S. Ramakrishnan's Blog
September 12, 2025
காஃப்கா புதிய திரைப்படம்
அக்னீஸ்கா ஹாலண்டின் இயக்கத்தில் எழுத்தாளர் ஃபிரான்ஸ் காஃப்காவின் வாழ்க்கை வரலாற்று படமாக்கபட்டிருக்கிறது.
Franz 2025 படத்தின் முன்னோட்ட காட்சி சிறப்பாகவுள்ளது.
இப்படம்Toronto International Film Festival ல் திரையிடப்பட்டுள்ளது.
September 11, 2025
காஷ்மீரின் குரல்
டேனிஷ் ரென்சு இயக்கிய சாங்ஸ் ஆஃ பாரடைஸ் காஷ்மீரின் புகழ்பெற்ற பாடகியான ராஜ் பேகத்தின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கிறது. மிக நேர்த்தியாக உருவாக்கபட்ட திரைப்படம். படத்தில் ராஜ் பேகம் நூர் பேகமாக மாற்றப்பட்டிருக்கிறார். இளமைக்கால நூர் பேகமாக நடித்துள்ள சபா ஆசாத் மிகவும் சிறப்பாக நடித்துள்ளார். குறிப்பாக அவரது உடல்மொழி மற்றும் உடகள் குருவின் முன்னால் அமர்ந்து பாடும் விதம், மேடையில் பாடும் முறை என அற்புதமாக நடித்துள்ளார்.
சபா ஆசாத் நிஜமான பாடகி என்பதால் அந்தக் கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறார்.

அவரது தந்தையாக பஷீர் லோன் நடித்துள்ளார். அவர் நடிக்கிறார் என்ற உணர்வேயில்லை. நிஜமான தந்தையாகவே உணரச் செய்கிறார். அது போலவே நூர் பேகத்தின் பாடும் திறமையை அடையாளம் கண்டு அவளுக்கு இசை கற்றுக் கொடுத்து உலகம் அங்கீகரிக்கச் செய்த குருவாக ஷிஷிர் சர்மா பிரமாதமாக நடித்துள்ளார்
காஷ்மீரின் இசை மற்றும் கவிதை மரபை படம் நேர்த்தியாகச் சித்தரிக்கிறது. லாலேஸ்வரி, ஹபா ஹதூன் எனக் காஷ்மீர் பெண்கவிகளையும், சூபி மரபினையினையும் படம் அடையாளப்படுத்துகிறது
வின்சென்சோ கண்டோரெல்லி ஒளிப்பதிவு காஷ்மீரின் அழகையும், அந்தக் காலக் கட்ட உணர்வையும் அழகாக வெளிப்படுத்தியுள்ளது.
ரேடியோ காஷ்மீரின் முதல் பெண் பாடகியும் புகழ்பெற்ற இசைக்கலைஞருமான நூர் பேகத்தினைச் சந்தித்து நேர்காணல் செய்வதற்காக அமெரிக்காவில் இசை ஆய்வு செய்யும் ரூமி காஷ்மீர் வருகிறான். ஸ்ரீநகரில் தனது மகள் மற்றும் பேத்திகளுடன் நூர் அமைதியாக வாழ்ந்து வருகிறார். தன்னை நேர்காணல் செய்ய வந்துள்ள அவனைச் சந்திக்க நூர் பேகம் விரும்பவில்லை. ஆனால் விடாப்பிடியான அவனது காத்திருப்பு மற்றும் இசை ஆர்வம் அந்தச் சந்திப்பை சாத்தியமாக்குகிறது. அவனிடம் தனது கடந்தகாலத்தை நூர் பேகம் விவரிக்கிறார்.
டெய்லரின் மகளாக எளிய குடும்பத்தில் பிறந்த அவள் எப்படி இசைகற்றுக் கொண்டாள். ரேடியாவின் இசைப்போட்டியில் கலந்து கொண்டு எவ்வாறு வெற்றி பெற்றாள். குடும்பம் மற்றும் உறவினர்களின் எதிர்ப்பிற்குப் பயந்து தனது பெயரை மறைத்துக் கொண்டு பாடினாள். புகழ்பெற்றாள் என்பதைப் படம் அழகாக விவரிக்கிறது. கதையில் பெரிய திருப்பங்கள் எதுவுமில்லை. உண்மைக்கு மிக நெருக்கமான திரைக்கதை. படத்தின் இசையமைப்பாளர் பீட்டர் கிரெக்சன். சிறப்பான இசைய வழங்கியுள்ளார்.

ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தில் படித்து முடித்த ஆசாத் மக்பூல் ஷா ஒரு கவிஞர். காஷ்மீரின் புகழ்பெற்ற குடும்பத்தைச் சேர்ந்தவர். ரேடியோவில் அவரது கவிதைகளைத் தான் நூர் பேகம் பாடுகிறார். அவர்களுக்குள் ஏற்படும் காதல். அதற்கு ஊராரின் எதிர்ப்பு. அவர்கள் திருமணம் நடைபெறும் விதம் என நூர்பேகத்தின் தனிப்பட்ட வாழ்க்கையினையும் படம் விவரிக்கிறது. மக்பூல் ஷாவாக ஜைன் கான் துரானி நடித்துள்ளார்.
தனது மகளின் இசைத் திறமையைப் புரிந்து கொள்ளாமல் அவள் மீது கோபம் கொள்கிறார் நூரின் அம்மா பின்பு நூர் புகழ்பெற்ற பாடகியாகிறாள். அவளது பாடலை மக்கள் கொண்டாடுகிறார்கள். சந்தையில் நூரின் அம்மாவினை சந்திப்பவர்கள் எல்லோரும் அவளுக்கு நன்றி சொல்கிறார்கள். தனது தவற்றை உணர்ந்து தனது மகளிடம் அவள் மன்னிப்பு கேட்கும் காட்சி அழகானது. அப்போது நூரின் முகத்தில் வெளிப்படும் உணர்ச்சிகளே அவளது உண்மையான சந்தோஷம்.

ரேடியோ நிலையத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் சேகரித்து வைக்கபட்டிருந்த அவளது பாடல்கள் முழுவதும் அழிந்து போகின்றன. அப்போது நூர் அடையும் துயரமும், ஒரு திருமணத்தில் நூர் பாடுவதைக் கேட்கும்போது, அதில் கவரப்பட்டு, அவளுக்குப் பயிற்சி அளிக்க குரு முடிவு செய்வதும்,. நூர் பேகம் போலவே பாடுவதில் ஆர்வம் கொண்டு வீட்டை விட்டு ஒடிவந்த இளம்பெண் அவளைச் சந்தித்து வாய்ப்பு கேட்பதும் மறக்க முடியாத காட்சிகள்.
காஷ்மீரி இசை மற்றும் கவிதைகளின் பெருமையைச் சொல்லும் இப்படம் ராஜ் பேகத்தின் வாழ்க்கையைச் சிறப்பாக, கலைநேர்த்தியோடு பதிவு செய்துள்ளது.
September 9, 2025
குற்றமுகங்கள் 21 கார்டன் மார்த்தா
மதராஸில் எடுக்கபட்ட முதல் புகைப்படம் எது, யாரைப் படம் பிடித்தார்கள் எனத் தெரியவில்லை ஆனால் கார்டன் மார்த்தா புகைப்படம் எடுத்துக் கொண்ட போது அவளுக்கு வயது நாற்பது.

தனது உருவத்தை அச்சு அசலாகத் தன்னுடைய கையில் வைத்து பார்க்க முடியும் என்று அவள் கற்பனை கூடச் செய்ததில்லை. ஆகவே புகைப்படத்தை அவள் விநோதமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
கண்ணாடி காட்டாத எதையோ புகைப்படம் உணர்த்திவிடுகிறது. கண்ணாடியை விட்டு நாம் நகர்ந்தவுடன் பிம்பம் மறைந்துவிடும். ஆனால் கையில் உள்ள புகைப்படம் மாறாது.

கார்டன் மார்த்தா கோவாவில் பிறந்து வளர்ந்தவள். மதராஸிற்கு எதற்காக வந்தாள் என்று தெரியாது. ஆனால் 1846ல் பழவேற்காட்டில் பெரிய பங்களா ஒன்றில் வசித்து வந்தாள்.
தனது வீட்டிற்குள் எவரையும் அவள் அனுமதித்ததில்லை. எவரை சந்திப்பதாக இருந்தாலும் தனது தோட்டத்தில் தான் சந்திப்பாள். வீட்டைச் சுற்றி நூற்றுக்காண பூச்செடிகள், எலுமிச்சை மரமும் நெல்லி மரமும் கொண்ட பெரிய தோட்டத்தை உருவாக்கியிருந்தாள். அதன் மேற்கு பகுதியில் மரத்தாலான இருக்கைகள் வட்டமேஜை ஒன்றையும் உருவாக்கியிருந்தாள்.
மழை பெய்யும் நாட்களில் அவள் தனித்து அமர்ந்து நனைவதற்காகக் கல்லில் ஒரு இருக்கையும் உருவாக்கப்பட்டிருந்தது. அதில் அவளைத் தவிர வேறு எவரும் அமர இயலாது. மழைநாளில் கையில் ஒயின் போத்தலுடன் அவள் அந்த இருக்கையில் அமர்ந்து கொண்டு குடித்துக் கொண்டிருப்பாள்.
கார்டன் மார்த்தா ஆண்கள் அணியும் சட்டையும் இரண்டு அடுக்குக் கொண்ட அடர்சிவப்பு அல்லது நீலப்பாவாடையும் அணிந்திருப்பாள். பருத்த உடல். உப்பிய முகம். உள்ளோடிய கண்கள். கார்டன் மார்த்தாவை குற்றவாளிகளின் அன்னை என்று அழைத்தார்கள். அவளது உத்தரவின் படி ஏவல் செய்யும் கூலிக்கொலையாளிகள் அவள் வசமிருந்தார்கள். தங்களது தொழில்போட்டியாளர்களைக் கொலை செய்வதற்கு வணிகர்கள் அவளைப் பயன்படுத்திக் கொண்டார்கள். சில வேளைகளில் கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகளைக் கொல்வதற்குக் கூட அவள் பணம் பெற்றிருக்கிறார்கள். யாரை வைத்து எப்படிக் கொலையை நடத்துவாள் என்று தெரியாது. ஆனால் அவளிடம் பணம் கொடுத்துவிட்டால் காரியம் முடிந்துவிடும் என்பதை வணிகர்கள் உணர்ந்திருந்தார்கள்.
கார்டன் மார்த்தா தான் கொன்ற ஒவ்வொருவர் நினைவாகவும் ஒரு ரோஜா செடியை வைத்திருந்தாள் என்றார்கள். அந்தச் செடியிலிருந்து ஒரு ரோஜாவை கூட அவள் பறிக்க மாட்டாள். செடியிலிருந்து பூவை பறிக்கும் உரிமை தனக்குக் கிடையாது என்று சொல்லுவாள்.
கார்டன் மார்த்தாவிற்கு மதநம்பிக்கை கிடையாது. ஆனால் கர்ப்பிணி பெண்களைக் கண்டால் அவர்கள் முன்பாக மண்டியிட்டு ஆசி கேட்பாள். அவள் தனது வீட்டுக் கட்டிலில் உறங்குவதுமில்லை. போதை மிகுதியில் குதிரை லாயத்தில் தான் உறங்குகிறாள் என்றார்கள்.
நடனம் இசை என எதிலும் ஈடுபாடு இல்லாத கார்டன் மார்த்தா குடிப்பதில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தாள். கப்பலில் வரும் மதுவகைகளை மொத்தமாக வாங்கிக் கொண்டாள். தனிமையில் மது அருந்துவாள். புகைப்படம் எடுத்துக் கொள்வது அவளுக்குக் கிளர்ச்சியூட்டியது.
கார்டன் மார்த்தா ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் புகைப்படம் எடுத்துக் கொண்டாள். புதிய புகைப்படத்திற்காகத் தன்னை அலங்காரம் செய்து கொண்டாள். புதிய உடைகள் வாங்கி அணிந்து கொண்டாள். ஜேம்ஸ் ஜார்ஜ் என்ற அந்தப் புகைப்படக்கலைஞன் ஒவ்வொரு முறையும் அவளைச் சிரிக்கும்படி சொல்லுவான். அவளால் புகைப்படத்திற்காகச் சிரிக்க முடியாது.
வீடு திரும்பிய மார்த்தா அவளது வெள்ளிக்கிழமை புகைப்படங்களைத் தரையில் பரப்பி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பாள். ஒருமுறை அப்படிப் புகைப்படம் எடுத்துவிட்டு அவள் வீடு திரும்பிய மறுநாள் ஜேம்ஸ் ஜார்ஜ் பிரிண்ட் போட்ட அவளது புகைப்படத்தை ரங்கையா என்பவர் மூலம் கொடுத்து அனுப்பி வைத்தான்.
அந்தப் புகைப்படத்தில் அவள் கறுப்பு உடை அணிந்திருந்தாள். அதுவும் பூவேலைப்பாடுகள் கொண்ட உடை. அப்படி ஒரு புகைப்படத்தை அவள் எடுக்கவேயில்லை. அந்த உடையும் அவளிடம் கிடையாது. ஆனால் அதே முகம். அதே உருவம். தன்னைப் போலவே இருக்கும் இன்னொரு பெண் இருக்கிறாளா என அவளுக்குச் சந்தேகம் உருவானது.

கறுப்பு ஆடை புகைப்படத்துடன் ஜேம்ஸ் ஜார்ஜை தேடிச் சென்றாள். அவன் புகைப்படம் மாறிவிட்டது என்று அவளது புகைப்படத்தைத் தேடி எடுத்துக் கொடுத்தான். அந்தக் கறுப்பு உடை அணிந்தவள் தன்னைப் போலிருக்கிறாள். அவள் யார் என மார்த்தா விசாரித்தாள். தனக்கு நினைவில்லை. லிஸ்டரின் சகோதரி என ஞாபகம் என்றான். அவள் கர்னல் லிஸ்டரின் வீட்டிற்குச் சென்று விசாரித்தாள். அப்படி ஒரு சகோதரி கிடையாது என லிஸ்டர் மறுத்தார்.
அந்தப் பெண் யாரெனத் தேடிக் கண்டுபிடிக்கும் வேலையில் மார்த்தா இறங்கினாள். அவளைப் பற்றிய விபரம் எதுவும் கிடைக்கவில்லை. பலரும் அது மார்த்தாவின் புகைப்படமே தான் என்றார்கள்.
கார்டன் மார்த்தாவிற்கு அவள் யாரெனத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை வெறியாக மாறியது. அவளைக் கண்டுபிடிப்பதற்காகத் தனது பணத்தைத் தாராளமாகச் செலவு செய்ய ஆரம்பித்தாள். தன்னைக் கொன்றுவிட்டு அந்தப் பெண்ணைத் தனது இடத்திற்குக் கொண்டுவந்து விடுவார்கள் என்று பயப்படத் துவங்கினாள். தன்னைப் போல இன்னொரு பெண் இருப்பது நிஜமில்லை என்று ஆத்திரத்தில் கூக்குரலிட்டாள்.
பெயரில்லாத அந்தக் கறுப்பு உடை அணிந்த பெண் அவள் கொல்ல வேண்டியவளாக மாறினாள். அவள் யாராக இருந்தாலும் தேடிக் கொலை செய்துவிடும்படி மார்த்தா கட்டளை இட்டாள். அவளது கூலிக்கொலையாளிகளால் அப்பெண்ணைக் கண்டறிய முடியவில்லை. ஏமாற்றத்தில் மார்த்தா வெறித்தனமாக நடந்து கொண்டாள்.
கூலி கொலையாளிகளில் ஒருவன் கார்டன் மார்த்தாவை கொலை செய்துவிட்டால் பிரச்சனை தீர்ந்துவிடும் என நினைத்தான். அன்றிரவே மார்த்தாவை அவளது தோட்டத்தில் வைத்து கொலையும் செய்தான்.
அவளது மரணத்தின் பின்பு கார்டன் மார்த்தாவின் வீட்டினை மக்கள் சூறையாடினார்கள். பூச்செடிகளைப் பிடுங்கி எறிந்தார்கள். அப்போது ஒரு மரப்பெட்டியில் பூ வேலைப்பாடுள்ள கறுப்பு உடை ஒன்று இருப்பதைக் கண்டார்கள். அது புகைப்படத்தில் அந்தப் பெண் அணிந்திருந்த அதே உடையாக இருந்தது
••
September 5, 2025
திரைப்பயணி -9
உலக சினிமாவை அறிமுகப்படுத்தும் திரைப்பயணி காணொளித் தொடரின் 9 வது பகுதி வெளியாகியுள்ளது. இதில் LA STRADA குறித்து உரையாற்றியுள்ளேன்
இணைய நிகழ்வு
செப்டம்பர் 6 சனிக்கிழமை மாலை எனது நூலக மனிதர்கள் புத்தகம் குறித்த மதிப்புரை நிகழ்வு இணைய வழியாக நடைபெறுகிறது.
விருதை விருட்சம் சார்பில் நடைபெறும் இந்த நிகழ்வில் நூல் குறித்து அம்பாள் ஆர். முத்துமணி பேசுகிறார்.
விருதை விருட்சம் நூல் வாசிப்பு அனுபவம் -2
Time: Sep 06, 2025 07:30 PM India
Join Zoom Meeting
https://us05web.zoom.us/j/77727323793...
Meeting ID: 777 2732 3793
Passcode: 8kraDk

மதுரை புத்தகத் திருவிழாவில்
இன்று துவங்கியுள்ள மதுரை புத்தகத் திருவிழாவில் தேசாந்திரி பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது.
அரங்கு எண் 205.
எனது அனைத்து நூல்களும் அங்கே கிடைக்கும்.

September 4, 2025
நெருப்பின் சாட்சியம்
இன் தி ஃபயர் ஆஃப் வார் நியூசிலாந்து பூர்வகுடிகளான மாவோரி இனத்தின் கடைசி யுத்தத்தை மையமாகக் கொண்டது. 1864 ஆம் ஆண்டு நியூசிலாந்தில், பிரிட்டிஷ் ராணுவம் ஒராக்காவ் என்ற இடத்தில் மாவோரி படைகளைத் தாக்கியது. அந்த நிகழ்வினை தான் படம் விவரிக்கிறது. இந்தப் போர் மார்ச் 30 முதல் ஏப்ரல் 2, 1864 வரை தே அவமுட்டுவிலிருந்து தெற்கே ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிஹிகிஹி நகருக்கு அருகில் நடந்தது

1840 இல், மாவோரி தலைவர்களுக்கும் பிரிட்டிஷ் அரசிற்கும் இடையே ஒரு ஒப்பந்தம் உருவானது. அதன்படி அவர்கள் பூர்வகுடி நிலத்தை ஆக்ரமிக்கவோ, அவர்களை மதம் மாற்றம் செய்யவோ, பண்பாட்டு விஷயங்களில் தலையிடவோ கூடாது என்று அறிவிக்கபட்டது. ஆனால் ஆங்கிலேயர்கள் ஒப்பந்தத்தை மீறி கணிசமான அளவு மாவோரி நிலத்தைக் ஆக்ரமித்துக் கொண்டார்கள். இதனை எதிர்த்த மாவோரிகளைக் கைது செய்து தண்டித்தார்கள். ,
மாவோரி மக்கள் ஒன்றுதிரண்டு பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் போராட துவங்கியதும் அவர்களை ராணுவத்தின் துணை கொண்டு ஒடுக்கினார்கள். ஆங்கிலேயர்கள் வடக்கே படேரங்கியில் உள்ள பாதுகாப்புகளை மீறி, ரங்கியாவோஹியா கிராமத்தை சூறையாடினர், அங்கு மாவோரி பெண்கள் மற்றும் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டனர். இந்த வரலாற்றுப் பின்புலத்தில் தான் படம் நிகழுகிறது.
ஆயுதம் ஏந்திய மிகப் பெரிய பிரிட்டீஷ் படையைக் குறைவான வீரர்களைக் கொண்ட பூர்வகுடிகளால் எப்படிச் சந்திக்க முடியும் என இனக்குழு தலைவர் மனியபோடோ கேள்வி எழுப்புவதில் படம் துவங்குகிறது . நமது சுதந்திரத்திற்காகக் கடைசி வரை போராடுவோம் எனக் குலத் தலைவன் உறுதியாக நிற்கிறான்.

போருக்கான ஆயுத்தங்களைத் துவங்குகிறார்கள். இந்த நிலையில் போர்கடவுள் ஒரு இளம்பெண் மூலமாக ஆசி வழங்குகிறாள். கிரேக்கத்திலும் இது போலப் போருக்கு முன்பாக அருள் வேண்டுவார்கள். கடவுளின் ஆசியில்லாமல் போர் நடத்தமாட்டார்கள். மாவோரி போர் கடவுளான பபதுவானுகுவின் பிரதிநிதியாகத் திருமணம் செய்து கொள்ளாத இளம்பெண்ணைத் தான் தேர்வு செய்வார்கள். அவள் அமானுஷ்ய திறன் கொண்டவளாக கருதப்படுவாள். சில சடங்குகள் மூலம் அவள் கடவுளின் உத்தரவை அறிவிப்பாள்.

தெய்வ அருள் கொண்ட இளம் பெண் தான் படத்தின் முக்கியக் கதாபாத்திரம். தான் போர்கடவுளின் குரலாக இருக்க விரும்பவில்லை. எல்லோரையும் போல மகிழ்ச்சியான வாழ்க்கையை அனுபவிக்க விரும்புவதாகக் கோபு என்ற பெண் சொல்கிறாள். ஆனால் அதனை இனக்குழு அனுமதிக்கவில்லை. அவள் ஒரு பல்லியை வைத்திருக்கிறாள். அது நாக்கை சுழற்றுகிறது. அதனை விடுவித்தாலும் அவளையே சுற்றிவருகிறது. போரின் நடுவே அவள் தப்பியோடிவிடக் கூடாது என்பதற்காகக் கிணற்றில் அடைத்து வைக்கிறார்கள். அவளால் ஹக்கியின் கடந்தகாலத்தை உணர்ந்து கொள்ள முடிகிறது. ஹக்கியின் அன்னையைப் பற்றி அவள் சரியாகவே சொல்கிறாள்.

மாவோரிகள் பச்சை குத்தி கொள்வதில் ஆர்வமானவர்கள். முகத்திலும் உடம்பிலும் சித்திரங்களை வரைந்து கொள்கிறார்கள். இது பாரம்பரியத்தின் அடையாளமாகவும், மூதாதையர் ஆவிகளுடனான தொடர்பாகவும் செயல்படுகிறது. இப்படத்தில் போரிடும் இனக்குழு தலைவர்கள் அது போன்ற முகச்சித்திரம் கொண்டிருக்கிறார்கள்.

பூர்வகுடிப் பெண்ணிற்கும் ஆங்கிலேய தந்தைக்கும் பிறந்தவன் ஹக்கி . பதின் பருவத்திலிருக்கிறான். அவனது தாய் போரின் போது கொல்லப்படுகிறாள். தந்தை ஒரு பிரிட்டீஷ் சிப்பாய்.
ஹக்கி துஹோ படைகளால் பிடிபடுகிறான். மாவோரிகள் அவனைப் போருக்கான களப்பலியாகக் கொடுக்க முடிவு செய்கிறார்கள். அவன் மீது கொண்ட அன்பின் காரணமாகக் கோபு அவனைப் பலியிடக் கூடாது எனக் கட்டளை இடுகிறாள்.
இது தெய்வத்தின் வாக்கு என்பதால் அவரை உயிரோடு விடுகிறார்கள். தப்பிச் செல்ல முயலும் ஹக்கி தன்னுடன் வந்துவிடும்படி கோபுவையும் அழைக்கிறான். அவள் தயங்குகிறாள். இதனிடையில் பிரிட்டீஷ் ராணுவம் அவர்களைச் சுற்றி வளைத்துக் கொள்கிறது. துப்பாக்கி சண்டை துவங்குகிறது. மாவோரிகளில் பலரும் களத்திலே செத்து மடிகிறார்கள். ஆனாலும் அவர்கள் சரணடைய விரும்பவில்லை. பெண்களும் ஆயுதமேந்தி போராடுகிறார்கள்.
இந்நிலையில் பழங்குடியினருக்கு வெடிமருந்து கலந்து தருவதில் ஹக்கி உதவி செய்கிறான். அவர்களுக்காகச் சண்டையிடுகிறான். ஆனால் பிரிட்டீஷ் படைகள் மாவோரிகளை மோசமாகத் தாக்கி அழித்து ஒழிக்கிறார்கள். இதில் உயிர்தப்பி ராணுவத்திலிருந்த தனது வெள்ளைக்கார தந்தையிடம் ஹக்கி அடைக்கலமாகிறான். அவரது முகாமில் தங்குகிறான்.
மறைந்து வாழும் கோபுவையும் இனக்குழுவின் பெண்களையும் காப்பாற்ற ஹக்கி திட்டமிடுகிறான். அது எதிர்பாராத விளைவை உருவாக்குகிறது. மாவோரி பண்பாட்டின் அடையாளங்களையும் அவர்கள் போர்முறைகளையும் நம்பிக்கைகளையும் படம் விவரிக்கிறது. மாவோரி மொழியிலே படம் உருவாக்கபட்டிருக்கிறது. முக்கிய நடிகர்களும் அந்த இனத்தைச் சேர்ந்தவர்களே.

திரைக்கதை எழுத்தாளர் டிம் வொரால் மற்றும் இயக்குனர் மைக் ஜோனாதன் இணைந்து மாவோரிகள் வரலாற்றின் அறியப்படாத உண்மைகளைப் படத்தில் காட்சிப்படுத்தியுள்ளார்கள். வனநெருப்பு நடந்த உண்மைகளின் சாட்சியம் போலிருக்கிறது. குதிரையில் நோயுற்ற குழந்தையை ஏற்றி நடத்திச் செல்லும் காட்சி. போர் களத்தில் அனைவரும் சேர்ந்து முழங்குவது. கைவிடப்பட்ட கோபியை காப்பாற்ற ஹக்கி முயலுவது. முகாமில் தந்தையுடன் ஹக்கி முரண்படுவது எனத் தேர்ந்த காட்சிகள் சிறப்பாக உருவாக்கபட்டுள்ளன. இருளும் ஒளியும் கலந்து போர்கள அனுபவத்தினை நிஜமாக்குகிறது ஒளிப்பதிவு. அந்த வகையில் தேர்ந்த ஒளிப்பதிவு. சிறந்த கலை இயக்கம், இசையமைப்பாளர் ஆர்லி லிபர்மேன் வழங்கியுள்ள இனிமையான மரபிசை எனப் படம் சிறந்த அனுபவத்தைத் தருகிறது.
August 31, 2025
இந்தி இதழில்
வாகர்த் என்ற இந்தி இலக்கிய இதழில் எனது கட்டுரை இந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.

August 30, 2025
திரைப்பயணி -8
திரைப்பயணி காணொளித் தொடரின் எட்டாவது பகுதியில் The Last Emperor திரைப்படம் குறித்துப் பேசியுள்ளேன்
August 25, 2025
குற்றமுகங்கள் 20 ஜுகூர்
1893ல் வட இந்திய கிராமங்களில் மணப்பெண் கடத்தல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருமண வீட்டிற்குள் புகுந்து மணப்பெண்ணை யாரோ கடத்திப் போய்விடுகிறார்கள். யார் அவன் என்றோ, பெண்ணை எப்படிக் கடத்திக் கொண்டு போகிறான் என்றே கண்டறிய முடியவில்லை.

இந்தக் கடத்தலுக்குப் பயந்து மணப்பெண் யார், எங்கே திருமணம் நடக்கிறது என்ற தகவல்களை ரகசியமாக வைத்துக் கொண்டார்கள். மணப்பெண்ணை ஊர்வலமாக அழைத்து வருவதை நிறுத்திக் கொண்டார்கள். குடும்பத்தினர் தவிர வேறு எவரும் திருமணத்திற்கு அழைக்கபடவுமில்லை. இவ்வளவு எச்சரிக்கையாக நடந்தாலும் மணப்பெண் கடத்தல் தொடரவே செய்தது.
ரூபியா கௌர் என்ற பெண் தான் முதலில் கடத்தப்பட்டவள். அவளது திருமணம் சிக்ரா என்ற கிராமத்தில் நடைபெறுவதாக இருந்தது. அதற்காக முந்திய நாள் மாலையே மணப்பெண்ணை அழைத்துக் கொண்டு வந்து உறவினர் வீட்டில் தங்க வைத்திருந்தார்கள்.
பின்னிரவில் வீட்டிற்குள் மாறுவேஷத்தில் வந்த ஒருவன் ரூபியாவைக் கடத்திக் கொண்டு போய்விட்டிருந்தான். மணமகள் காணாமல் போன விஷயம் காலையில் தெரிய வந்து கிராமமே அவளைத் தேடினார்கள். கண்டுபிடிக்க முடியவேயில்லை.
இதன் தொடர்ச்சியாகச் சில மாதங்களில் சிக்ராவை ஒட்டியே பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் திருமணத்திற்கு முன்பாகக் கடத்தப்பட்டார்கள். யார் இவர்களைக் கடத்திக் கொண்டு போவது. அந்தப் பெண்கள் என்ன ஆனார்கள் என்பதைக் கண்டறிவதற்காகக் காவல்அதிகாரி வில்லியம் டேவி தலைமையில் காவல்படை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டார்கள். அவர்கள் கண்டறிந்த தகவல்கள் வியப்பூட்டுவதாக இருந்தன
கன்னோஜ் பகுதியில் சொர்க்கத் திருமணம் என்றொரு சடங்கு நடைபெறுகிறது. மரணத்தருவாயில் இருக்கும் கிழவர்கள் இறந்தபின்பு சொர்க்கத்திற்குச் செல்ல வேண்டும் என்பதற்காக மணமேடையிலிருந்து ஒரு பெண்ணைக் கடத்தி வந்து திருமணம் செய்து கொள்ள வேண்டும். இதற்காக வசதியான கிழவர்கள் பணம் கொடுத்துப் பெண்ணைக் கடத்தி வரச் செய்கிறார்கள்
இந்தக் கடத்தலில் ஈடுபடுகிறவன் பெயர் ஜுகூர். அது அவனது உண்மையான பெயரில்லை. அவன் தெற்கிலிருந்து வந்தவன். காதில் பெண்கள் அணிவது போலக் கம்மல் அணிந்திருப்பான். அவன் ஒரு கூட்டத்தை வைத்திருந்தான். அவர்கள் மாறுவேஷத்தில் கிராமங்களில் சுற்றியலைந்து எங்கே திருமணம் நடைபெற இருக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பார்கள்.

பின்பு மணமகன் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றோ, மேளம் வாசிப்பவர்களில் ஒருவரைப் போலவே மாறுவேஷம் புனைவார்கள். மணப்பெண் தங்கியுள்ள வீட்டில் தக்னம் என்றொரு வாசனைப்பொடியை காற்றில் தூவிவிடுவார்கள். அந்த வாசனையை நுகர்ந்தவுடன் எவராலும் விழிப்பு கொள்ளவே முடியாது. அப்படித்தான் மணப்பெண்ணைக் கடத்துகிறார்கள்.
கடத்தப்பட்ட பெண்ணை எப்படி எங்கே கொண்டு போகிறார்கள். இந்த விற்பனை யார் மூலமாக நடைபெறுகிறது என டேவியால் கண்டறிய முடியவில்லை. ஆகவே அவரே ஒரு திருமணத்திற்கு ஏற்பாடு செய்து மணப்பெண்ணைக் கடத்தவரும் ஜுகூரை பிடிப்பதற்காகக் காத்துக் கொண்டிருந்தார். அந்தத் திருமணத்தில் மணப்பெண் கடத்தப்படவில்லை.
கிராமம் தோறும் ஜுகூருக்கு தகவல் கொடுப்பவர்கள் இருக்கிறார்கள், அவர்களை முதலில் கண்டுபிடிக்க வேண்டும் என்று முடிவு செய்தார். சந்தேகத்தின் பெயரில் பலரையும் விசாரித்தார்கள். அவரால் ஜுகூரை கண்டறிய முடியவில்லை. பல்வேறு குற்ற கும்பல்களை விசாரித்த போது ஜுகூரை பற்றி அறிந்து கொள்ள முடியவில்லை.
இதே நேரம் பிஜ்னோர் மாவட்டத்தில் மணப்பெண் கடத்தல் பரவியது. ஜுகூரைத் தேடி அங்கேயும் டேவி சுற்றியலைந்தார்.
சொர்க்கத் திருமணம் தடைசெய்யப்படுவதாகவும் அதில் ஈடுபட நினைப்பவர்களுக்குக் கடுமையான தண்டனை அளிக்கபடும் எனக் காவல்துறை அறிவித்தது. கங்கை கரையோர கிராமங்கள் யாவும் கண்காணிக்கப்பட்டன. எங்கும் ஒரு சொர்க்கத் திருமணமும் நடைபெறவில்லை. மணப்பெண் கடத்தல் மெல்ல குறைந்து போனது. ஜுகூரை கைது செய்ய அவரால் முடியவில்லை.
தனது பணி ஒய்வுக்கு முன்பாக வில்லியம் டேவி ஒருமுறை சிக்ரா கிராமத்திற்கு வருகை தந்தார். அப்போது புனுகு விற்கும் ஒருவனிடமிருந்து தகவல் ஒன்றை கேள்விபட்டார். அதை அவரால் நம்ப முடியவில்லை.
மணமகள் கடத்தல் என்பதே பொய். அது ஒரு நாடகம். தான் காதலித்தவனுடன் ஒரு பெண் ஒடிப்போவதற்காக நடத்தப்பட்ட நாடகமது. இதை முதலில் வெற்றிகரமாகச் செய்தவள் ரூபியா. அவள் தனது காதலன் பாகலுடன் ஒடிப்போவதற்காக ஜுகூரை உருவாக்கினாள்.
இது போலக் காதலித்து வீட்டை விட்டு ஓடிப்போகும் பெண்கள் அந்தக் கதையை வளர்த்தெடுத்தார்கள். ஊரை நம்ப வைத்தார்கள். அதில் பிறந்தது தான் சொர்க்கத் திருமணம்.
இதைக் கேட்டு டேவி அதிர்ச்சி அடைந்தார். அவன் சொல்வதை எப்படி நம்புவது எனக் கேட்டார். ரூபியா இப்போது லதியா என்ற கிராமத்தில் வசிப்பதாகச் சொன்னான். டேவி அவளைத் தேடிச் சென்றார்.
ரூபியா உண்மையை ஒத்துக் கொண்டாள். அவளும் காதலனும் இணைந்து உருவாக்கிய நாடகமது என்பதை விளக்கினாள். இந்தக் கதையைப் பரவலாக்கியது கங்கை நதிப் படகோட்டிகள். அவர்களுக்கு விசித்திரமான கதைகளைச் சொல்வது பிடிக்கும். ஆகவே அக்கதை வட இந்தியா முழுவதும் பரவியது.
ஜுகூர் என்று ஒருவன் நிஜமாகயில்லை. அவனைப் பிடிப்பதற்காக இரண்டு ஆண்டுகள் பகலிரவாகத் தான் சுற்றியலைந்தது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என டேவிக்குப் புரிந்தது.
ரூபியாவிடமிருந்து விடைபெறும் போது அவளது நான்கு வயது பையனைக் கண்டார். அவனுக்கு ஜுகூர் என ரூபியா பெயர் வைத்திருந்தாள்
••
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
