Error Pop-Up - Close Button This group has been designated for adults age 18 or older. Please sign in and confirm your date of birth in your profile so we can verify your eligibility. You may opt to make your date of birth private.

இரண்டு விநோதக் கதைகள்

குளிர்சாதனப் பெட்டி





இசபெல் ஸாஜ்ஃபெர்





தமிழில் : லதா ராமகிருஷ்ணன்









என்னுடைய பாட்டி இறந்து விட்ட பிறகும் இடுகாட்டிற்குப் போக மறுத்தாள். நாங்கள் என்ன சொல்ல இயலும்? குளிர்சாதனப் பெட்டியிலிருந்த கீழ்தள அடுக்குகளை அகற்றிவிட்டு, அங்கே அவளை இடுப்புப் பகுதியிலிருந்து நேராய் நிமிர்த்திக் காய்கறி வைக்கும் ட்ரேயில் பொருத்தி வைத்தோம். நாங்கள் கைப்படியை இழுத்துத் திறக்கும்போதெல்லாம் அவள் புன்சிரிப்பாய்க் கேட்பாள்





– ஹாய், எப்படியிருக்கிறாய் இன்று?





நாங்கள் குளிர்சாதனப்பெட்டியின் கதவைத் திறந்து வைத்தபடி, அவளோடு அளவிளாவிய படியே காலை உணவை உட்கொள்வோம்.





அவளால் பெரிய பிரச்சனை எதுவுமில்லை. ஒரே ஒரு கஷ்டம் அவள் ஆக்கிரமித்துக் கொண்ட இடம் தான். அவளுடைய உணர்வுகளைப் புண்படுத்த விருப்பமில்லை என்றாலும் எங்களுக்கு உணவுப்பொருட்களையும், பானங்களையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டிய தேவையிருந்தது. அவளுக்குத் தெரியாமல் இரண்டாவது குளிர்சாதனப் பெட்டியொன்றை வாங்கி வந்தோம். அதை உபயோகப்படுத்த தொடங்கினோம். ஆனால், அது குறித்து அவளுக்குச் சந்தேகம் உண்டாக அதிக நாளாகவில்லை. ‘எங்கே போயிருந்தீர்கள்?’ என்று கேட்டாள் அவள்.





‘எனக்கு உங்களை உளவு பார்க்க விருப்பமொன்றுமில்லை. ஆனால் ஒரு முழு நாள் உங்களைக் காணவில்லையென்றால் எனக்குக் கவலையாகி விடுகிறது’ என்று அழுதாள். நாங்கள் அவளை அணைத்துக்கொண்டோம்.





அவள் கழுவப்படாத கீரையாய் வாடையடித்தாள்.





என்னுடைய பெற்றோர்கள் பிரிந்துவிட முடிவு செய்தார்கள். அம்மா, மெஜோரடாவில் உள்ள ஆசிரமம் ஒன்றுக்குச் சென்றாள். அப்பா நியூயார்க் நகருக்குக் குடிபெயர்ந்தார். என்னுடைய சகோதரன் கல்லூரிக்குச் செல்ல, நான் தனியாகப் பாட்டியுடன் வீட்டில் தங்கியிருந்தேன்.





ஒரு நாள் இரவு என்னுடைய ஆண் நண்பன் அவள் இருக்கும் குளிர்சாதனப்பெட்டியைத் தவறுதலாகத் திறந்துவிடப் பயந்து போய் வீறிட்டு அலறினாள் அவள்.





அவனும் பயத்தில் அலறினான். அவனிடம் அவளைப்பற்றி நான் கட்டாயம் கூறியிருந்திருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது.





அதற்குப் பிறகு அவன் என்னைத் தேடி என் இடத்திற்கு ஒருபோதும் வரவேயில்லை. அம்மா ஆண்களை வீட்டில் அங்குமிங்கும் அலைய அனுமதிப்பது தொடர்பாகப் பாட்டி எனக்கு ஒரு நீண்ட உரையாற்றினாள். ஆனால் நான் அதைக் காது கொடுத்துக் கேட்கவில்லை.





அவள் முகத்திலறைவதாய்க் குளிர்சாதனப்பெட்டியின் கதவை படீரெனச் சாத்தினேன். இது என்னைக் கொடூர மனுஷியாய்ப் புரிய வைத்தாலும் சரி, அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை.





அக்கம் பக்கத்தார் உள்ளே வந்து மெஜோராடோவிலிருந்து அம்மா திரும்பி வரும்வரை பாட்டியைப் பார்த்துக் கொண்டார்கள்.





நான் அந்த வீட்டைவிட்டு வெளியேறிவிட்டேன்.





**





விற்பனைக்கு





லியானெ மெர்ஸெர்





தமிழில் : லதா ராமகிருஷ்ணன்









ஸாண்ட்டியாகோ என்ற பெயரை தாங்கிய வெறும் இரண்டு வீட்டு வரிசைகள்’ மட்டுமே கொண்ட நீண்ட அந்தக் குறுகிய தெருவின் மீது நிற்கும், தொய்ந்த வெண்ணிற மூடு சட்டங்களைக் கொண்டிருந்த ஒரு சிறிய மஞ்சள் வீட்டின் சமையலறையில், அனிடா என்று அழைக் கப்படும் மூதாட்டியொருத்தி ஒரு கருநிற வாணலியில் வார்த்தைகளை வறுக்கிறாள்.





பதமான இளம்பழுப்பு, தூய்மையான லினோலியப் பரப்பின் மீது, ஒரு கோழி மற்றும் ஒரு சேவல் படபடத்துக் கொண்டிருக்கின்றன. அவர்கள் உணவுக் கொடைகளிலும், வெந்த படையல்களிலும் நம்பிக்கை கொண்டவர்களாய் விளங்கினார்கள்.





ஆனால், அனிடா மிகவும் கவனமாக இருந்தாள். வெகு சில வார்த்தைகள் தீ மூட்டி விடும். அவற்றையும் விடக் குறைவான வார்த்தைகள் அடையாளம் தெரியாமல் எரித்துக் கரித்துவிடும். அனிடா அந்தப் பெயரற்ற சேவலுக்கும் கோழிக்கும் கச்சா வார்த்தைகளால் தீனியிட்டு வருகிறாள். அந்தச் சுவையை விரும்ப அவை பழகிக்கொள்ளத் தொடங்கியிருக்கின்றன.





மாணிக்கக் கல் மோதிர மொன்றிலிருந்தும், மற்றும் அவளுடைய அம்மா அவளுக்குப் பரிசளித்திருந்த பச்சை மற்றும் மஞ்சள் நிறக் குழிவான கண்ணாடிக் கிண்ணங்களிலிருந்தும் அனிடா அந்த நாளுக்கான பேச்சுக்குரிய மொழிக்கூறுகளைப் பொறுக்கி எடுத்துக் கொள்கிறாள்.





அவள் ஒன்பதாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது, ஆங்கிலத்தை ஸ்பானிய மொழியில் பெயர்த்தெழுதவும், மறுபடியும் ஆங்கில மாக்கவும், வாக்கியங்களின் தன்மைகளை விளக்கும் போக்கில் முனைகையில் அந்த வேலைக்கு அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் அவள் D+ தான் வாங்கினாள் என்றாலும் இலக்கணப்பாடம் அவளுக்கு மிகவும் விருப்பமானதாயிருந்தது.





அவள் கழுவுகிறாள், துண்டமாக்குகிறாள், சீவுகிறாள், நீவிச் சீராக்குகிறாள். பொரித்து முடித்த பிறகு அனிடா சுடச்சுட இருக்கும் வார்த்தைகளை வளைந்த தேக்குத் தட்டத்தின் மீதுள்ள காகிதத்துவாலைகளின் மேல் போடுகிறாள்.





வார்த்தைகள், அவற்றை அனிடா வெளிறிய ‘லினன்’ துணியாலான கைக்குட்டைகளின் மடிப்புகளுக்கிடையே வைக்கையில், குளிர்ந்திருக்கின்றன. அந்தக் கைக்குட்டைகள் பல முறை நனைத்துத் தோய்க்கப்பட்டிருப்பதன் விளைவாய் ‘காக்கர் ஸ்பானியில் ‘நாய்க்குட்டியின் காதுகளைப் போல் மிருதுவாக இருக்கின்றன. அவள் அந்தத் துணியால் மூடிய வார்த்தைகளை நான்கு கூடைகளில் போட்டு அவற்றைச் சந்தைக்கு எடுத்துச் செல்கிறாள்.





அங்கே அவள் மொரமொரா பிஸ்கெட்டுகளைத் தயாரிப்பவனுக்கு அருகில் குந்தி உட்கார்ந்தபடி, மதியக் கோழித்தூக்க நேரத்திற்குப் பிறகு, சுற்றுலாப் பயணிகளின் உரத்த குரல்கள் அந்தச் சந்தையின் சின்ன இசையை மூழ்கடித்து விடுவதற்கு முன் அவற்றை விற்பனை செய்கிறாள்.





அவளுடைய வாடிக்கையாளர்கள் டி – ஷர்டுகளும், ‘டாக்கர்’களும் அணிந்த, வழிந்தோடும் இடுப்புப் பாவாடைகளும், மென்மையான துணிகளிலான மேற்சட்டைகளும் அல்லது குட்டைக் காற்சட்டைகளும், சாயமிடப்பட்ட, சூரிய வெப்பத்திலிருந்து காக்கவும், கைகளி லுள்ள பச்சைக்குத்தல்களை மறைக்கவுமாய் நீண்டகைப்பகுதியைக் கொண்ட ‘டெனிம்’ சட்டைகளும் அணிந்த, நுட்பமும், தீவிரமும் வாய்ந்த மனிதர்கள்.





அனிடா அவர்கள் என்ன எழுதுகிறார்கள் என்று கேட்டதில்லை. தங்களுடைய எழுத்துக்கள் நிராகரிக்கப்பட்டுவிட்டது குறித்தும், சரியான வார்த்தைகளைத் தங்களால் கண்டெக்க முடியாமலிருக்கும் ஆற்றலின்மை குறித்தும் அவர்கள் புகார் சொல்லும் போது அவள் அவற்றைத் காது கொடுத்துக் கேட்பதில்லை.





அவளுடைய வியாபாரம் பேச்சுவாக்கிலே மிகவும் வளர்ச்சியடைந்து விட்டது. முந்தைய வாரம், காரோட்டி ஒருவன் கருநிற லின்கான் வண்டியொன்றை, அங்கே நிறுத்தி வார்த்தைகளை வாங்கிச் சென்றான். அந்தச் சமயம் உள்ளூர் கல்லூரியொன்றின் ஆங்கிலத் துறைத் தலைவர் ஒரு கலவையாக, பெயர்ச் சொற்களையும் வினைச் சொற்களையும் சேர்த்து விலைக்கு வாங்கினார்.





அனிடா ஒரு கேள்வியும் கேட்கவில்லை.





வார்த்தைகளின் விலை ஒரேயளவாக இருப்பதில்லை. அவற்றின் சுவையும் ஒன்றாக இருப்பதில்லை.





பெயர்ச்சொற்கள் சில சமயங்களில் கொழ கொழத்து அடர்ந்த காய்கறி சூப்பு போன்ற சுவையில் இருந்தன. வேறு சமயங்களில் இறைச்சியும் காய்கறியும் சேர்த்து செய்தது போல் சுவைத்தன. அந்த வார்த்தைகள் நெருப்பிற்கு மேலாய் உயிர்த்தெழுந்து வரும் ஓசையை அனிடா கவனமாகச் செவி மடுக்கிறாள்.





பின், அவற்றின் ருசியை மேம்படுத்த தோதாய் சில மணம் சேர்க்கும் பொருட்களைப் பயன்படுத்துகிறாள். அவளுடைய பெயரெச்சங்கள் மிளகுதான் என்று திட்டவட்டமாகச் சொல்லி விட முடியாத ஒன்றால் நாக்கில் உறைக்கின்றன. வினையெச்சங்கள் நவதானிய உணவு மாவுக்கலவையில் நனைத்த விதத்தில் மலிவாகவும், முழுக்கக் கொழுப்புடனும் இருக்கின்றன. வினைச்சொற்கள் மனதிற்கு நெருக்கமானவை. அனிடா மூன்று வகைகளை மட்டுமே பொறிப்பது வழக்கம்.





மறக்கப்பட்ட, அந்தக் கிழிசல் மனிதர்கள் எலுமிச்சையும், கொத்தமல்லியும் கலந்த அளவில் பளபளத்தொளிர்ந்து, வாய்க்குள்ளும், மூளைக்குள்ளுமாய் வெடித்துச் சிதறும் வினைச்சொற்களுக்காய்த் தங்கள் பாக்கெட்டிலுள்ள நாணயங்களையெல்லாம் காலி செய்து விடுகிறார்கள்.





எதிர்கால வினைமுற்று வெள்ளைப்பாகுகள், கரிய விழிகளைக் கொண்ட இளை ஞர்களுக்குக் காதல் கவிதைகளில் தங்கள் ரகசிய இதயங்களை எழுதும் இளம் பெண்களின் கைகளைத் தேடியடைந்து இடம் பிடித்துக்கொண்டன.





ஆச்சரியக்குறிகள் அவர்கள் இன்னமும் வாங்குமளவு வளர்ந்துவிடாத தொலைவிலுள்ள சிகரெட் பாக்கெட்டுக்களிலிருந்து காப்பாற்றப்பட்டதாகின.





ஆனால், நடுத்தர வயது பெண்களிடம் தான் அவள் அந்த மூன்றாவது ரகத்தை விற்பனை செய்கிறாள். நினைவு கூறப்பட்ட காதலர்களின் குளிர்மையில் நிறமற்று சுருண்டு கொள்வதான, மரிக்கும் தறுவாயிலுள்ள ரோஜா இதழ்களாய் வெப்பத்தின் பிடியில் சிக்கிக்கொண்ட ‘நிபந்தனை வினைச் சொற்கள்’. சில பெண்கள் அவளை ஏறெடுத்துப் பார்ப்பதில்லை; அவர்கள் தங்களுடைய ரகசிய ‘வாங்கல்களை முடித்துக்கொண்டு சூடான முறுமுறு பிஸ்கெட்டுகளின் உப்புச்சப்பு வாடைக்குள் மறைந்து போய் விடுகிறார்கள். மற்றவர்கள், அவர்களுடைய கண்கள் விலையுயர்ந்த ஸ்படிகக்கற்கள், இழப்புணர்வுகள் மற்றும் தோல் பர்ஸுகளைக் கொண்ட இடைபாதைகளின் வழியாய் கண்கள் தழைந்தோட தன்னிலை விளக்கங்கள் அளிக்கிறார்கள்.





அவர்களுடைய பணத்தைப் பெற்றுக்கொண்ட பிறகு, அவர்கள் இன்னமும் பேசிக் கொண்டிருக்கையிலேயே, அனிடா அவர்களைத் தாண்டி அடுத்த வாடிக்கையாளரை நோக்குகிறாள். இன்னும் வேறு சிலர் எதிர்ப்புணர்வோடு பட்டியல்களும், காகிதச்சீட்டுகளும் நிரம்பிய காற்சட்டைப்பையிலிருந்தும், சட்டைப்பையிலிருந்தும் கசங்கிச் சுருண்டிருந்த டாலர் நோட்டுக்களை வெளியே எடுக்கிறார்கள்.





இந்தப் பெண்கள் எல்லோரையுமே அவர்கள் மேம்போக்கானவர்கள் என்று அனிடாவால் கூறிவிட முடியும். ஏனெனில், அவர்களுடைய கண்கள் அவர்களுடைய கதைகளை, வார்த்தைகளைவிட மிக அதிகளவு துல்லியமாகச் சொல்லுகின்றன. ஆனால், அவள் அப்படிக் கூறவில்லை.





••





நன்றி: அட்சரம் இலக்கிய இதழ்.

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 17, 2020 23:21
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.