்டு மக்கள் இந்த விஷயத்தில் மாறமாட்டார்கள். தேசியக் கட்சிகள்தாம் தம்மை மாற்றிக்கொள்ள வேண்டும்.
Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
April 17, 2016
பொன்னான வாக்கு – 30
ஜெயலலிதாவின் வேட்பாளர் மாற்ற வைபவத்தை நக்கலடித்ததற்குக் கைமேல் பலன். இந்த வேகாத வெயில் காலத்தில் திமுகவினர் வேட்பாளர் மாற்றம் கோரி கல்யாண் ஜுவல்லர்ஸையே விஞ்சுமளவுக்குப் புரட்சிப் போராட்டங்களில் இறங்கிவிட்டார்கள். சரித்திரம் இதற்கு முன் இத்தனை உன்னதமான உட்கட்சி ஜனநாயகப் போராட்டங்களைக் கண்டிருக்கிறதா என்று தெரியவில்லை. எப்படியானாலும் வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசித் தினம் வரை திருப்திக்கும் அதிருப்திக்குமான துவந்த யுத்தம் தொடரத்தான் செய்யும்.
யாரைத் தேர்ந்தெடுப்பது என்பது எந்த ஒரு தேர்தலிலும் முதன்மை வினாவாக இருப்பது. இந்தத் தேர்தல் காட்டும் வித்தியாசம் என்னவென்றால், இந்த வினா வாக்காளர்களிடமிருந்து கட்சிக்காரர்களுக்கு இடம் பெயர்ந்திருப்பதுதான். திமுக அறிவித்த வேட்பாளர் பட்டியலில் பல பழைய அமைச்சர்களின் வாரிசுகள் இடம் பெற்றிருப்பதை முதலில் சுட்டிக்காட்டினார்கள். இதென்ன ப்ரைவேட் லிமிடெட் கம்பெனியின் பங்குகள் போன்ற சங்கதியா? ஒரு குறிப்பிட்ட உள்வட்டத்துக்குள்தான் அதிகார வாய்ப்பு சுற்றி வருமா?
புரட்சியின் முதல் குரல் அங்கே கேட்டது. வாரிசுகள் என்பதால் மட்டும் அவர்களது சேவை உதாசீனப்படுத்தப்படலாமா? தந்தை வழியில் அவர்களும் கட்சிக்கு உழைத்தவர்களே. தவிரவும் சீனியாரிடி,அதிகார மைய நேரடித் தொடர்பு இன்னபிற பிளகின்கள் இருக்கவே இருக்கின்றன. அட, தன் மகனை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கக்கூட விரும்பாத ஒரு உத்தமத் தலைவர், தாம் முதல்வராக இருந்த காலத்தில் அமைச்சர்களாக இருந்தவர்களின் வாரிசுகளைக் கரையேற்றவா மெனக்கெடுவார்?
வாதப் பிடிவாதங்களும் பிரதிவாத பயங்கரங்களும்.
கேள்விப்படவும் வாசித்து நமுட்டுச் சிரிப்பு சிரித்துக்கொள்ளவும் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் தமிழகத்தின் இரண்டு பிரதானக் கட்சிகளுக்குள்ளும் உள்ளுக்குள் இவ்வளவு ரத்தக்களறி இருக்கிறதென்பது ஓட்டுப் போடுகிற மகாஜனங்களுக்கு நிச்சயம் அதிர்ச்சியளிக்கவே செய்யும்.
விஜயகாந்துக்கு அரசியல் தெரியாது. வைகோவுக்கு கலிங்கப்பட்டியிலேயே வாக்காளர்கள் கிடையாது. திருமாவுக்கு தலித் ஓட்டுகள் மட்டும்தான்; அதிலும் ஒரு சாரார் அவர் பக்கம் இல்லை. கம்யூனிஸ்டுகளுக்கு வேட்பாளர்கள் கிடைப்பதே கஷ்டம். காங்கிரசுக்குத் தொண்டர்களே கிடையாது. பாஜகவுக்கு முகமே கிடையாது. அன்புமணிக்கு ஒரு சாதி ஓட்டு மட்டும்தான்…
இன்னும் அடுக்கலாம். ஆனால் முதன்மைக் கட்சிகளின் உளுத்துப்போன சுயரூபத்தைப் பார்க்கும்போது, இதெல்லாமே ஒன்றுமில்லையோ என்று தோன்றிவிடுகிறது.
செயல்படாத ஆட்சி என்றால் எப்படி இருக்கும் என்பதைக் கடந்த ஐந்தாண்டுக் காலத்தில் மாநிலம் திவ்யமாக தரிசித்திருக்கிறது. இலவச ஜிகினா அலங்காரங்களுக்குப் பின்னால் கிழிந்து தொங்கியது திரைச்சீலைகள் மட்டுமல்ல. அவற்றை விவரித்துக்கொண்டிருப்பதில் அர்த்தமும் இல்லை. ஒரு பெரும் மாற்றத்தை உத்தேசித்துத் தேர்தலை அணுகும் இயக்கங்கள் சொந்த லாப சுக சௌகரிய கிளுகிளுப்புகளில் கிறங்கிக் கிடக்க இதுவா தருணம்?
ஆட்சியமைக்கும் தகுதி இருந்தாலும், வாய்ப்பற்ற கட்சிகளிலும் கூட்டணிகளிலும் இத்தகு அதிகார யுத்தம் இல்லை என்பதைக் கவனியுங்கள். கிளம்பிவிட்ட மநகூ எக்ஸ்பிரசின் கட்டக்கடைசிக் கம்பார்ட்மெண்டில் ஓடி வந்து ஏறிக்கொண்ட வாசன் கட்சிக்குக் கூட வள்ளலாக அள்ளிக்கொடுக்க வழியிருக்கிறது அவர்களுக்கு. சாவகாசமாக அடுத்த வாரம் ஒரு நாலு கட்சி போய் நின்றால்கூட தலைக்கு நாலு எண்ணிப் போடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. அவர்களது பிரச்னையெல்லாம் வேட்பாளரைத் தேடிப்பிடிப்பது மட்டுமே.
இது எப்பேர்ப்பட்ட அவல நாடகம்! இந்த லட்சணத்தில் மாற்றத்தைக் குறித்து சிந்திப்பதில் என்ன பிரயோசனம்?
திமுக வேட்பாளர் அறிவிப்பின் விளைவாக உருவாகியிருக்கும் பூசல், சர்வ நிச்சயமாக ஆளுங்கட்சிக்குத்தான் சாதகம். ஆட்சியை மாற்றிப் பார்க்கலாமா என்று யோசிக்கத் தொடங்கியிருக்கும் சாமானியர்கள் இந்தப் பதவி வெறி புண்ணியசீலர்களின் நடவடிக்கைகளைக் கண்டு தலை தெரிக்க ஓடிவிடுவது நிச்சயம். எனக்குத் தெரிந்த ஒரு டீக்கடைக்காரர் நேற்று சொன்னார். ‘யார் வந்தாலும் சாப்பிடத்தான் போறாங்க. இந்தம்மா நாலஞ்சு பொருள நமக்குக் குடுத்துட்டாச்சும் சாப்பிடுது.’
அவர் குறிப்பிட்டது இலவசங்களை. விரும்பினாலும் விரும்பாது போனாலும் இன்று நம்மை ஆள்வது இலவசங்கள்தாம். இதன்மீதான அருவருப்புணர்வே மரத்துப் போகுமளவுக்கு நாம் மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கிறோம் என்பதை விழிப்புணர்வுடன் எண்ணிப் பார்க்கவேண்டிய நேரம் இது.
மூன்றாவது அணியில் இருக்கும் தலைவர்களில் விஜயகாந்தை சாய்ஸில் விட்டுவிடுவோம். ஆயிரம் விமரிசனங்கள் இருப்பினும் வைகோவும் திருமாவும் கட்டாயம் பொருட்படுத்தத் தகுந்தவர்கள். சூழ்நிலைக் கைதிகளாக அவர்கள் விஜயகாந்தின் தலைமையை ஏற்றிருப்பதைக் கூடப் பொறுக்கலாம். ஆனால் ஒருத்தர் கண்ணுக்கு விஜயகாந்த் அம்பேத்கராகத் தெரிவதும் இன்னொருத்தர் கண்ணுக்கு மூப்பனாராகத் தெரிவதும் வேறொருத்தர் கண்ணுக்கு காந்தியாகவும் கோட்சேவாகவும் தெரிவதும் பீதி கிளப்புவதாக அல்லவா உள்ளது? இவர்களுக்கே விஜயகாந்த், விஜயகாந்தாகத் தெரியவில்லை என்றால் இந்தக் கூட்டணி எப்படி மக்கள் கண்ணுக்குத் தெரியும்?
திமுகவின் உட்கட்சிப் பூசல் கவலைக்கு இடமளிக்கிறதென்றால் மூன்றாவது அணியின் ஒய்யாரக் கொண்டை சிரிப்பதற்கு மட்டுமே இடமளித்துக்கொண்டிருக்கிறது. மாற்றம் முன்னேற்றம் என்று ஒருவர் கதறிக்கொண்டிருக்கிறார். மாற்றம் ஏமாற்றமாகிவிடாதிருக்க, விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் இது.
0
நன்றி: தினமலர் 18/04/16
Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
April 14, 2016
பொன்னான வாக்கு – 29
1996ம் வருஷம். பொதுத்தேர்தல் களேபரத்தில் வடக்கத்தி மாநிலங்கள் அல்லோலகல்லோலப்பட்டுக்கொண்டிருந்தன. ஒரு நாலைந்து மாநிலங்களில் சுற்றுப் பயணம் செய்து தேர்தல் குறித்து எழுதுவதற்காகப் போயிருந்தேன். டெல்லியிலிருந்து பிகார். அங்கிருந்து மேற்கு வங்காளம். அப்படியே அசாம். திரும்பும்போது உத்தர பிரதேசம். அப்போது யு.என்.ஐ. செய்தி நிறுவனத்தின் துணைத் தலைவராக இருந்த கணபதி, லக்னோ வந்திருந்தார். ‘நாளைக்கு ஹரோரா தொகுதில மாயாவதி பிரசாரம் பண்ண வராங்க. ஒரு நாள் கூடவே சுத்தலாம் வரீங்களா?’ என்று கேட்டார். அன்றே புறப்பட்டோம்.
மறுநாள் காலை மாயாவதியோடு விடிந்தது. ஒரு ஓட்டை ஜீப்பில்தான் அவர் வந்தார். பிரதான சாலைகளில் ஜீப்பில் நின்றபடியே பேசினார். சட்டென்று முடிவு செய்து ஏதேனுமொரு குறுக்குச் சந்தில் இறங்கி நடக்க ஆரம்பித்துவிடுவார். என்னவொரு வேகம். மாயாவதியின் நடை வேகத்துக்கு என்னைப் போன்ற ஒரு அகண்ட சரீரி ஈடுகொடுக்கவே முடியாது என்பது புரிந்தது. இங்கே நாலு வீடுகள், அங்கே நாலு கடைகள், மரத்தடியில் சாய் குடித்தபடி கொஞ்சம் நலன் விசாரிப்புகள், மறக்காமல் ஓட்டுப் போடச் சொல்லிப் புன்னகையோடு ஒரு வேண்டுதல்.
மீண்டும் ஜீப்பில் ஏறி இரண்டு சாலைகள். திரும்பவும் ஒரு சிறு நடைப் பயணம். அன்றைய ஒரு நாள் பிரசாரத்தில் அவர் சுமார் நூறு பேருடன் தனிப்பட்ட முறையில் பேசினார் என்பதைக் கவனித்தேன். எப்படியும் நடை மட்டும் ஏழெட்டு கிலோ மீட்டர்கள் இருக்கும். அதிரடியெல்லாம் அசெம்ப்ளியில்தான். மக்களிடம் பேசும்போது பாசத்துக்குரிய பெஹன்ஜி ஆகிவிடுவார். வீட்ல இன்னிக்கி என்ன சமையல் என்று உரிமையோடு விசாரித்து, ஓரிரு இடங்களில் தண்ணீர் கேட்டு வாங்கிக் குடித்து, ஒரு வீட்டு வாசலில் கால் நீட்டி உட்கார்ந்தே விட்டார். ‘தைலம் இருக்கா?’ என்று கேட்டு வாங்கி காலில் தேய்த்துக்கொண்டு, ‘செம வலி’ என்றபடியே துப்பட்டாவால் முகத்தைத் துடைத்தபடி எழுந்து அடுத்த வீட்டுக்குப் போனார். எனக்கும்தான் கூட நடந்து கால் வலித்தது. ஆனால் யாரிடம் போய்த் தைலம் கேட்பது?
நேற்றைக்கு ஜெயலலிதாவின் தேர்தல் சுற்றுப் பயணத் திட்டத்தைப் படித்துக்கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நினைவுக்கு வந்துவிட்டது. ஹெலிகாப்டர் பயணங்கள். ஆங்காங்கே ஹெலிபேட் ஏற்பாடுகள். குளுகுளு மேடை வசதிகள். கூட்ட நெரிசலோ, வெயில் மயக்கமோ. கூட்டத்துக்கு வந்தவர்களில் யாராவது இறந்தால் இரங்கலெல்லாம் இரண்டாம் பட்சம். தேர்தலுக்குப் பிறகு இழப்பீட்டுத் தொகை என்ற அறிவிப்பு ஹெலிகாப்டர் ஜன்னல் வழியே விசிறியடிக்கப்படும்.
கடந்த ஐந்தாண்டுகளில் ஒரு முறையாவது ஜெயலலிதா மக்களை நேரில் சந்தித்திருக்கிறாரா என்று யோசித்துப் பார்க்கிறேன். ஒரு பத்திரிகை பேட்டி கிடையாது. தொலைக்காட்சிப் பேட்டி கிடையாது. பத்திரிகையாளர் சந்திப்பு கிடையாது. பொதுக்கூட்டம் கிடையாது. வானொலிப் பேச்சு கிடையாது. வெறும் அறிக்கைகள். அவர் புஷ்பக விமானத்திலேயே வேண்டுமானாலும் பிரசாரக் கூட்டங்களுக்குப் போகட்டும். கொண்டையுள்ள சீமாட்டிகள் அள்ளி முடிவதில் என்ன பிரச்னை? ஆனால் மக்களைவிட்டுப் பல காதம் விலகி கார்ப்பரேட் கர்மயோகி போலப் பேசுவதைக் கொஞ்சம் மாற்றிப் பார்க்கலாம்.
உடுமலை சம்பவம் நடந்தபோது முதல்வர் என்ன சொல்லப் போகிறார் என்று மாநிலமே எதிர்பார்த்து ஒரு வாரம் வரைக்கும் காத்திருந்ததை மறக்க முடியாது. நாதியற்ற சமூகத்தின் நலனுக்காக உழைக்கும் ஒப்பற்ற தலைவருக்கும் சாதி ஓட்டுக் கணக்குகள்தாம் அப்போது முக்கியமாக இருந்தன.
மாதாமாதம் மளிகை சாமான் வாங்குவது போலப் பக்கங்கள் நிரம்பி, புது பாஸ்போர்ட் புத்தகம் வாங்கித் தள்ளிக் கொண்டிருக்கும் உலகம் சுற்றும் வாலிபனே சென்னை பெருமழைக் காலத்தில் ஒரு ரவுண்டு வந்து பார்த்துவிட்டுப் போனார். ஒரு மாநில முதல்வர் வீதி இறங்கி வந்திருக்க வேண்டாமா?
இதயங்களை வெல்ல இலவச அறிவிப்புகள் போதும் என்ற முடிவுக்கு அவர் வந்துவிட்டாரோ என்று தோன்றுகிறது. குண்டாகத் தேர்தல் அறிக்கை வெளியிட்டு, நூற்றுக்கணக்கில் வாக்குறுதிகளை வழங்கி, ஒரு சிலவற்றை நிறைவேற்றினாலே ஒப்பற்ற தலைவராகிவிட முடிகிற காலம். உங்களை விட்டால் எனக்கு யார் இருக்கிறார்கள் என்று ஜெயலலிதா கேட்கலாம். அது, இதுவே என் கடைசித் தேர்தல் என்று கருணாநிதி சொல்வதற்கு நிகரானது.
நமது தலைவர்கள் சொற்களால் சீரியல் பல்பு போடுவதை விடுத்து ஆன்மாவைத் தொடும்படியாக ஒரு அகல் விளக்கு ஏற்றப் பார்க்கலாம். இந்த மாநிலம் இவர்களுக்கு எவ்வளவோ செய்திருக்கிறது. இந்த முறையாவது எங்களுக்கு நீங்கள் திருப்பிச் செய்யுங்கள் என்று வாக்காளர்கள் கேட்டுப் பார்க்கலாம்.
அழுத பிள்ளைக்குத்தான் ஆவின் பாலாவது கிடைக்கும்.
0
நன்றி: தினமலர் 15/04/16
Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
April 13, 2016
பொன்னான வாக்கு – 28
இந்த வாரம் முழுக்க அதிமுகவை மட்டுமே அலசிக் காயப்போடவேண்டும் என்று நினைத்துக்கொண்டுதான் ஆரம்பித்தேன். அது இப்படி மூன்றாம் நாளே தடைபட்டு நிற்க நான் காரணமல்ல. இந்த வாரமே தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்ட திமுகதான் காரணம்.
கலைஞர் ஜோராக கட்டிங், ஷேவிங்கெல்லாம் பண்ணிக்கொண்டு வந்து ஃப்ரெஷ்ஷாக அறிக்கையை வாசித்தபோது எல்லாமே ரொம்பப் பிரமாதமாகத் தோன்றியது. என்னதான் புராதனமான மாநில சுயாட்சி, ஈழத் தமிழர் நல்வாழ்வு, கச்சத்தீவை மீட்போம், மேலவை அமைப்போம், லோக் ஆயுக்தா கொண்டு வருவோம் பஜனை கீதங்கள் இருந்தாலும் பல உருப்படியான உருப்படிகள் இருப்பதாகவே பட்டது. ஆனால் கொஞ்சம் நிதானமாக உட்கார்ந்து படித்துப் பார்த்தால் பல விஷயங்கள் இடிப்பதுபோலத் தோன்றியது.
இந்தத் தேர்தல் அறிக்கையில் இலவச அறிவிப்புகள் கிடையாது என்பது திமுகவின் முக்கிய நிலைபாடாக நிறுவப்பட்டிருக்கிறது. கலைஞர் வாஷிங் மெஷின் தரப்போகிறார், வீட்டுக்கொரு ஏர் கண்டிஷனர் தரப் போகிறார் என்றெல்லாம் நாட்டு மக்கள் ஆளாளுக்குப் பீதி கிளப்பி விட்டுக்கொண்டிருந்தார்கள். நல்லவேளை அதெல்லாம் இல்லை. ஆனால் இந்த இலவச அறிவிப்புகளுக்கு பதிலாகச் சொல்லப் பட்டிருக்கும் சலுகை அறிவிப்புகள் மிகவும் நெருடுகின்றன.
அதென்ன சொல்லி வைத்த மாதிரி அத்தனை பேரும் விவசாயக் கடன்களை ரத்து செய்வதில் அத்தனை ஆர்வம் காட்டுகிறார்கள்? அப்புறம் அதற்குக் கடன் என்று எதற்குப் பேர் கொடுப்பானேன்? ஒரு வறட்சிக் காலம் அல்லது பெருமழைக் காலத்தில் கடன் தள்ளுபடி என்றால் சரி. டீஃபால்ட்டாக விவசாயிகளின் ஓட்டு வேண்டுமென்றால் கடன் தள்ளுபடி என்பது எந்த ஊர் நியாயமென்று தெரியவில்லை.
அதே மாதிரிதான் இலவச மின்சார அறிவிப்புகள். உண்மையிலேயே மின்மிகை மாநிலம்தான் என்றால் மின்சாரக் கட்டணம் இப்படி உச்சாணிக்கொம்பில் போய் உட்கார்ந்திருக்காது. ஒரு பக்கம் மின்வாரியம் நாக்கு தள்ளிக்கொண்டிருக்க, மறுபக்கம் இலவச மின்சார அறிவிப்புகள். மாறாக மின் உற்பத்திப் பெருக்கத்துக்கு, சீரான வினியோகத்துக்கு உருப்படியாக என்ன செய்யலாம் என்று யோசித்திருக்கலாம். சும்மா போகிற போக்கில் ‘போர்க்கால அடிப்படையில் மின் உற்பத்திப் பெருக்க நடவடிக்கைகள்’ என்று சொல்லிவைப்பதில் என்ன பயன்?
பால் விலைக் குறைப்பு. அதுவும் ஏழு ரூபாய். இதனால் ஆவினுக்கு எத்தனை ஆயிரம் கோடி நிதிச்சுமை ஏற்படும் என்று சரியாகத் தெரியவில்லை. என்னவாக இருந்தாலும் அவர்கள் அதைக் கொள்முதல் விலையில்தான் காட்டுவார்கள். ஆவினுக்கு விற்றால் விலை கம்மி என்ற நிலை உருவானால் உற்பத்தியாளர்கள் கூசாமல் மொத்தமாகத் தூக்கித் தனியாருக்கு ஊற்றிவிட்டுப் போவதைத் தவிர வேறு வழியே இல்லாது போகும். இந்தச் சூழ்நிலையில், ‘கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்யும் பால் முழுவதையும் ஆவின் நிறுவனமே கொள்முதல் செய்ய ஆவன செய்யப்படும்’ என்றால் அது என்ன ஆவன? புரியவில்லை.
இந்தத் தேர்தல் அறிக்கையிலேயே மிகுந்த அபாயகரமான சங்கதியாக எனக்குத் தோன்றியது, அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் மூன்று லட்சம் இடங்களை நிரப்புவது என்பது. இருக்கிற ஊழியர்களை வைத்துக்கொண்டு அரசு என்ன சாதித்துக்கொண்டிருக்கிறது என்பது ஒரு புறமிருக்க, இந்த மூன்று லட்சம் காலியிடங்கள் ஏன் இதுநாள் வரை நிரப்பப்படவில்லை என்ற கேள்வியும் எழுகிறது. ஒரு பக்கம் இந்த மூன்று லட்ச அறிவிப்பு என்றால் மறுபக்கம் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு மாதாந்தர உதவித் தொகை அறிவிப்பு. மூன்று லட்சம் இடங்கள் நிரப்பப்படும் வரை மாதாந்தர உதவியா? அல்லது மூன்று லட்சத்தி ஒன்றாவது நபரிலிருந்து மாதாந்தர உதவியா? ஒழியட்டும், இந்த மூன்று லட்சம் புதிய பதவியாளர்களுக்கு சம்பளம் என்ன? அந்தத் தொகையை எங்கிருந்து ‘உற்பத்தி செய்ய’ப் போகிறார்கள்? டாஸ்மாக்கை வேறு மூடிவிடப் போகிறார்கள். ஈஸ்வரோ ரக்ஷது.
மாணவர்களுக்கு இலவச லேப்டாப் அல்லது டேப்லட். பத்தாத குறைக்கு இலவச த்ரீ ஜி, ஃபோர் ஜி சேவைகள். என்னத்துக்கு? பைரேட் பேவிலிருந்தும் தமிழ் ராக்கர்களிடமிருந்தும் தரமான புதிய படங்களைத் தரவிறக்கிப் பார்த்து ரசிக்கவா? ஒரு பேச்சுக்குக் கேட்கிறேன். பத்து ஜிபி டேட்டாவின் விலை என்ன? எத்தனை லட்சம் மாணவர்களுக்கு இதனை எத்தனை காலத்துக்கு இலவசமாகக் கொடுக்கப் போகிறார்கள்? இந்தக் காசைத் தூக்கி அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதற்குப் போட்டாலாவது உபயோகம். அட எத்தனை பள்ளிகளில் கழிப்பிடங்கள் ஒழுங்காக இருக்கின்றன? வகுப்பறைகள், மேசை நாற்காலிகள், ஆய்வுக்கூடங்களைச் செப்பனிட என்ன திட்டம் கைவசம் உள்ளது?
திமுகவின் தேர்தல் அறிக்கையில் ரசிக்கத்தக்க அம்சமாக எனக்குத் தோன்றியது, தற்போதைய ஜெயலலிதா அரசாங்கம் கொண்டுவந்த சில நல்ல திட்டங்களை இழுத்து மூடி மங்களம் பாடாதிருப்பதே. மற்றபடி இன்னொரு அறிக்கை என்பதைத் தாண்டி சிலாகிக்கத் தோன்றவில்லை.
0
நன்றி: தினமலர் 14/04/16
Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
April 12, 2016
பொன்னான வாக்கு – 27
இந்த மது விலக்கு மாதிரி ஒரு பேஜார் பிடித்த சமாசாரம் வேறு கிடையாது. விலக்கினால் வருமானம் படுக்கும். இருப்பது ஓட்டு அரசியலை பாதிக்கும்.
போன பொதுத்தேர்தல் வரையிலுமேகூட இந்த விவகாரம் இத்தனை பிரமாதமாகப் பேசப்பட்டதில்லை. என்றைக்கோ ராஜாஜி கொண்டுவந்தார்; கருணாநிதி மங்களம் பாடினார் என்று ஒரு கதை சொல்லுவார்களே தவிர, சமகாலத் தலைமுறைக்கு மதுவிலக்கு என்றால் என்னவென்று தெரிந்திருக்க நியாயமில்லை.
முன்னொரு காலத்தில் கள்ளுக்கடைகள் இருந்தன. Arakk Shop அல்லது Araak Shop என்று கட்டாய ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோடாவது ஆங்கிலத்தில் போர்டு வைத்து சாராயக்கடைகள் இருந்தன. அது ஏழைகளின் தாகத்துக்கு. நிதி மிகுந்து பொற்குவை தரவல்லவர்களுக்கு ஒயின் ஷாப்புகளும் பார்களும் இருந்தன.
மது விற்பனையை இனி அரசே செய்யும் என்று ஜெயலலிதா அறிவித்து டாஸ்மாக் கடைகள் வீதிக்கொன்றாக முளைத்த சமயத்தில் சாராயக் கடைகள் ஒழிக்கப்பட்டன. கள் இறக்கும் தொழில் தடை செய்யப்பட்டது. ‘தேசநலன் கருதி’ தமிழகத்தின் இரு பிரதானக் கட்சிகளைச் சார்ந்தவர்களே இந்தக் கடைகளுக்கு மது வகைகளை உற்பத்தி செய்து அளித்து வந்தார்கள்.
தமிழகத்தில் கள்ளச் சாராய இறப்புகளின் எண்ணிக்கை குறைந்தது என்பது தவிர டாஸ்மாக்கின் வரவு குடிகாரர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியிருப்பதை மறுக்க இயலாது. ஒரு ரகசிய அல்லது மறைமுகச் செயல்பாடாக மட்டுமே அதற்கு முன் இருந்து வந்த குடிப் பழக்கம், டாஸ்மாக்கின் வரவுக்குப் பின் வீர சுதந்தரமடைந்தது. வீர சுதந்தரம் வேண்டி நின்றார் பின்னர் வேறெதும் கொள்வாரோ? கண்டிப்பாக மாட்டார்.
இது ஜெயலலிதாவுக்குத் தெரியாதா? இல்லை கருணாநிதிக்குத்தான் தெரியாதா? அவர் என்னடாவென்றால் படிப்படியாக மது விலக்கு என்கிறார். இவர் என்னடாவென்றால் முதலில் டாஸ்மாக்கை இழுத்து மூடிவிட்டு, பிறகு மது விலக்கை அமல்படுத்தப் புதிய சட்டம் என்கிறார். இந்தப் பத்தியில் நான் முன்பே எழுதியிருந்தது போல, டாஸ்மாக் மூடு விழா என்பது நயந்தாரா அல்லது ஹன்சிகா ஒயின்ஸ் திறப்பு விழாதான். ஆட்சிக்கு வந்ததும் அதைச் செய்துவிட்டு அஞ்சாவது வருஷக் கடைசியில் மது விலக்கு கொண்டு வரலாம் என்று நினைத்தால் அதன்பேர் போங்காட்டம்.
இது ஒரு பக்கம் இருக்க, ஜெயலலிதா சொல்லியிருக்கும் ‘படிப்படியாக மது விலக்கு’த் திட்டம் எந்தளவுக்கு வேலைக்கு ஆகும் என்று தெரியவில்லை. மாதம் ஒரு மாவட்டமாக மது விலக்கு அமல்படுத்தப்படும் என்று சொன்னால் சரி. பார்கள் முதலில் மூடப்படும், எலைட் ஷாப்புகள் அப்புறம், அதன்பின் அழுக்கு டாஸ்மாக் கடைகள் என்று மூன்று மாதங்களுக்கு ஒரு ஸ்டெப் என்றாலும் சரி. மாறாக, கடைகளின் வேலை நேரம் படிப்படியாகக் குறைக்கப்படும், பிறகு கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்பது ஐந்தாண்டல்ல; ஐம்பதாண்டுச் செயல்திட்டம் மாதிரி தெரிகிறது.
இதனை எழுதிக்கொண்டிருக்கும் நேரத்தில் என் நண்பரும், விசுவாசக் குடிமகனுமான ஒரு பிரகஸ்பதி தற்செயலாக போனில் அழைத்தார். பேச்சுவாக்கில் படிப்படியாக மது விலக்கு என்பதைப் பற்றி அவரிடம் நான் சொல்லப் போக, ‘அது ஏற்கெனவே ஆரம்பிச்சிருச்சே சார்’ என்றார்.
எனக்குத் தூக்கிவாரிப் போட்டுவிட்டது. நியூஸ் பேப்பர்காரர்களும் காட்சி ஊடக மகாராஜாக்களும் சதி செய்து அரசின் ஒரு அசகாயத் திட்டத்தைத் திட்டமிட்டு மறைத்துவிட்டார்களா என்ன?
‘அட போங்க சார். உங்களுக்கு விவரமே பத்தாது. படிப்படியா மது விலக்குன்னா என்ன தெரியுமா? லாஸ்ட் ஆறு மாசமா எந்த கடையிலயும் குவார்ட்டரே கிடையாது. ஹாஃப் இருக்கு, ஃபுல் இருக்கு; வேணுன்னா வாங்கிக்க, இல்லன்னா நடையக் கட்டுன்றான்’ என்றார் அந்த நண்பர்.
ஓ! குவார்ட்டருக்கு மட்டும் தடை என்பதுதான் படிப்படிப்படியின் முதல் படியா?
‘இப்ப நெலவரம் இன்னும் மோசம் சார். நெறைய கடைங்கள்ள ஹாஃப் கூட கிடைக்கமாட்டேங்குது. ஃபுல்லு மட்டும்தான் இருக்குதுன்றான் பேமானி. அதுவும் எம்.ஆர்.பிக்குமேல இவனுக்கு இருவது ரூவா தண்டம்வேற அழணும். குடுக்க மாட்டேன்னா சரக்கு கிடையாதுன்றான் சார். பாண்டிச்சேரில ஐநூறு ரூவாய்க்கு விக்கற சரக்க இவன் எழுநூத்தம்பதுக்குக் கூசாம விக்கறான் சார். பத்தாத குறைக்கு இருவது ரூவா கமிசன்வேற.’ நண்பர் மிகவும் வருத்தப்பட்டு ஒரு பாட்டம் புலம்பித் தீர்த்து போனை வைத்துவிட்டார்.
குவார்ட்டர் குவார்ட்டராகவும், ஹாஃப் ஹாஃபாகவும் சரக்கு விற்று சம்பாதிப்பது போதவில்லை போலிருக்கிறது. வாங்கினால் ஃபுல். இல்லையேல் செல். எப்பேர்ப்பட்ட கொள்கை!
விரும்பியோ விரும்பாமலோ இந்தத் தேர்தலின் முடிவுகளை மது விலக்கு அறிவிப்புகளே தீர்மானிக்கும் என்று கட்சிகள் நம்பத் தொடங்கியிருப்பது ஒரு விதத்தில் நல்லதே. செய்து காட்டுவார்களா என்பது ஒரு புறமிருக்க, இது தமிழகத்தில் மீண்டும் கள்ளச் சாராய நீரோட்டம் அல்லது தேரோட்டத்துக்கு இடம் தந்துவிடாதிருக்க வேண்டும் என்பதே அனைத்திலும் இன்றியமையாதது.
0
நன்றி: தினமலர் 13/04/16
Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
April 10, 2016
பொன்னான வாக்கு – 26
குப்புசாமி குப்புசாமி என்று ஒரு பிரகஸ்பதி இருந்தார். அவருக்கு செஞ்சுலச்சுமி என்றொரு புத்திரி. இந்த செஞ்சுலச்சுமி ஒரு அதிரூப அழகு சுந்தரி. பிராந்தியத்தில் அவளைப் பார்த்து வழியாத வயசுப் பையன்களே கிடையாது. ஆனால் செஞ்சுலச்சுமி யாருக்காவது மசிவாளா என்றால் மாட்டாள்! நூற்றுக் கணக்கான காதல் கடுதாசிகள், ஆயிரக்கணக்கான குறுந்தகவல் கும்மியடிப்புகள், கணக்கு வழக்கே இல்லாத நேரடி அப்ளிகேஷன்கள்.
ம்ஹும். செஞ்சுலச்சுமிக்கு எந்தப் பயலையும் பிடிக்கவில்லை. ஏனென்றால் செஞ்சுலச்சுமி வெறும் அழகி மட்டுமல்ல. கொஞ்சம் வெல்லம் போட்ட அழகி. அதாவது அவள் படித்தவள். தவிரவும் நிறைய சொத்துபத்து. தன் தரத்துக்கும் தகுதிக்கும் ஏற்ற மாப்பிள்ளையாகப்பட்டவன் தன்னைப் போல் பேரழகனாக, தன்னைப் போல் பெரும் படிப்பாளியாக, தன்னைப் போலவே சுக சௌகரியக் குறைச்சலில்லாதவனாக இருக்கவேண்டும் என்று அவள் ஆசைப்பட்டாள்.
யார் தப்பு சொல்ல முடியும்? சரி உனக்கு நானே ஒரு பிரமாதமான மாப்பிள்ளை பார்க்கிறேன் என்று குப்புசாமி தந்தைக்கான கடமையைச் செவ்வனே ஆற்றிவிடும் பொருட்டு, வரிந்துகட்டிக்கொண்டு கிளம்பினார்.
முதல் மாப்பிள்ளையாகப்பட்டவன், ஒரு சுப முகூர்த்த நாளில் பெண் பார்க்க வந்தான். செஞ்சுலச்சுமி அவனைத் தனியே அழைத்துச் சென்று சிறிது நேரம் பேசிவிட்டு, அப்பாவிடம் வந்து பையன் தேறமாட்டான் என்று சொல்லிவிட்டாள். ‘ஏம்மா?’ என்று அவர் பதற, ‘இவன் படிச்சவந்தான். ஆனா அப்பப்ப நிறைய அரியர் வெச்சி கம்ப்ளீட் பண்ணியிருக்காம்ப்பா. வேஸ்ட்’
சரி ஒழியட்டும் என்று குப்புசாமி அடுத்த மாப்பிள்ளையைத் தேடிப் பிடித்தார். அரியர் வைக்காமல் படித்து, பாஸ் செய்த மாப்பிள்ளை. இவனுக்கும் செஞ்சுலச்சுமி காப்பி கொடுத்து தனியே கூட்டிப் போய் சில கேள்விகள் கேட்டாள். திரும்பி வந்து சொன்னாள், ‘ம்ஹும். இவனும் தேறமாட்டான். வெறும் பார்டர் பாஸ் கேஸ். நான் எதிர்பாக்கறது ஒரு டிஸ்டிங்ஷன் மாப்பிள்ளை.’
மூன்றாமவன் வந்தான். படிப்பெல்லாம் சரிதான், ஆனால் மூக்கு முள்ளம்பன்றி மூக்கு மாதிரி இருக்கிறது என்றாள். அடுத்தவனுக்கு ஆதார் கார்டே இல்லை என்று ரிஜக்ட் செய்தாள். ஐந்தாவது ஆசாமியின் அப்பா அம்மா சரியில்லை என்றாள். ஆறாவதாக வந்தவன் சரியான பட்டிக்காடு. அடுத்தவன் ரசனை கெட்டவன். அதற்கடுத்தவன் ஊதாரி. தத்தி, தண்டச்சோறு, உருப்படாதவன், உதவாக்கரை என்று அவள் ஒவ்வொருமுறை நிராகரிக்கவும் ஒரு காரணம் எப்படியோ கிடைத்துக்கொண்டே இருந்தது.
குப்புசாமி யோசித்தார். ஒரு முடிவோடு கிளம்பி ஒருவாரம் வெளியூருக்குப் போனார். இந்த முறை தப்பு நடக்காது; இந்தப் பையனைப் பார், உனக்குக் கண்டிப்பாகப் பிடிக்கும் என்று புதியதொரு பிரகஸ்பதியை அழைத்து வந்து எதிரில் நிறுத்தினார்.
வழக்கம்போல் உத்தம புத்திரி அவனையும் தனியறைக்கு அழைத்துச் சென்று வினாக்கணை தொடுக்க ஆரம்பித்தாள். பத்து நிமிடம். அரை மணி. ஒரு மணி. அறைக்கதவு திறந்து செஞ்சுலச்சுமி வெளீயே வந்தபோது வழக்கமே இல்லாத வழக்கமாக அவள் முகத்தில் வெட்கம் மாதிரி என்னமோ ஒன்று ஒட்டிக்கொண்டிருந்ததைக் குப்புசாமி கண்டார்.
‘என்னம்மா ஆச்சு? மாப்ள ஓகேவா?’
‘பிடிச்சிருக்குப்பா. இவர் கரெக்டா இருப்பார்னு தோணுது’
‘நம்பவே முடியல குப்புசாமி. எல்லா பையன்கள்கிட்டயும் எதோ ஒரு குறைய கண்டுபிடிச்ச உம்பொண்ணு எப்படி இவன மட்டும் செலக்ட் பண்ணா?’ என்று குப்புசாமியின் நண்பர் ஆச்சரியப்பட்டுக் கேட்டார்.
‘சிம்பிள். இவனுக்கு ஆல்ரெடி ஒரு கல்யாணமாகி டைவர்ஸ் ஆன அனுபவம் இருக்கு’ என்றார் குப்புசாமி.
நடக்கிற கூத்துகளையெல்லாம் பார்த்தால், செஞ்சுலச்சுமி மாப்பிள்ளை பிடித்த கதை மாதிரிதான் தெரிகிறது, ஜெயலலிதா வேட்பாளர்களை மாற்றுகிற சங்கதியும். நாளது தேதி வரை அறிவிக்கப்பட்ட அதிமுக வேட்பாளர்களில் பத்திருபது பேர் மாற்றப்பட்டிருப்பார்களா? ஆனால் மிச்சமிருக்கும் அத்தனை பேருக்கும் அடி வயிற்றில் பயப்பிராந்தி பிடித்திருக்கும்.
எனக்கென்னமோ கூடிய சீக்கிரம் 234 தொகுதிகளிலும் ஜெயலலிதாவே நிற்கிறார் என்று கொட்டையெழுத்துத் தலைப்புச் செய்தி வந்துவிடும் என்று தோன்றுகிறது. எம்பெருமான் தான் காப்பாற்ற வேண்டும்.
ஆனால் ஒன்று புரிகிறது. யாருக்கும் தராதரம் பார்த்து சீட் கொடுக்கப்படுவதில்லை. தேர்ந்தெடுக்கும் இடத்தில் இருக்கிறவர்களுக்குத் தங்களுடைய ஆட்களையே அறிமுகம் இருப்பதில்லை. அந்த நேர்காணல் ஜமாபந்தியில் வேறு அப்படி என்னத்தைத்தான் கேட்டுத் தொலைக்கிறார்கள்? ஜாதி, சொத்து கணக்கெடுப்போடு சரியா?
இந்த நிமிஷம் உங்களுக்கு எந்த அதிமுக வேட்பாளரைப் பிடிக்கவில்லையென்றாலும் ஒரு கடுதாசி போட்டால் போதும். மறுகணமே மாற்று வேட்பாளர். என்ன ஒரு உயர்தர ஜனநாயகம்! இந்த ஜனநாயக உணர்ச்சியெல்லாமும் தேர்தல் நேரத்தில்தான் பீறிட ஆரம்பிக்கிறது. ஒரு சௌகரியத்துக்கு ஜனநாயக உணர்ச்சி என்கிறோம். உண்மையில் இதன் பெயர் பய உணர்ச்சி. கொஞ்சம் விரிவாகவே அலசவேண்டிய சங்கதி இது. செய்வோம்.
ஆனால், அவசரப்பட்டு அதற்குள் யாரும் ஆர்.கே.நகர் தொகுதிக்கு மாற்று வேட்பாளர் கேட்டு விடாதிருக்கவேண்டும்.
0
நன்றி: தினமலர் 11/04/16
Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
April 8, 2016
பொன்னான வாக்கு – 25
பேச்சு ஒரு பேஜார் பிடித்த கலை. எப்போது மாலை சூடும், எப்போது காலை வாரும் என்று சொல்லவே முடியாது. உட்கார்ந்து எழுத ஆரம்பித்தால் ஓராயிரம் பக்கங்கள் வரைகூடத் தங்கு தடையில்லாமல் எழுதிவிட முடியும். ஆனால் ஒரு சொற்பொழிவின் முதல் வரி சொதப்பினால் முழுப் பேச்சும் நாராசம்.
பள்ளி நாள்களில் சுந்தரமூர்த்தி என்று எனக்கு நண்பனொருவன் இருந்தான். இன்றைய கழகப் பேச்சாளர்களெல்லாம் அவன் தரத்துக்குக் கிட்டேகூட வரமுடியாது. ஒரு வணக்கம் போட்டு ஆரம்பித்தால் கருங்கல் ஜல்லி லோடு கவிழ்த்துவிட்ட மாதிரி தடதடதடதடவெனக் கொட்டித் தீர்த்துவிடுவான். உட்கார்ந்து எழுதி உருப்போடுவானா, இல்லை மண்டபத்தில் யாரையாவது பிடித்து எழுதி வாங்கித் தின்று ஜெரிப்பானா, உண்மையிலேயே அவனது சிந்தனைக் கொதிநீர் ஊற்றில் அத்தனை வீரியம் இருந்ததா தெரியாது. ஆனால் பயல் ஒரு பின்னியெடுத்தல் ஸ்பெஷலிஸ்ட்.
அப்பேர்ப்பட்ட பேச்சாளன் ஒரு சமயம் வேறொரு பள்ளியில் நடைபெற்ற பேச்சுப் போட்டிக்குப் போயிருந்தபோது ஓர் அசம்பாவிதம் நிகழ்ந்தது. ஆதிசிவன் பெற்ற தமிழ், அகத்தியன் வளர்த்த தமிழ், தொல்காப்பியன் மனதில் தொட்டில் கட்டி ஆடிய தமிழ், சங்கப் பலகையிலே தவழ்ந்த தமிழ், காவியச் சோலையிலே உலவிய தமிழ் என்று தமிழ்த் தாயின் அருமை பெருமைகளை அடுக்கிக்கொண்டே போனபோது சட்டென்று ஒரு கணம் கரண்ட் போனது மாதிரி நின்றுவிட்டான். என்ன ஆச்சு என்ன ஆச்சு என்று அழைத்துச் சென்றிருந்த பெருமாள் வாத்தியார் தொலைவில் நின்று பதறிக்கொண்டிருந்தார். ஒரு இன்ஸ்டண்ட் அபிநய சரஸ்வதியாகி அவர் என்னென்னவோ சமிக்ஞைகள் செய்து காட்டியும் சுந்தர மூர்த்தி எக்ஸ்பிரஸ் கிளம்பியபாடில்லை.
நடுவர்கள் அரை நிமிடம் பொறுத்துப் பார்த்துவிட்டு, ‘தம்பி நீ போய் ஒக்காந்துக்கப்பா’ என்று சொல்லிவிட்டார்கள். என்னடா ஆச்சு என்னடா ஆச்சு என்று அதன்பிறகு எத்தனையோ பேர் எத்தனையோ முறை கேட்டும் அவனிடமிருந்து வந்த ஒரே பதில், ‘தெரியலடா.’
பாதியில் இங்ஙனம் ஃப்யூஸ் பிடுங்கப்பட்டால்கூடப் பிரச்னையில்லை. வோல்ட்டேஜ் ஃப்ளக்சுவேஷன் வந்து அதி பிரகாச நிலையை அடைவதுதான் அபாயகரம். என்ன பேசுகிறோம் என்பதே தெரியாமல் உளறிக் கொட்டிக் கிளறி மூடினால் எல்லாம் போச்சு.
ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. மகாமக அசம்பாவிதம் நடந்து பல வருஷங்களுக்குப் பிறகு திமுகவின் வெற்றிகொண்டான் அந்தச் சம்பவத்தை நினைவுகூர்ந்து ஜெயலலிதாவை விமரிசித்துக்கொண்டிருக்கிறார். குளிப்பதற்கு போஸ்டர் ஒட்டிய ஒரே கட்சி அதிமுக என்று சொன்னார். அதோடு விட்டிருக்கலாம். தறிகெட்டுப் பறக்கும் சொற்குதிரைக்குப் பாதியில் கடிவாளம் போடும் வழக்கமெல்லாம் அவருக்குக் கிடையாது. புரட்சித் தலைவி குளிக்க வருகிறார், அனைவரும் வாரீர்! ஆதரவு தாரீர்! என்று இல்லாத போஸ்டர் வாசகத்தைத் தன் சொல்லில் தோரணம் கட்டிக் காட்டப்போக, மேடை நாகரிகம் அந்த மேடையிலேயே விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டது.
இதைக் காட்டிலும் கேவலமாகப் பேசப்பட்டதில்லையா என்று நீங்கள் கேட்கலாம். பேசுவது யார் என்பது முக்கியம். யாரைப் பற்றிப் பேசுகிறோமென்பது அதனினும் முக்கியம்.
வெற்றி கொண்டானாவது வெறும் பேச்சாளர். ஆனால் வைகோ அப்படியா? அவரது அசகாய சொற்பொழிவுத் திறன் தான் அவருடைய அரசியல் கோலியாட்டத்துக்கே முதலீடு. அதிகாலை ஒரு தம்ளர் புறநாநூற்றுக் கூழ் கரைத்துக் குடித்துவிட்டுப் புறப்பட்டாரென்றால் பத்து மணிக்கு ஒரு பெர்னாட்ஷா ஜூஸ், பன்னிரண்டுக்கு ஒரு மாக்யவல்லி புலாவ், மூன்று மணிக்கு முசோலினி சூப், ஆறு மணிக்கு சாக்ரடீஸ் சாலட், டின்னருக்கு தெய்வப் புலவர் என்று ஒரு ஃபுல் ரவுண்டு கட்டாமல் ஓயமாட்டார்.
அப்பேர்ப்பட்ட நாவும் தடம் புரளும் காலமாக இது அமைந்திருக்கிறது. கருணாநிதியின் சாதியைக் குறிப்பிட்டுத் தாக்கிய சில மணி நேரங்களில் தாங்கொணாத் துயரத்தை வெளிப்படுத்தி, தாயுள்ளத்தோடு மன்னிக்கச் சொல்லிக் கேட்டு விட்டார். நல்லது. வைகோவுக்காவது மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று தோன்றியிருக்கிறது. எதிர்வரும் நாள்களில் இன்னும் யார் யார் வாயில் யார் யாரெல்லாம் எப்படியெப்படியெல்லாம் விழுந்து புரளப் போகிறார்களோ என்று நினைத்தால் பெரும் பீதியாக இருக்கிறது.
நேற்று முன் தினம் வைகோவின் பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்த மறுகணமே திமுகவினர் அவரை ரவுண்டு கட்ட ஆரம்பித்துவிட்டார்கள். அவரது மன்னிப்பு கோரும் படலம் அரங்கேறிய பிறகும் அது ஓய்ந்தபாடில்லை. ஒரு ஆபாசம், ஒரு கோடி ஆபாசக் காட்சிகளுக்கு வழி வகுத்துவிடுகிறது. தேர்தல் முடிவதற்குள் இன்னும் எத்தனை மேடைகள், எவ்வளவு பொதுக்கூட்டங்கள்! எப்படியும் வைகோ கைமா செய்யப்பட்டுவிடுவது உறுதி.
கஷ்டம்தான். சங்கடம்தான். ஆனால் துரதுருஷ்டவசமாக, இது கடந்து போகாது.
0
(நன்றி: தினமலர் 08/04/16)
Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
April 6, 2016
பொன்னான வாக்கு – 24
கீர்த்தனாரம்பத்திலே விஜயகாந்த் கேப்டனானபோது, அவர் சட்டைப் பையில் சொருகிய கர்ச்சிப் மாதிரி வெளியே தெரிந்த இன்னொரு பெயர் ராமு வசந்தன் என்பது. இந்த ராமு வசந்தன் ஒரு விஜயகாந்த் ரசிகர். ரசிகர் மன்றத் தலைவர். விஜயகாந்துக்கு பிஆர்ஓ மாதிரி வேலை பார்த்தவர். எப்போதும் உடன் இருப்பவர். விஜயகாந்துக்காக வெளியான சினிமா பத்திரிகைகளின் பெரும்பாலான பக்கங்களில் அவரைப் பார்த்திருக்கிறேன். தகவல் உதவி அல்லது நன்றி அல்லது புகைப்பட உதவி அல்லது கட்டுரையாக்கம் என்று என்னவாவது ஒரு பெயரில் ராமு வசந்தன் இருப்பார். விஜயகாந்த் என்றாலே இந்தப் பக்கம் ராவுத்தர் அந்தப் பக்கம் ராமு வசந்தன் என்பதுதான் வரல் ஆறு.
பிறகு விஜயகாந்த் அரசியலுக்கு வந்தார். ராவுத்தர் விடை பெற்றுக்கொள்ள, பிரேமலதா அம்மையாரின் பெயர் அப்போது சேர்ந்து ஒலிக்க ஆரம்பித்தது. அப்போதும் ராமு வசந்தன் இருந்தார். ஆனால் கொஞ்ச நாள்தான். திடீரென்று சுதிஷ் என்றார்கள். பிரேமலதா அம்மையார், நல்லதொரு நாளிலே பிரேமலதா அண்ணியாராக மறுஅறிவிக்கப்பட்டார். விஜயகாந்தின் மூளை இதயம் நுரையீரல் கல்லீரல் போன்ற பேருறுப்புகள் அனைத்துமே அண்ணியார்தான் என்று சொன்னார்கள். நல்ல விஷயந்தானே? மாதொரு பாகம் மகத்தான போதம். மச்சானும் சேர்ந்தால் மறுக்க யாருளர்?
ஆனால் அன்று தொடங்கி விஜயகாந்த் கட்சியில் அண்ணியார், சுதிஷ் தவிர மூன்றாவதாக இன்னொரு பெயரை நான் கேள்விப்பட்டதில்லை. நேற்று வரைக்குமேகூட. தடாலென்று சந்திரகுமார் என்கிறார்கள். இன்னும் பத்துப் பேரைத் தூக்கிப் போடுகிறார்கள். இவர்களெல்லாம் அதிருப்தியாளர்கள் என்கிறார்கள். திமுகவுடன் கூட்டணி இல்லாததால் கட்சித் தலைமைக்கு எதிராகக் கொடி பிடித்தார்கள் என்கிறார்கள். இங்கே கேப்டன் கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக அவர்களைப் பதவி நீக்கம் செய்கிறார். அங்கே கலைஞர்தான் தேமுதிகவை உடைக்க சதி செய்தார் என்கிறார்கள்.
வெயில் காலத்தில் என்னத்துக்காக இப்படியெல்லாம் மண்டையிடி கொடுக்கிறார்களோ தெரியவில்லை. அட தெரியாமல்தான் கேட்கிறேன், சம்மட்டி வைத்து உடைக்கிற அளவுக்கா தேமுதிக ஸ்டிராங்?
சென்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி கண்டு இருபத்தி ஒன்பது இடங்களை விஜயகாந்த் கட்சி ஜெயித்திருந்தது. நல்ல, கௌரவமான வெற்றிதான். மாபெரும் சபையில் மகத்தான இரண்டாமிடம். எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து. ஏராள ஜபர்தஸ்து. ஆனாலும் அப்போது எட்டு எம்.எல்.ஏக்கள் டைவ் அடித்து அதிமுகவுக்குப் போனது என்னத்துக்காக? எனில், பலமான கட்சியின் கண்ணுக்குத் தெரியாத பலவீனம்தான் என்ன?
திமுகவோ அதிமுகவோ ஆரம்பிக்கப்பட்டபோது அந்தக் கட்சிகளுக்கு இருந்த நியாயமான காரணங்களை இங்கே நினைவுகூரவேண்டியது அவசியமாகிறது. தேர்தல் அரசியல் அவசியம் என்று அண்ணா நினைத்ததால் திமுக. ஊழல் அரசியல் அநாவசியம் என்று எம்.ஜி.ஆர். நினைத்ததால் அதிமுக. மாறாக, எனக்கு முதலமைச்சர் ஆகும் ஆசை என்று கட்சி ஆரம்பித்தவர் விஜயகாந்த். கேப்டன் விசுவாசிகள் மட்டும் வேறெப்படி சிந்திப்பார்கள்? லாபமுள்ள இடத்தில் லாலி பாடுவதில் தப்பில்லை. இந்தக் கொள்கை, கோட்பாட்டுக் கசுமாலங்களெல்லாம் யாருக்கு வேண்டும்? பதவியே லட்சியம். பணமாவது நிச்சயம்.
அப்புறம் அந்த உடைப்பு அரசியல். திமுகவுக்கு அதெல்லாம் புதுசா? அதிமுகவுக்குமேகூடப் புதிதில்லைதான். மகான் கவுண்டமணி சொன்னதுபோல அரசியலில் அதெல்லாம் சாதாரணமப்பா.
இங்கு நாம் கவனிக்க வேண்டிய சங்கதி என்னவெனில், தேமுதிக உடைந்ததால் தேமுதிகவுக்கு எந்த லாபமோ நஷ்டமோ இல்லை என்பதுதான். இந்த ஒன்றிரண்டு தினங்களைக் கடந்துவிட்டால் சமூகம் அதனை சட்டை செய்யப் போவதில்லை. ஆனால் கொள்கைக் குன்றுகளான மநகூவின் வைகோவும் திருமாவும் கம்யூ வகையறாக்களும் கொஞ்சநஞ்சம் மிச்சமிருந்த மானம் மரியாதையையும் மொத்தமாக இழக்கப் போகிறார்கள்.
அரசியலில் இந்தக் கொள்கை மாதிரி ஒரு கெட்ட வார்த்தை வேறு கிடையாது. வைத்திருப்பவனையே பதம் பார்க்கும் கெட்ட சரக்கு அது. அதைப் போய் முன்னால் வைத்து கேப்டனுடன் ஒரு கூட்டணி அமைத்த பிரகஸ்பதிகள் பாடுதான் படு பேஜாராகப் போகிறது. ஏற்கெனவே அவர் ஒரு வினோத ரச மஞ்சரி. தமிழ்நாட்டு அரசியலும் தெரியாமல், அதில் திராவிட ஸ்டைல் அப்ரோச்சும் பயிலாமல் தமது சினிமா பிரபலம் ஒன்றை மட்டும் மூலதானமாக்கி முன்னால் வந்தவர். அவரது தடாலடி ஸ்டேட்மெண்டுகளுக்கும் லைவ் ஸ்டண்ட் நடவடிக்கைகளுக்கும் தத்துவார்த்த விளக்கம் கொடுத்தே மநகூவினருக்கு நாக்கு தள்ளியிருக்கும். இப்போது உழக்கில் ஒரு கிழக்கு மேற்கு.
பரம உத்தமம். இந்தத் தேர்தலுக்குப் பிறகு கேப்டன் கூட்டில் இருக்கிற நாலு பேரும் இன்னொரு தென்னந்தோப்பு ஆகப் போவது உறுதியாகியிருக்கிறது. மற்றபடி திமுகவின் உடைப்பு அரசியலும் அதிமுகவின் இழுப்பு அரசியலும் என்றுமுள தென்றலென எண்ணிக்கொண்டு மக்கள்தம் வேலையைப் பார்க்கப் போய்விடுவார்கள்.
அரசியல் அநாதைகள் இவ்வாறாகவும் உருவாக்கப்படுகிறார்கள் என்பதும் வரல் ஆறுதான்.
0
நன்றி: தினமலர் 07/04/16
Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
April 5, 2016
பொன்னான வாக்கு – 23
கிருஷ்ண பட்சத்துக்கு ஒன்று, சுக்ல பட்சத்துக்கு ஒன்று என்று இப்போதெல்லாம் கோடம்பாக்கத்தில்கூட முற்றிலும் புது முகங்களைப் போட்டுப் படமெடுக்க ஆள் வந்துவிட்ட நிலையில் அதிமுகவின் வேட்பாளர் பட்டியலில் உள்ள புது முகங்களின் எண்ணிக்கை எனக்குப் பெரிய அதிர்ச்சியளிக்கவில்லை. ஐந்து முழு வருஷங்கள் அமைச்சராக இருந்தவர்களிலேயே முக்கால்வாசிப் பேர் இன்னும் புது முகங்களாகத்தான் காட்சியளிக்கிறார்கள். எங்கே, தில் இருந்தால் அறம் செய விரும்பு ஸ்பீடில் அதிமுக அமைச்சர்கள் பெயர்களை ஒப்பியுங்கள் பார்க்கலாம்?
வேட்பாளர் பட்டியலில் தற்போதைய அமைச்சர்கள் பலபேர் இல்லை. யார் யார் இல்லாது போனதற்கு என்னென்ன காரணம் என்று இனிமேல் ஆய்வுக்கட்டுரைகள் வரத் தொடங்கும். பன்னீரும் நத்தமும் பட்டியலில் இருப்பதைக் கவனியுங்கள். கட்சி விரோதச் செயல்பாடுகள், ஒழுங்கு நடவடிக்கை என்று கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற களேபரங்களையெல்லாம் கபளீகரம் செய்யும் விதமான பெயர் சேர்ப்பு வைபவம். தெரியுமாலே? இதாம்லெ ராசதந்திரம். மீண்டும் கோட்டா சீனிவாசராவ் குரல்தான் காதில் ஒலிக்கிறது.
நல்லது. இருநூற்று முப்பத்தி நாலு தொகுதிகளிலும் இரட்டை இலைச் சின்னம். தொட்டுக்கொள்ள ஏழு ஒரு நபர் கட்சிகள். இந்தப் பக்கம் தோப்புகளை அம்மா தனி மரமாக்கி அழகு பார்க்க, அந்தப் பக்கம் காங்கிரசுக்கு நாற்பத்தியொரு சீட்டுகளை அள்ளிக்கொடுத்து அதிர்ச்சி வைத்தியம் அளித்திருக்கிறார் கலைஞர்!
இந்த வயதில் அவருக்கு என்னத்துக்கு இப்படியொரு வில்லத்தனம்? நாற்பத்தியொரு வேட்பாளர்கள்! பாவம் காங்கிரஸ். ஆட்களுக்கு எங்கே போவார்கள்? இதெல்லாம் படு பயங்கரவாதமன்றி வேறல்ல.
மிச்சமிருக்கும் ஒரு சில உதிரிகளுக்கு என்ன தொகுதி என்பது மட்டும் தெளிவாகிவிட்டால் போதும். களம் காணக் கட்சிகள் தயார்.
அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியான கணத்தில் இருந்து திமுக பிரசாரப் புலிகள் வரிந்துகட்டிக்கொண்டு ரவுண்டு கட்டத் தொடங்கிவிட்டார்கள். என் ஆச்சரியம் என்னவென்றால் நேற்றைக்கு வரை மநகூ – கேப்டன் கோஷ்டியை சொல்லி சொல்லி வாரிக்கொண்டிருந்தவர்கள் – அதிமுக என்றொரு கட்சியே இல்லாத மாதிரியான பாவனையில் இருந்தவர்கள், சொய்யாவென்று ஒரே நாளில் தங்கள் இலக்கை மாற்றிக்கொண்டுவிடுகிற அளவுக்கு அப்படி என்ன கிருமி பாம் வைத்துவிட்டார் ஜெயலலிதா?
என்னைக் கேட்டால் ஒன்றுமேயில்லை. வழக்கமான வியூகங்கள். பழக்கமான காய் நகர்த்தல்கள். ஊழல் அமைச்சர்களுக்கு இடமில்லை என்று சொல்லாமல் சொல்லுவதன்மூலம் பைசா செலவில்லாமல் ஒரு சுய பரிசுத்த ஆவிக் குளியல். புதியவர்களுக்கு இடம் என்பதன்மூலம் இதர இலவு காப்பாளர்களுக்கு ஒரு சிறு நம்பிக்கை வெளிச்சம். ரிசர்வேஷன் அகெய்ன்ஸ்ட் கேன்சலேஷன் சித்தாந்தப்படி என்றைக்கு வேண்டுமானாலும் தனக்கு அதிர்ஷ்டம் அடிக்கும் என்ற சப்புக்கொட்டலுடன் தேர்தல் திருப்பணி ஆற்றப் போகலாம்.
மற்றபடி அதே சாதி ஓட்டுக் கணக்குகள், செலவு செய்யும் சக்திமான் தேர்வுகள்.
இதுவரை அலை என்ற ஒன்று எந்தக் கட்சிக்கு சாதகமாகவும் பாதகமாகவும் பெரிதாக அடிக்க ஆரம்பிக்கவில்லை. இந்த முறை அப்படியொன்று இருக்கும் சாத்தியங்களும் தெரியவில்லை. திமுகவைத் திட்டுவதற்கு எதிர் கோஷ்டிகளுக்குப் புதிய சங்கதிகள் ஏதுமில்லை என்பதைப் போலவே, ஜெயலலிதாவைத் திட்டுவதற்கும் எதிர்த்தரப்பு வக்கீல்களுக்கு டாஸ்மாக் தவிர வேறு பிரமாதமான விஷயம் அகப்பட்டபாடில்லை.
ஒன்று எனக்குப் புரியவில்லை. டாஸ்மாக்கைக் கலைத்துவிட்டுப் பழையபடியே தனியார் வசம் மது விற்பனை உரிமங்களைக் கொடுத்தால் மட்டும் என்னவாகும்? சுவாரசியமற்ற அழுக்கு டாஸ்மாக் போர்டுகளுக்கு பதில் பழைய குஷ்பு ஒயின்ஸ், நக்மா ஒயின்ஸ் மாதிரி இன்றைய டிரெண்டுக்கு ஏற்ற நயந்தாரா ஒயின்ஸ், ஸ்ருதி ஹாசன் ஒயின்ஸ் போர்டுகள் வைக்கப்படும். கொஞ்சம் லட்சணமாக ஆயில் பெயிண்டிங் எல்லாம் செய்து அலங்கார விளக்குகள் வைத்து அழகு படுத்துவார்கள். மற்றபடி அதே பாலாறு தேனாறுதான்.
ஆட்சியமைக்கும் சாத்தியங்கள் உள்ள இரண்டு பிரதானக் கட்சிகளும் மது விலக்கு பற்றி வாய் திறப்பதில்லை என்பதைக் கவனியுங்கள். கலைஞராவது எப்போதாவது போகிற போக்கில் அதைக் குறிப்பிட்டுப் பேசக்கூடிய சாத்தியங்கள் உண்டு. ஆனால் ஜெயலலிதா மூச்சுக்கூட விடமாட்டார். அது அரசுக்கு வருமானம். அரசு அமைத்து அனுபவமில்லாத புதிய பெருச்சாளிகள் மட்டுமே மது விலக்கை முன்வைத்துப் பிரசாரம் செய்வார்கள். அதெப்படி? பிகாரில் நிதிஷ் குமார் சாதிக்கவில்லையா என்று கேட்கப்படாது. திராவிட தர்பாருக்கு சாராயக் கடைகளே சர்வாலங்காரம்.
இதோ பிரசாரங்கள் வேகமெடுத்துவிடும். காதுகளைத் தீட்டிக்கொள்ளுங்கள். வெற்றி தோல்விகளை அவர்கள் பார்த்துக்கொள்ளட்டும். இந்தத் தேர்தலின் பிரதானப் பிரச்னைகளாக முன்வைக்கப்படுகிற சங்கதிகளை நாம் கவனிப்போம். புதிதாக நாலைந்து தேறினால்கூடப் போதும். நமது வாக்கின் மதிப்பு நமக்குப் புரிய ஆரம்பித்துவிடும்.
0
(பா. ராகவன் – தொடர்புக்கு: [email protected])
Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)