Pa Raghavan's Blog, page 21
September 11, 2016
தொலைந்த காதை
தூங்கி எழுந்து பார்த்தபோது
ஒரு
காதைக் காணவில்லை
பதறித் தேடி வீடு முழுதும்
கலைத்துப் போட்டேன்
படுக்கையில் பார்த்தாயா
என்றாள் மனைவி
மடித்து வைத்ததை உதறிப் பார்த்தால்
காது அதில் இல்லை
காலை இருந்தது
வாக்கிங் போகையில் குடைந்த
நினைவிருக்கிறது
குளிக்கும்போது தேய்த்துக் குளிக்க நினைத்து
சோம்பலில் செய்யாமல் விட்டது
நினைவிருக்கிறது
குளித்து முடித்து ஈரம் துடைக்கையில்
காதின் பின்புறம் ஒரு கட்டி வரப்போகும்
அறிகுறி தெரிந்தது
சாப்பிடும்போது மனைவி அழைத்து ஏதோ
சொன்னபோது
காதுல விழல என்றது
நினைவிருக்கிறது
ஒருவேளை அப்போதே கழன்று
விழுந்திருக்குமோ?
சாப்பாட்டு மேசையின் அடியில் தேடினேன்
சிதறிக்கிடந்த பருக்கைகளில் தெரிந்ததென்
ஒழுங்கீனம்
காதைத் தேடிப் போய்
பருக்கைகளை அப்புறப்படுத்தினேன்
எங்கே போனதென் ஒரு காது?
வான் காபோல
நானே பிய்த்து எறிந்திருக்க வாய்ப்பில்லை
கமர்ஷியல் போராளிக்குக் காது அவசியம்
யாரும் திருடிப் போயிருக்க வாய்ப்பில்லை
ஆபரணங்க ளேதுமதில் இல்லை
கேட்டுச் சேர்த்த சொத்தொன்றும்
பெரிதில்லை
வெற்றுச் சண்டைகள் வம்பு வழக்குகள்
அக்கப்போர் கிசுகிசுக்கள்
அடாவடிப் பேச்சுக் குப்பைகள்
அவ்வப்போது கொஞ்சம் பாட்டு
அதிகம் போனால் மனைவியின் வசவுகள்
பெரிய நஷ்டம் இல்லையென்றாலும்
காணாமல் போன காதில் மட்டுமே
காலம் உறைந்து போகிற
தென்பதால்
இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன்
தொலைந்த காதை.
Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
September 5, 2016
எலி அறியும் மசால்வடைகள்
சாரு நிவேதிதாவின் இந்தக் கட்டுரையை இப்போதுதான் வாசித்தேன். பத்திரிகைத் துறை முன்னைக்காட்டிலும் வேகமாக மோசமாகிக்கொண்டிருக்கிறது போலிருக்கிறது. அதிர்ஷ்டவசமாகச் சிறிது காலமாகப் பத்திரிகை எழுத்திலிருந்து ஒதுங்கியிருப்பதால் என்னளவில் பாதிப்பின்றி இருக்கிறேன்.
சந்தடி சாக்கில் ஒரு சேதி சொல்லிவிடுகிறேன். ஓரிரு மாதங்கள் முன்னர் ஒரு பத்திரிகையில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. விழா கொண்டாடுகிறோம்; நிறுவனத்துடன் உங்கள் தொடர்புகளை நினைவுகூர்ந்து ஒரு சிறு கட்டுரை தர இயலுமா என்று கேட்டார்கள்.
அப்போது நான் சுற்றுப் பயணத்தில் இருந்தேன். இணைய வசதி சரியாக இல்லாத இடம். இருப்பினும் கேட்ட மரியாதைக்கு எப்படியோ சமாளித்து எழுதி அனுப்பினேன்.
அவர்கள் வெளியிடுவதாகச் சொன்ன மலர் வெளியானதா, அதில் என் குறிப்பு இடம் பெற்றதா, யாராவது படித்தார்களா – ஒன்றும் தெரியாது, இன்றுவரை. இத்தனைக்கும் அங்குள்ள அத்தனை பேரும் என் நண்பர்கள். எழுதியதற்குப் பணம் வேண்டாம்; மரியாதைக்கு ஒரு பிரதி? ம்ஹும்.
நண்பர்கள் என்பதாலேயே இதுபற்றி நான் விசாரிப்பதைத் தவிர்த்தேன். தர்மசங்கடங்கள் எதற்கு?
சமூக ஊடகங்களின் தாக்கம் அதிகரித்திருக்கும் காலக்கட்டம். பத்திரிகைகளின் இடமும் இருப்பும் குறுகிக்கொண்டு வருவதை உணர முடிகிறது. இனியும் அச்சில் பேர் பார்க்கும் ஆவலற்ற எழுத்தாளன் பத்திரிகைகளை மறந்துவிட்டு மாற்று வழிகளில் செயல்படுவதே சரி என்று படுகிறது.
எழுத்தாளன் எந்த பொந்தில் தன்னைக் குறுக்கிக்கொண்டு இயங்கினாலும் அவனது வாசகர்கள் அவசியம் தேடி வருவார்கள். எறும்புக்கு இனிப்பும் எலிக்கு மசால்வடையும் எங்கிருக்கிறது என்று யாரும் சொல்லித் தருவதில்லை.
Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
June 26, 2016
கலோரிக் கங்கணம்
முன்னொரு காலத்தில் எடைக்குறைப்பில் ஒரு தீவிரவாத வேகத்துடன் ஈடுபட்டிருந்தேன். ஒரு வருட இடைவெளியில் பதினாறோ பதினேழோ கிலோக்களை இழக்கவும் செய்தேன். அது குறித்து அப்போது நிறைய எழுதியும் உள்ளேன்.
அதன்பின் அந்த ஆர்வம் வற்றிவிட்டது. ஏனெனில் எடைக் குறைப்பு முயற்சிகளும் உணவுக் கட்டுப்பாடும் தனியொரு அலுவலாக எனக்கு இருந்தன. கணிசமான நேரம், அதைவிட அதிக கவனத்தைக் கோரின. என் வாழ்க்கை முறை அதற்கு இடம் தரவில்லை. எனவே விட்டுவிட்டேன். காலக்ரமத்தில் நல்லபடியாக மீண்டும் பழைய எடைக்கே வந்து சேர்ந்தேன்.
இப்போது பணிச்சுமை மேலும் அதிகரித்தது. எனது ஒழுங்கீனங்கள் எல்லை மீறத் தொடங்கின. ஒழுங்கான உணவு, ஒழுங்கான உறக்கம் என்பது அறவே இல்லாது போனது. ரத்த அழுத்தப் பிரச்னை ஏற்பட்டது. அதற்குத் தனியே மாத்திரை எடுத்துக்கொள்ளத் தொடங்கினேன். எழுத்து வேலைகளைக் கணிசமாகக் குறைத்து வெறும் இரண்டே சீரியல்கள்தான் இப்போது. இதுவே நாக்கு தள்ளச் செய்கிறது. வயதும் ஏறுகிறதல்லவா?
சில நாள்களுக்கு முன்னர் சொக்கன் வீட்டுக்கு வந்திருந்தான். அவன் கையில் ஒரு பட்டை கட்டியிருந்தான். MI Band என்று சொன்னான். தினசரி எத்தனை அடிகள் நடக்கிறோம் என்று அளந்து சொல்லும் பட்டை. அதன்மூலம் எத்தனை கலோரி செலவாகிறது என்று அறிந்துகொள்ளலாம்.
என்னை அது பெரிதாகக் கவரவில்லை. எண்ணெயும் வெண்ணெயும் பெரிதாகக் கவரக்கூடிய யாரையும் அது கவரத் தான் கவராது. ஆனால் என் மனைவிக்கு அந்தப் பட்டை பிடித்துவிட்டது. உடனே இரண்டு வாங்கியாக வேண்டும் என்று அடம் பிடித்து சொக்கன் மூலமாகவே வரவழைத்தும் விட்டாள்.
நேற்று கூரியரில் வந்து சேர்ந்த அந்த கலோரிக் கரைப்புப் பட்டையை நேற்று மாலையே கங்கணமாகக் கட்டிக்கொண்டாகிவிட்டது. கட்டாயத்தின்பேரில் நிகழ்ந்ததுதான் இது என்றாலும் அதைக் கட்டிக்கொண்டதில் இருந்து நிமிடத்துக்கொருதரம் எத்தனை அடிகள் நடந்திருக்கிறேன் என்று பார்க்கும் வழக்கம் ஏற்பட்டிருக்கிறது.
நானே சற்றும் எதிர்பாராவிதமாக இன்று காலை பத்து நிமிட வாக்கிங் போய்வந்தேன். (டிரைவிங் வகுப்பு சேர்ந்ததில் இருந்து நீச்சலுக்கு விடுப்பு. இது முடிந்ததும் மீண்டும் அது.) எப்போதும் உட்கார்ந்து குளிப்பவன் இன்று நின்று குளித்தேன். ஏழெட்டு முறை குனிந்து நிமிரவும் செய்திருக்கிறேன் என்பது எனக்கே பரவசமளிக்கிறது. இன்று காலை 6 மணி முதல் இதை எழுதும் பன்னிரண்டரைக்குள்ளாக 3263 அடியெடுத்து வைத்திருக்கிறேன் என்கிறது எம்.ஐ. ஆப்.
யார் கண்டது? மீண்டும் எடைக்குறைப்பு வெறி உண்டாகி ஓர் ஆண் இலியானாவாகிவிடப் போகிறேனோ என்னவோ.
அது ஆகாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் என் மனைவியும் இப்பட்டையைக் கட்டிக்கொண்டிருக்கிறபடியால் தினசரி யார் அதிகக் கலோரி செலவிட்டிருக்கிறார்கள் என்கிற ஒப்பீடு வீட்டில் அவசியம் எழும். தினசரி மண்ணைக் கவ்வுவது சற்று சங்கடம் தரக்கூடும் என்று உள்ளுணர்வு எச்சரிக்கிறது. எம்பெருமான் என் பக்கம் இருந்து அப்பட்டையைக் காட்டிலும் இப்பட்டை அரைக் கலோரியேனும் அதிகம் இழந்திருப்பதாகச் சுட்ட விழைகிறேன்.
Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
June 8, 2016
நன்றி
ரொம்ப வருஷங்களுக்கு முன்னால் வாரமலரில் ஒரு தொடர்கதை எழுதினேன். அது ஒரு க்ரைம் த்ரில்லர். அதன்பிறகு இப்போதுதான் மறு நுழைவு. இந்த முறையும் க்ரைம் த்ரில்லர்தான். ஆனாலும் இது கதையல்ல. கதையைவிட சுவாரசியம் கொண்ட அரசியல்.
தமிழ்நாட்டு அரசியலைப் பொறுத்தவரை நான் பெரும்பாலும் மௌனப் பார்வையாளனாக மட்டுமே இருந்து வந்திருக்கிறேன். பத்திரிகையாளனாக இருந்த காலத்தில் பேட்டிகள், கட்டுரைகள் எழுதியதுண்டு என்றாலும் விமரிசன நோக்கில் அதிகம் எழுதியதில்லை. சுவாரசியங்களுக்குப் பஞ்சமில்லை என்றாலும் நினைக்கும்தோறும் ஒரு சிறு அலுப்பும் சலிப்பும் எப்போதும் ஏற்படுத்துவது என்பதால் கூடியவரை இந்தப் பக்கம் ஒதுங்கியதில்லை.
என்னை இழுத்து வந்து நடுவில் நிறுத்தியது தினமலர்தான். 2016 தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட தினம் தொடங்கி சரியாக நாற்பத்தி ஐந்து நாள்களுக்கு இந்தப் பத்தியை தினமலர் தேர்தல் களம் பகுதியில் எழுதினேன்.
எனக்குக் கட்சி சார்புகள் கிடையாது. நான் ஒரு நடுவாந்திர ஜென்மம். நான் சந்திக்கிற, உரையாடுகிற, எப்போதாவது விவாதம் புரிகிற நண்பர்களும் அநேகமாக என்னைப் போலவே இருப்பவர்கள். ஒரு சராசரித் தமிழ் மனம் அரசியல்வாதிகளை எப்படி எடை போடுகிறது, அவர்களிடம் என்ன எதிர்பார்க்கிறது, எதிலெல்லாம் ஏமாறுகிறது, ஒவ்வொரு முறையும் ஏன் தோற்றுப் போகிறது என்கிற வினாவை முன்வைத்துத்தான் இந்தப் பத்தியை வடிவமைத்தேன்.
இது வெளியான தினங்களில் தினசரி எனக்கு வந்துகொண்டிருந்த மின்னஞ்சல்களில் பெரும்பாலும் இந்த வரி இருக்கும். ‘என் மனநிலையை அப்படியே பிரதிபலித்திருக்கிறீர்கள்.’
நான் சாமானியன். உங்களுக்கும் எனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. நீங்கள் சாப்பிடுகிற அதே குழம்பு ரசத்தைத்தான் நானும் சாப்பிடுகிறேன். நீங்கள் டீ குடிக்கிற கடையில்தான் நானும் டீ குடிக்கிறேன். உங்களைப் போலத்தான் சுவாசிக்கிறேன். உங்களைப் போல் யோசிக்காமல் வேறெப்படி யோசிப்பேன்?
ஆனால் திமுக தொடங்கி அதிமுக வரை; பாஜக தொடங்கி நாம் தமிழர் வரை அத்தனை கட்சிகளையும் கிண்டலடித்துத் தள்ளி விட்டீர்களே, நல்லதென்று சுட்டிக்காட்ட ஒன்றுகூடவா இல்லை என்கிற கேள்வியும் அடிக்கடி வந்தது. நல்லதைச் சுட்டுவதல்ல நமது பணி. தேர்ந்தெடுப்போர் நெஞ்சம் அறியாததா? அல்லதை அடிக்கோடிட்டுக் காட்டுவதுதான் ஆகப்பெரிய திருப்பணி.
தினமலர் அளித்த பூரண சுதந்தரத்தை இக்கணம் நினைவுகூர்கிறேன். எந்தக் குறுக்கீடுமின்றி என் மனத்தில் பட்டதை எழுத முடிந்தது. தினமலர் ஆசிரியருக்கும் ஆசிரியர் குழுவினர் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.
அடிப்படையில் நான் ஓர் ஒழுங்கீனவாதி. என்னைச் சமாளிப்பது, ஒரு வேலையில் பொருந்தவைப்பது ரொம்பக் கஷ்டம். பணிச்சுமை காரணமாகக் கடந்த ஓராண்டுக்கு மேலாக எந்தப் பத்திரிகையிலும் எழுதாதிருந்தேன். இதில் என் மனைவிக்கு ரொம்ப வருத்தம். தினமலர் இதனை எழுதக் கேட்டபோது, செய்தே தீரவேண்டும் என்று குச்சி வைத்துக் குத்தாத குறையாக என்னை இதில் திசை திருப்பி, எழுத வைத்தது அவர்தான்.
நெஞ்சைத் தொட்ட ஒவ்வொரு கட்டுரைக்கும் மறக்காமல் போன் செய்து பாராட்டிய நண்பர் இந்திரா சௌந்தர்ராஜன், தினமும் இக்கட்டுரைகளை வாசித்துக் கருத்து சொன்ன இணைய நண்பர்கள், விமரிசித்தும் திட்டியும் பாராட்டியும் கடிதமெழுதிக் கிளுகிளுப்பூட்டிய தினமலர் வாசகர்கள் அத்தனை பேருக்கும் சொல்லித்தீராத நன்றிகளை இங்கே எழுதி வைக்கிறேன்.
தமிழகத்தில் காமராஜர் ஆண்ட காலத்தைப் பொற்காலம் என்று பொதுவாகச் சொல்லுவார்கள். அதற்காக அடுத்து வந்த ஆட்சிக்காலமெல்லாம் களப்பிரர் காலம் என்று அர்த்தமல்ல. இன்னொரு பொற்கால ஆட்சி உருவாக வாக்காளர்கள் எப்படி யோசித்து என்ன செய்யலாம் என்று இந்தக் கட்டுரைகளில் சுட்டிக்காட்ட நினைத்தேன். அதைத்தான் செய்திருக்கிறேன். 2021 பொதுத் தேர்தல் சமயத்தில் நீங்கள் இதனை எடுத்துப் படித்தாலும் கருத்தளவில் பொருந்தும் என்பதே இத்தொகுப்புக்கான ஒரே அர்த்தம்.
(பொன்னான வாக்கு நூலுக்கான முன்னுரை)
Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
May 17, 2016
பொன்னான புத்தகம்
ஒரு சில தினங்களில் வெளியாகிறது…
Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
May 13, 2016
டால்ஃபின் பாரா
வெற்றிகரமாக இரண்டு வாரங்களாகத் தொடர்ந்து நீச்சலுக்குப் போய்க்கொண்டிருக்கிறேன். பழைய வேகம், குத்தாட்டங்கள் இப்போது முடிவதில்லை. ஆனால் குளத்தில் இருக்கும் ஒரு மணி நேரமும் கை கால் தொப்பைக்கு வேலை கொடுக்கிறேன் என்னும் மகிழ்ச்சி உள்ளது.
நான் போகும் அதிகாலை ஆறு மணி செட்டில் நிறைய 4-10 வயதுக் குழந்தைகள் வருகிறார்கள். பயிற்சியின் முதல் நாலைந்து தினங்கள் உயிர் பயத்தில் ஆ ஊ என்று அலறியவர்கள் எல்லாம் இன்றைக்கு ‘மாஸ்டர், செவன் ஃபீட்டுக்கு எப்ப போலாம்?’ என்கிறார்கள். ஒரு சிறுவன் – இதே பதினைந்து நாள் முன்பு பயிற்சிக்கு சேர்ந்தவன் இன்று ஐந்து ரூபாய் நாணயத்தை நடு நீரில் விசிறியடித்துவிட்டு, பாய்ந்து குதித்துத் தேடி எடுத்து வருகிறான். பார்க்கவே பரம சந்தோஷமாக உள்ளது.
எனக்கு மல்லாக்கப் படுத்து நீந்துவதில் பெருவிருப்பம் உண்டு. முன்பெல்லாம் அநாயாசமாக முழுக்குளத்தை மல்லாக்கப் படுத்தவாறே சுற்றி வருவேன். ஆனால் இப்போது எத்தனை முயற்சி செய்தாலும் அது மட்டும் முடிவதில்லை. ஏனென்றே தெரியவில்லை. கால்களும் கரங்களும் சரியாகவே இயங்குகின்றன. ஆனாலும் தேகமானது ஒரு தெர்மாகோல் பந்து போல, போட்ட இடத்திலேயே மிதக்கிறது. நாளைக்கு இந்தத் தடையை உடைத்தெறிய வேண்டுமென்று சபதம் பூண்டிருக்கிறேன்.
நிற்க. இந்த விடுமுறையை வீணாக்காமல் என் மகளையும் பயிற்சியில் சேர்த்து, இரு வாரங்களாக தினமும் உடன் அழைத்துச் சென்றுகொண்டிருக்கிறேன். அவளும் ஆ ஊ என்று அலறிக்கொண்டுதான் இருந்தாள். இன்று அநாயாசமாக முழுக்குளத்தை நீந்திக் கடக்கிறாள். ஏழடியில் சர்வ அலட்சியமாகக் குதித்து சைக்ளிங் செய்கிறாள். பார்த்துப் பார்த்துப் புல்லரித்துப் போகிறேன்.
நீச்சல் ஒரு உடற்பயிற்சியோ இல்லையோ. மிகச் சிறந்த தியானம். குளத்தில் இருக்கும் ஒரு மணி நேரமும் நீரையும் நீந்துவதையும் தவிர வேறெதையுமே நினைப்பதில்லை. அடுத்த ஜென்மத்தில் மீன்பிடிப்பாளர்கள் இல்லாத ஏதேனுமொரு க்ஷேத்திரத்தில் உள்ள குளத்தில் மீனாகப் பிறக்க ஆசையாக இருக்கிறது.
Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
May 12, 2016
கன்சர்வேடிவ் பார்ப்பன ஹிந்துத்துவ வலது சாரி திராவிட துவேஷி ஆணாதிக்கவாதி
சரியாக ஒரு மண்டலகாலத்துக்கு நீண்ட தினமலர் தேர்தல் களம் பத்தி இன்றோடு நிறைவு பெறுகிறது. தினமலர் ஆசிரியருக்கும் ஆசிரியர் குழுவினருக்கும் தினமலரில் இதனை நான் எழுதக் காரணமாக இருந்த நண்பர் சொக்கலிங்கத்துக்கும் என் நன்றி.
பத்திரிகைகளில் எழுதுவதை ஓராண்டுக்கு மேலாக நிறுத்தியிருந்தேன். நேரமின்மையே முக்கியமான காரணம். எனது ரெகுலர் சீரிய-ல் பணிகளுக்கிடையே பத்திரிகை எழுத்தில் கவனம் செலுத்த முடியவில்லை. இதனாலேயே சென்ற வருடம் சில நல்ல வாய்ப்புகளை வேண்டாமென்று தவிர்த்தேன்.
ஆனால் இதனை எழுதியே தீரவேண்டும் என்று குச்சி வைத்துக் குத்தாத குறையாக எழுத வைத்தவர் என் மனைவி. எனது வழக்கமான அனைத்து ஒழுங்கீனங்களுடன் இந்தப் பத்திக்காகப் புதிதாகச் சேர்ந்தவற்றையும் சேர்த்து சமாளித்து இந்த நாற்பத்தைந்து தினங்களும் இந்தக் காரியம் ஒழுங்காக நடைபெறச் செய்தவர் அவரே. இதை முடித்த கையோடு அடுத்தது ஆரம்பிக்க வேண்டும் என்றும் உத்தரவாகியிருக்கிறது. பார்க்கலாம். எம்பெருமான் சித்தம்.
இந்தக் கட்டுரைகளின்மூலம் கிடைத்த பல புதிய வாசகர்களே என் முக்கியமான சந்தோஷம். வழக்கமான நாயே பேயே வகையறா வசவுக் கடிதங்கள் இருக்கவே இருக்கின்றன. ஆனால் தமிழக அரசியல் சூழலைப் பொருட்படுத்திக் கவனித்து, என் கட்டுரைகளோடு தங்கள் சிந்தனைப் போக்கை ஒப்பிட்டுப் பார்த்து, ஒட்டியும் வெட்டியும் தினமும் ஏராளமான மின்னஞ்சல்கள் வந்தன. முடிந்தவரை அனைத்து அஞ்சல்களுக்கும் பதில் எழுதினேன். விரிவாக இல்லாவிட்டாலும் ஓரிரு வரிகளிலாவது. ஒரு சில விடுபட்டிருக்கலாம். ஆனால் அவர்களுக்கும் பத்தியில் பதில் சொல்லியிருக்கிறேன்.
அது ஒருபுறமிருக்க, மனுஷனை கிளுகிளுப்பூட்டும் விதமாக வந்த பாராட்டுக் கடிதங்களைப் பற்றியும் சொல்லவேண்டும். ஆனால் என்ன சொல்வது? நன்றி சொல்லலாம். வந்த மொத்தக் கடிதங்களில் ஆகச் சிறந்ததாக ஒன்றைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். ‘நீங்கள் ஒரு கன்சர்வேடிவ் பார்ப்பன ஹிந்துத்துவ வலது சாரி திராவிட துவேஷி ஆணாதிக்கவாதி. உங்களைப் படிப்பது வேஸ்ட்.’ என்று அந்த அன்பர் தமது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். ஒரு வரியில் இத்தனை பட்டங்கள் வேறு யாருக்குக் கிட்டும்? அவருக்கு என் சிறப்பு நன்றி.
பொன்னான வாக்கு விரைவில் நூலாக வெளிவருகிறது. விவரம் விரைவில்.
Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
பொன்னான வாக்கு – 45
வக்கணையாக எதைப் பற்றி வேண்டுமானாலும் எழுதத் தெரிந்த எனக்குப் படிவங்களை நிரப்புவது என்பது ஒரு பெரிய பிரச்னை. குட்டிக் கட்டங்கள் போட்ட வங்கிப் படிவங்கள் என்றால் பின்னங்கால் பிடறியில் பட ஓடிவிடுவேன். அகலமாகக் கோடு போட்ட, சற்றே தாராளப் படிவங்களென்றாலும் ஏழெட்டு அடித்தல் இல்லாமல் எழுத முடியாது. பெரும்பாலும் படிவங்களில் நான் தவறு செய்யும் இடம், முகவரியாக இருக்கும். வீட்டின் கதவு எண் காலகாலமாக இருப்பதுதான் என்றாலும் நிரப்பும் நேரத்தில் தப்பாகவே வந்து விழும். கதவு எண்ணுக்குப் பிறகு தொலைபேசி எண். அடுத்தது நிரந்தரக் கணக்கு எண். இதுவரை பெயரில் மட்டும்தான் ஸ்பெல்லிங் மிஸ்டேக் செய்ததில்லை. இது கருவின் குற்றமல்ல. கடவுளின் குற்றமேதான்.
நிற்க. நேற்றைக்கு இந்த மாதிரி ஒரு படிவத்தை நிரப்பவேண்டி நேர்ந்தது. அதில் சொந்த ஊர் என்னும் கட்டத்தில் சென்னை என்று எழுதிவிட்டு, சொந்த மாநிலம் என்ற கட்டத்துக்கு வந்தபோது குழப்பமாகிவிட்டது. சென்னை ஆந்திரத்தில் இருக்கிறதா? சட்டீஸ்கரில் இருக்கிறதா? ஒருவேளை உத்தர்கண்டாக இருக்குமோ? கண்டிப்பாகத் தமிழகமாக இருக்க முடியாது. ஏனென்றால் தமிழகத்தில் மின்வெட்டே கிடையாது. நான் படிவம் நிரப்பிக்கொண்டிருந்ததோ மெழுகுவர்த்தி வெளிச்சத்தில். ராத்திரி பத்து மணிக்குப் போன கரண்ட், பதினொன்றரை ஆகியும் வராத அவஸ்தையில் யாரையாவது பழிவாங்க உத்தேசித்துத்தான் அந்தப் படிவத்தைக் கையில் எடுத்தேன். ஏனெனில் சுய பழிவாங்கல்தான் பாதுகாப்பானது.
‘ஏன் சார் இருட்டுல உக்காந்து எழுதிட்டிருக்கிங்க? எந்திரிச்சி வெளிய வாங்களேன்?’ என்றார் பக்கத்து ஃப்ளாட்காரர். எங்கோ ஊருக்குப் போகிறவர் மாதிரி பேண்ட் சட்டையெல்லாம் போட்டுக்கொண்டு தயாராயிருந்தார்.
‘இந்த நேரத்துல எங்க சார் கெளம்பிட்டிங்க? ரோட் லைட் கூட எரியலியே’ என்றேன்.
‘சும்மா வெளிய நிக்கத்தான். வாங்களேன்?’ என்றார் மீண்டும்.
சும்மா வெளியே நிற்பதற்கு இஸ்திரி போட்ட சட்டை எதற்கு? புரியவில்லை. இருப்பினும் அவரது இம்சை தாங்காமல் படிவத்தை வைத்துவிட்டு வெளியே வந்தேன்.
‘இது ஒரு சிக்னல் சார். பவர கட் பண்ணிட்டு பணம் குடுக்கறாங்க’ என்றார் நண்பர். திடுக்கிட்டுப் போனேன். ஏனென்றால் எனது க்ஷேத்திரத்தில் வருஷத்தில் பாதி நாள் பவரானது பல் பிடுங்கிய பாம்பாகத்தான் இருக்கும். எப்போது போகும், எப்போது வரும் என்று யாராலும் சொல்ல முடியாது. பிடுங்கப்படாத காலங்களில் டிரான்ஸ்பார்மர் வெடிக்கும். என்னவாவது ஓர் அசம்பாவிதம் எப்போதும் நடக்கும். பவரைப் பிடுங்கும் பொழுதெல்லாம் பணம் கொடுப்பதென்றால் இந்நேரம் நான் பல கோடீஸ்வரனாகியிருப்பேன்.
‘என்ன ரைட்டரோ போங்க. உங்களுக்கு விவரமே பத்தலியே சார். நேத்து நைட் இந்நேரம் பவர் கட் ஆயிருந்திச்சில்ல? அப்ப பாளையக்காரன் தெரு வரைக்கும் டிஸ்டிரிப்யூஷன் நடந்திருக்கு. காலைல பால்காரம்மா சொன்னாங்க. இன்னிக்கு இந்த சைடுதான் வருவாங்க. வெயிட் பண்ணுங்க’ என்றார் நண்பர். என்னமோ கள்ளக்கடத்தல் கோஷ்டிக்கு டார்ச் அடித்து சிக்னல் கொடுத்துக் காத்திருக்கும் பரபரப்புடன் நண்பர் அந்த முகம் தெரியாத யாருக்காகவோ காத்திருக்கத் தொடங்கினார்.
பதினொன்றே முக்காலுக்கு கரண்ட் வந்துவிட்டது. ஆனால் அவர் எதிர்பார்த்த யாரும் வரவில்லை. மிகவும் சோர்வாகிவிட்டார். இப்போது அவருக்கு நான் ஆறுதல் சொல்ல வேண்டுமா அல்லது மறுநாள் பவர்கட்டாக வாழ்த்து சொல்ல வேண்டுமா என்று யோசித்தேன். படுத்து தூங்குங்க சார் என்று மட்டும் சொல்லிவிட்டுப் போய்விட்டேன்.
வருத்தமாக இருந்தது. மிஞ்சிப் போனால் என்ன தருவார்கள்? ஒரு ஆயிரம்? ஐந்தாயிரம்? அட பத்தாயிரம்? ஐந்து வருட ஆட்சி அதிகாரத்தைத் தூக்கிக் கொடுப்பதற்கு இதுதான் விலையா? படித்தவர்கள், பாமரர்கள் என்னும் பேதமின்றி இந்த விஷயத்தில் மக்கள் நாக்கைச் சப்புக்கொட்டுகிற வழக்கம் ஒழிந்தாலொழிய அரசியல்வாதிகள் திருந்தப் போவதில்லை. இந்த ரவுண்டில் இதுவரை தேர்தல் கமிஷன் பறிமுதல் செய்திருக்கும் தொகை நமது மக்கள் தொகையையே தாண்டிவிடும் போலிருக்கிறது. இங்கே அங்கே என்றில்லாமல் பரம்பொருள் மாதிரி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது லஞ்சம். இந்த ஆயிரம் இரண்டாயிரத்தை வெட்கமின்றி வாங்குவதன் விளைவுதான் ஒண்ணாங்கிளாஸ் அட்மிஷனில் இருந்து, தொட்ட இடத்திலெல்லாம் கொட்டி அழ வேண்டியிருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்கலாம். இப்படி லஞ்சமாகக் கொடுக்கிற தொகையையெல்லாம் நாளைக்கு ஜெயித்து அதிகாரத்துக்கு வந்ததும் மீட்டர் வட்டி போட்டு நம்மிடமிருந்தேதான் திரும்ப எடுப்பார்கள் என்பதையும் சேர்த்து நினைக்கலாம்.
வாக்களிப்பது என்பது ஜனநாயகத்தில் மக்களுக்குக் கிடைக்கிற ஆகப்பெரிய கௌரவம், அதிகாரம். நம்மை ஆள்பவரை நாமே தேர்ந்தெடுக்கிற சுதந்தரம் எத்தனை மகத்தானது! பிடிக்காவிட்டால் ஆறாவது வருஷம் தூக்கிக் கடாசிவிட்டு வேறு ஆளை உட்கார வைக்கலாம். அட, அரசாங்கத்துக்கு இப்படி ஒரு அதிகாரம் இருக்கிறதா என்று யோசித்துப் பாருங்கள். பிடிக்காத அதிகாரியை அமைச்சர் பெருமான் டிரான்ஸ்பர் வேண்டுமானால் செய்யலாம். வேலையை விட்டுத் தூக்க முடியுமா? ஆனால் வாக்காளர் நினைத்தால் அமைச்சரைத் தூக்கலாம். ஆட்சியையே தூக்கலாம்.
இந்த கௌரவத்தை மலினப்படுத்திக்கொள்ளாதிருப்பதே தேசத்துக்கு நாம் செய்யக்கூடிய மிகப்பெரிய தொண்டு.
இந்தத் தேர்தல் ஒரு வாய்ப்பு. மிகப் பெரிய வாய்ப்பு. ஒரு நாள் லீவு போட்டுவிட்டு உட்கார்ந்து யோசித்துப் பாருங்கள். நம் விருப்பத்துக்குரிய, நமக்காக உழைக்கக்கூடிய, நமது நலனை சிந்திக்கக்கூடிய, கொள்ளையடிப்பதில் விருப்பமற்ற ஒருவரை இந்த முறை தேர்ந்தெடுப்போம். கட்சிகளைப் பொருட்படுத்தாதீர்கள். உங்கள் தொகுதிக்கு ஓர் உத்தமரைத் தேர்ந்தெடுங்கள். அத்தனைத் தொகுதி வாக்காளர்களும் இப்படிச் சிந்தித்து, மிகச் சரியான நபரைத் தேர்ந்தெடுத்தால், அமையும் ஆட்சி அற்புதமாக அல்லாமல் வேறெப்படி இருக்க முடியும்?
(இந்தப் பத்தி இன்றோடு முற்றும்)
Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
May 11, 2016
பொன்னான வாக்கு – 44
இந்த பாப்பையா, ஞானசம்மந்தன், ராஜா சமூகத்தாரை விசாரிக்க வேண்டும். வாழ்நாளில் எத்தனை முறை ‘கூட்டுக்குடும்பமா? தனிக்குடித்தனமா?’ டைட்டிலை வைத்துப் பட்டிமன்றம் நடத்தியிருப்பார்கள்? நிறைய குடும்ப விஷயங்களைத் தொட்டுப் பேசலாம். ஆங்காங்கே ஜோக்கடிக்கலாம். அழகாக அசடு வழியலாம். மாமியாரைப் போல, நாத்தனாரைப் போல, கொழுந்தனாரைப் போலவெல்லாம் மேடையில் மிமிக்ரி செய்து கைதட்டல் வாங்கலாம். சிலதெல்லாம் எப்போதும் பச்சை. கூட்டுக் குடும்பமே சிறந்தது என்று நடுவர் மன்றம் தீர்ப்பளிக்கப் போவது எல்லோருக்குமே தெரியும் என்றாலும் கேட்டுவிட்டுக் கிளம்புவதில் ஒரு திருப்தி.
இல்லை என்று சொல்லுவீர்களா?
மாநிலத்திலுமேகூட ஒரு கூட்டணி ஆட்சி அமைவதுதான் மக்களுக்கு நல்லது. யாரும் தன்னிஷ்டத்துக்கு ஆடாமல், போடுகிற தாளத்துக்கேற்றவாறு ஆடமுடியும். நீ தப்பு செய்தால் நான் தட்டிக் கேட்பேன். அவன் ஊழல் செய்தால் நாம் சேர்ந்து மிரட்டலாம். பள்ளிப் பிள்ளைகள் பரீட்சைக்கு முன்னால் ஒருத்தருக்கு ஒருத்தர் ஒப்பித்துப் பார்த்துக்கொள்வதுபோல நீ செய்வதை எனக்குச் சொல்லு. நான் செய்வதை உனக்குச் சொல்கிறேன். அடுத்தவன் கவனிக்கிறான் என்ற எண்ணம் இருக்கும்போதுதான் செய்கிற காரியங்களில் ஒரு கவனம் இருக்கும்.
மேற்படி ஏற்பாட்டைப் பற்றி உலகு தோன்றிய நாளாக உள்ளூர் அரசியலில் பேசப்பட்டு வருவதைப் பார்க்கிறோம். ஒற்றைக் கட்சி ஆட்சி முறையை ஒழிப்போம். எழில் கொஞ்சம் கூட்டணி ஆட்சி ஒன்றை அமைப்போம். தமிழகத்தை சிங்கப்பூர் அல்லது சிலுக்குவார்பேட்டையாக்குவோம். தப்பித்தவறியும் தமிழகம், தமிழகமாக இருந்துவிடக்கூடாது என்பதே முக்கியம்.
திமுக – அதிமுக நீங்கலாக மாநிலத்தில் குப்பை அல்லது ரத்தினம் கொட்டிக்கொண்டிருக்கும் அத்தனை கட்சிகளுமே ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் இதைச் சொல்லியிருக்கின்றன. இதுவரை சொல்லாத கட்சிகள் உண்டென்றால் இனி சொல்லும். அதில் சந்தேகம் வேண்டாம். ஏனெனில் நமது இரண்டாம் கட்டத் தலைவர்களுக்கு (ரெண்டுங்கெட்டான் தலைவர்களல்ல) ஆட்சியதிகாரம் முக்கியமல்ல. மக்கள் நலன் தான் பரம ப்ரீதி.
ஒன்றும் தப்பில்லை. நல்ல யோசனைதான். சட்டாம்பிள்ளைகளை எதிரே வைத்துக்கொண்டு ஆட்சி புரிவது, ஆட்சியாளர்களுக்கு வேண்டுமானால் இம்சையாக இருக்குமே தவிர மக்களுக்கு நல்லதுதான். ஆனால் நமது சூழலில் அத்தகு ஒழுக்கம் மிகுந்த சட்டாம்பிள்ளைகள் யாரும் உண்டா என்பதுதான் கேள்வி.
வைகோ சொல்கிறார். விஜயகாந்த் தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு வருமானால் அந்த நாலைந்து கட்சிகளுக்கும் ஆட்சியில் பங்கிருக்கும். யாருக்கும் தெரியாமல் யாரும் எந்தத் தப்பும் செய்துவிட முடியாது. கவனிக்க ஆள் இருக்கிறார்கள் என்பதாலேயே எல்லோரும் தொழில் சுத்தம் காப்பார்கள். ஒரு வாய்ப்புக் கொடுத்துப் பாருங்களேன்?
நியாயமான கோரிக்கைதான். கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்போம். விஜயகாந்த் தலைமை. கேப்டன் விஜயகாந்த் கட்சியின் கொள்கைகள் என்ன? திமுக, அதிமுகவை அகற்றுவது. இதைத் தாண்டி இன்னொன்று சொல்ல முடியுமா! கூட்டணியில் இருக்கிற இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் கொள்கைகள் உண்டு. நிறையவே உண்டு. என்ன பேஜாரென்றால் எல்லாமே நவராத்திரி கொலுவில் வைக்கிற சொப்புப் பதார்த்தங்களைப் போன்ற கொள்கைகள். பார்க்க, கேட்க, படிக்க, ரசிக்கப் பிரமாதமாக இருக்குமே தவிர நடைமுறையில் வேலைக்கு ஆகாது. ஏற்கெனவே வளர்ச்சியில் தமிழகம் ஐம்பதாண்டுகள் பின் தங்கியிருப்பதாகப் பெரியவர்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். கம்யூனிஸ்டுகள் அதிகாரத்தில் பங்கெடுத்தால் அதை ஐந்நூறாண்டுகளாக்காமல் ஓயமாட்டார்கள். இந்தப் பக்கம் கேப்டன் கச்சத்தீவை மீட்பதற்கு நாலைந்து பட்டாலியன்களுடன் போயிருக்கும்போது அந்தப் பக்கம் இவர்கள் ஏடாகூடமாக என்னவாவது செய்துவைத்துத் தொலைத்தால் யார் பொறுப்பு?
திருமாவளவன் இருக்கிறார், அவர் பார்த்துக்கொள்வார் என்று சொல்லிவிட முடியாது. ஒரு பக்கம் தலித்துகளை முன்னேற்றிக்கொண்டு இன்னொரு பக்கம் ஈழத் தமிழர்களுக்கு அவர் குரல் கொடுக்க ஆரம்பித்தாலே கம்யூனிஸ்டுகள் குரல்வளையைப் பிடித்துவிடுவார்கள். நண்பர்களுக்குள் சண்டையெல்லாம் வராது. ஆனால் கொள்கைக்கு நட்பு ஆகாதே? அதெல்லாம் பரவாயில்லை, வாசன் இருக்கிறார்; அவர் பஞ்சாயத்து பேசி வைப்பார் என்பீர்களானால், அவர் நட்டு வளர்க்கும் நாலு மரங்களுக்கே இன்னும் நீரூற்ற ஆரம்பிக்கவில்லை. இவர் நால்வர் அல்லது ஐவரணிக்கு எங்கிருந்து மத்தியஸ்தம் பண்ண வருவார்?
வைகோவோ ஹர்ட் ரிடையர்டு அல்லது பதவித் துறவறம் மேற்கொண்டுவிட்டார். இனி எதிலும் போட்டியிடுவதே இல்லை என்பது எத்தனை அதிர்ச்சிகரமான முடிவு! பந்தியிலேயே இல்லாதவர் பாயசத்தில் உப்பு ஜாஸ்தி என்று எப்படிச் சொல்ல முடியும்?
ஒரே குழப்பம். எல்லாமே இடியாப்பச் சிக்கல். நல்ல ரசம் சோற்றுக்குத் தொட்டுக்கொள்ள கூட்டு பிரமாதமாகத்தான் இருக்கும். ஆனால் கூட்டில் போடுகிற காய்கறிகளின் தரம் முக்கியமல்லவா?
ஒரு சிறந்த கூட்டணியாட்சி அரிய பல சாதனைகள் படைக்கக்கூடியதுதான். அதில் சற்றும் சந்தேகம் வேண்டாம். திமுகவும் அதிமுகவும் மாறி மாறி ஆண்ட காலத்தை அமைதியாக மனத்துக்குள் ஓடவிட்டுப் பார்த்தால் எத்தனை அக்கிரமங்கள், எத்தனை அதிகார துஷ்பிரயோகங்கள், எத்தனை மெத்தனம், எவ்வளவு ஊழல் என்று நெஞ்சு பதைக்காமல் இருக்க முடியாது. ஆனால் ஒரு பொருந்தாக்கூட்டணியோ, தரமற்ற கூட்டணியோ, சந்தர்ப்பவாதக் கூட்டணியோ, பதவிதாகக் கூட்டணியோ இந்த திராவிடக் கட்சிகளின் மாற்றாக இருக்க முடியாது.
துரதிருஷ்டவசமாக நமக்கு வாய்க்கிற கூட்டணிப் பதார்த்தங்களெல்லாம் அப்படித்தான் அமைந்துவிடுகின்றன. என்ன செய்ய?
பட்டிமன்ற நடுவர்கள் கூட்டுக் குடும்பமே சிறந்தது என்று தீர்ப்பளிப்பதைக் கேட்டு ரசிக்க யாருக்கும் ஆட்சேபணை இல்லை. ஆனால் நடைமுறை சௌகரியங்களை உத்தேசித்து, தனித்துச் செல்லும் குடும்பங்களே மிகுதி என்பதை எண்ணிப் பார்க்கலாம்.
அடுத்தவாரம் இந்நேரம் ஆட்டத்தில் ஜெயித்தது யாரென்று தெரிந்திருக்கும். யார் வேண்டுமானாலும் ஜெயிக்கட்டும். ஆனால் தோற்பது வாக்காளர்களாக இருந்துவிடக்கூடாது. அதற்குத்தான் இதெல்லாமே!
Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
May 10, 2016
பொன்னான வாக்கு – 43
இந்தத் தேர்தலும் அதன் முடிவுகளும் நல்ல விதமாகவோ கெட்ட விதமாகவோ அதிமுகவையும் திமுகவையும்தான் பாதிக்கப் போகிறது. வழக்கம்போல் போட்டி என்பது இந்த இரு கட்சிகளுக்கு இடையில் மட்டும்தான். மற்ற அத்தனை கட்சிகளும் பந்து எடுத்துப் போடும் பையன்களைப் போல கேலரிக்குப் பக்கத்தில் நின்றிருப்பவர்கள்தாம். ஒரு சிலர் ஒரு சில தொகுதிகளில் வெல்லலாம். அல்லது வெற்றியாளர்களின் வாக்கு சதவீதத்தைக் குறைக்கலாம். திசை மாற்றி அனுப்பி வைக்கலாம். அந்தளவோடு சரி. யாருக்கும் – யாராலும் பெரிய ஆபத்துகள் கிடையாது.
ஆனால் இந்தத் தேர்தல் பிரசார காலம் நமக்கு நெருக்கத்தில் வேறொரு புதிய இம்சையரசர் கூட்டம் உருவாகிக்கொண்டிருப்பதை மிகத் தெளிவாக உணர்த்தியிருக்கிறது. இந்த ஜனநாயகத்தின் பேஜாரே இதுதான். யார் வேண்டுமானாலும் வரலாம். என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.
கடந்த சில தினங்களாக இடைவெளி விட்டு விட்டு சீமானின் பிரசார வீடியோக்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். முன்பெல்லாம் வேலைக்கிடையில் குறு ஓய்வுக்காக இம்மாதிரி கவுண்டமணி செந்தில் படக்காட்சிகளைப் பார்ப்பேன். ஓய்வுக்காகவும் பொழுது போக்குக்காகவும் பார்க்கிற காட்சிகளில் தத்துவார்த்தம் தேடக்கூடாது என்பது தெரியாததல்ல. ஆனால் முன்னாள் சினிமாக்காரரென்றாலும் சீமான் பேசுவது அரசியல். சினிமாவைப் போல் சிரித்துவிட்டு நகர்ந்துவிட முடியாத பிராந்தியம். தவிரவும் தேர்தல் காலம். அவர் சாடுகிற ஜெயலலிதா, அவர் சாடுகிற கலைஞர், அவர் சாடுகிற விஜயகாந்த் உள்ளிட்ட யாருமே திருப்பி அவரைச் சாடுவதில்லை என்பதை விழிப்புடன் கவனிக்கிறேன்.
கண்டுகொள்ளாதிருப்பதைக் காட்டிலும் சிறந்த தண்டனையில்லை என்று அனைவருக்குமே தெரிந்திருக்கிறது. நல்லது. ஆனால் நாம் கண்டுகொள்வோம். ஏனெனில் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை கொஞ்சம் கருத்தூன்றிப் படிக்க வைத்தது. அபத்தங்கள் இல்லாமல் இல்லை. அபாயங்கள் இல்லாமல் இல்லை. ஆரம்பத்திலேயே, ‘அன்பான சர்வாதிகார ஆட்சி அமைக்க விருப்பம்’ என்று அதில் சொல்லியிருந்தார் சீமான்.
இதெல்லாம் பிரபாகரமேனியா படுத்துகிற பாடு. தெரியாமலில்லை. ஈழத் தமிழர்களே கெட்ட கனவுகளை மறந்துவிட்டு நிம்மதியாக வாழ வழிதேடி நகர்ந்துவிட்ட நிலையில், இங்கே இன்னும் விடாப்பிடியாக மேதகு, மேதகு என்று பிரபாகரனை உரலில் இட்டு ஆட்டி, உளுந்துவடை சுடப் பார்க்கிறார் சீமான். மீசையை எடுத்துவிட்டு காட்டுக்குள் பிரபாகரனைப் பார்க்கப் போன சம்பவத்தை, வசமாகச் சிக்கிய ஒரு அப்புராணிப் பத்திரிகையாளரிடம் சீமான் விவரிக்கும் காட்சி திரும்பத் திரும்ப இணையத்தில் வலம் வந்துகொண்டிருக்கிறது. எத்தனை மீம்கள், எத்தனை நையாண்டி மேளங்கள்!
முன்னாள் பெரியாரிஸ்ட், முன்னாள் விஜயகாந்த் கட்சிப் பிரசாரகர், முன்னாள் பிரபாகர விசுவாசியாகவும் தன்னை அறிவித்துக்கொள்ளப் போவது எப்போது என்று கூசாமல் கேட்கிறார்கள். ஏனெனில், நிலைபாடுகளை மாற்றிக்கொள்வதற்கு சீமான் தயங்குவதே இல்லை. சாதி மதமெல்லாம் என்னத்துக்கு? தமிழினம் என்ற அடையாளம் போதும் என்றவர்தான், இன்று பிரசித்தி பெற்ற சாதிக் கட்சித் தலைவர்களைக் காட்டிலும் சாதி வெறிப் பேச்சுகளில் சிக்சர் அடித்துக்கொண்டிருக்கிறார். இந்தப் பக்கம் ராமேஸ்வரம் கோயிலை இடித்துவிட்டு ராவணனுக்குக் கோயில் கட்டுவேன் என்று சொல்லிவிட்டு அந்தப் பக்கம் முப்பாட்டன் முருகனுக்காக முறுக்கு பிழிகிறார். கலைஞருக்கு இந்து மதம் மட்டும்தான் ஒவ்வாது; நமக்கு எந்த மதமும் தேவையில்லை என்றவர், மறக்காமல் போனில் கிறிஸ்தவப் பாதிரியாரிடம் பாவ மன்னிப்புக் கேட்டுவிடுகிறார். வாட்சப் ஆடியோக்களின் வடிவில் வையம் சுமக்கிறது வம்பு. ஆட்சிக்கு வந்தால் தலைநகரை ‘சோழப்பாட்டன் ஆண்ட’ உறையூருக்கு மாற்றுவேன்; அங்குதான் தலைமைச் செயலகம் அமையும் என்றெல்லாம் கலவரப்படுத்துவதோடு நிறுத்திக்கொள்கிறார்களா என்றால் அதான் இல்லை. அன்னிய முதலீடுகளைத் தடை செய்து, ஆடுமாடு மேய்ப்பதை அரசு உத்தியோகமாக்குவோம் என்று கூசாமல் பேசுவோரை என்ன செய்ய?
சந்தேகமின்றி சீமான் ஒரு நகைச்சுவைக் கலைஞர். அவரது கட்சி ஆசாமிகளும் அவரை அடியொற்றியேதான் பேசுகிறார்கள். ஆனால் என் கவலையெல்லாம் அவர் பின்னால் ஓடுகிற இளைஞர்களைப் பற்றியது. முன்னொரு காலத்தில் திராவிட இயக்கத் தலைவர்களின் தமிழில் கட்டுண்டு பின்னால் போன கூட்டம் அளவுக்கு இல்லையென்றாலும் இந்தத் தமிழுக்கும் ஒரு கூட்டம் சேரத்தான் செய்கிறது. சும்மா சொல்லக் கூடாது. சீமான் பிரமாதமாகவே பேசுகிறார். தங்கு தடையற்ற வளமான மொழி அவரிடம் இருக்கிறது. மேடைக்குத் தேவையான ஆக்ரோஷம் அமர்க்களமாகக் கூடி வருகிறது. ஆனால் மொழியின் பூப்பந்தலுக்குள் அவர் மூட்டை மூட்டையாகக் குப்பைக் கழிவுகளைச் சேகரித்து வைப்பதுதான் இம்சிக்கிறது.
இந்தத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் இடம் சொல்லிக்கொள்ளும்படியாக இருக்க வாய்ப்பில்லை என்றாலும் ஒரு புதிய அரசியல் சக்தியாக அவரைக் கருத விரும்புகிற, அதிகம் படிக்காத, சூதுவாது தெரியாத அப்பாவி இளைஞர்களுக்கு ஒன்று மட்டும் சொல்ல நினைக்கிறேன். சீமான் திறந்திருப்பது ஒரு டி ஷர்ட் கடை. அங்கு பெரியார் படம் போட்ட டி ஷர்ட்டும் கிடைக்கும். விஜயகாந்த் படம் போட்ட டி ஷர்ட்டும் கிடைக்கும். பிரபாகரன் டி ஷர்ட்டும் கிடைக்கும். நாளைக்கு டிரெண்ட் மாறுமானால் திருப்பதி வெங்கடாசலபதி படம் போட்டதும் கிடைக்கும்.
ஆளுமைகளை டி ஷர்ட்டிலும் அபத்தங்களை நெஞ்சுக்குள்ளும் சுமந்து திரிவதில் என்ன இருக்கிறது? சொன்னேனே, கௌண்டமணி செந்திலின் இடம்தான். சும்மா சிரித்துவிட்டுக் கடந்து போவதே தேச நலனுக்கு உகந்தது.
Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)