S. Ramakrishnan's Blog, page 6

June 13, 2025

சுமன்

எம்.ஜி. பவேரியா இயக்கத்தில் ஜெயா பாதுரி நடித்துள்ள FTII டிப்ளமோ திரைப்படம் சுமன். 1970ம் ஆண்டு வெளியானது .

கறுப்பு வெள்ளையில் அழகான காட்சிகளைக் கொண்டிருக்கிறது. சின்னஞ்சிறிய கிராமமும் துள்ளியோடும் ஜெயா பாதுரியின் விளையாட்டுதனமும் வசீகரிக்கின்றன.

கிராமத்திற்கு வரும் குரங்காட்டி, படம் காட்டுபவர். கோவிலில் சாமி முன்பாக உள்ள காசைத் திருடி ஐஸ் வாங்குவது. தோழி வீட்டிற்குச் சென்று சந்திப்பது, கிராமவீதிகளில் தன்னிஷ்டம் போல சுற்றியலைவது போன்ற காட்சிகள் கடந்த காலத்தின் நினைவைத் தூண்டுகின்றன.

பதின்ம வயதில் ஏற்படும் உடல் மன மாற்றங்களை, உணர்ச்சிகளை ஜெயா பாதுரி சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.

அழகான ஒளிப்பதிவு. நேர்த்தியான பின்னணி இசை. அர்த்தமுள்ள படமாக உருவாக்கபட்டுள்ளது.

இணைப்பு.

https://youtu.be/5VGuDa9o1RY?si=N-QkfX8zIR5r_uRL

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 13, 2025 04:57

June 11, 2025

காலத்தால் அழியாத உண்மை

நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான சிக்ரிட் அன்ட்செட் எழுதிய கிறிஸ்டின் லாவ்ரான்ஸ்டேட்டர் நாவல் ஆயிரம் பக்கங்களுக்கும் மேலானது. மூன்று தொகுதிகளாக வெளியாகியுள்ளது. நாவலில் வரும் கிறிஸ்டியன், சிக்ரிட்டின் மாற்றுவடிவம் போலவே சித்தரிக்கபடுகிறாள். சிக்ரிட்டின் சொந்த வாழ்க்கை அவரது நாவலை விடவும் திருப்பங்களைக் கொண்டது. துயரத்தால் நிரம்பியது.

14ம் நூற்றாண்டில் கதை நடக்கிறது. மலைகிராமம் ஒன்றில் வாழும் லாவ்ரான்ஸின் மகளான கிறிஸ்டின் விளையாட்டுதனமானவள். ஒரு நாள் தனது தங்கை உல்விட்டோடு விளையாடிக் கொண்டிருக்கும் போது அடுக்கி வைத்திருந்த மரக்கட்டைகள் சரிந்து விழுந்துவிடவே உல்விட் காயமடைகிறாள். அதில் அவள் உயிர் பிழைக்கமாட்டாள் என்ற நிலை உருவாகிறது.

கிறிஸ்டின் அம்மா சூனியக்காரி ஆஷில்ட்டை அழைத்து வந்து மகளைக் குணப்படுத்தப் போவதாகச் சொல்கிறாள். கடவுளால் தன் மகளைக் காப்பாற்ற முடியாவிட்டால் தான் சாத்தனின் கதவையும் தட்டுவேன் என்கிறாள்.

தனது கணவனை விஷம் கொடுத்துக் கொன்றதாக ஊர்விலக்கம் செய்யப்பட்டுத் தனியே வாழ்ந்து வரும் ஆஷில்ட்டை அழைத்து வருகிறார்கள். அவள் மருந்து கொடுத்து உல்விட்டைக் குணப்படுத்துகிறாள். கட்டையை ஊன்றி நடக்குமளவு உல்விட் தயாராகிறாள்.. திருமணத்திற்கு முன்பே கிறிஸ்டின் தனது கன்னித்தன்மையை இழந்திருக்கிறாள். அதைச் சூனியக்காரி ஆஷில்ட் அறிந்திருக்கிறாள். அது குறித்து கிறிஸ்டினிடம் பேசுகிறாள். பரிகசிக்கிறாள்.

சைமன் டாரேவை கிறிஸ்டின் திருமணம் செய்து கொள்ளப் போகும் போது எதிர்பாராத பிரச்சனை உருவாகி தடைஏற்படுகிறது. இதற்கிடையில் அவளைப் பண்ணையில் வேலை செய்யும் ஒருவன் பலவந்தமாகப் பாலியல் உறவு கொள்ள முற்படுகிறான். அவனைக் கல்லால் தாக்கிவிட்டு தப்பியோடுகிறாள் கிறிஸ்டின். இதைப் பற்றி அவதூறு பேசியவனுடன் ஆர்னே சண்டையிடும் போது எதிர்பாராமல் கொல்லப்படுகிறான். நிலச்சரிவு போல எதிர்பாராமல் அவளது வாழ்க்கையின் உறுதி தகர்ந்து போகிறது.

துயரத்திலிருந்து விடுபடுவதற்காக ஒராண்டு காலம் கிறிஸ்டின் ஒஸ்லோவில் அமைந்துள்ள பெனடிக்டைன் மடாலயம் ஒன்றில் கன்னியாஸ்திரியாக சேருகிறாள். அங்கே புதிய தோழிகள் அறிமுகமாகிறார்கள்.

ஒரு நாள் எதிர்பாராதவிதமாக எர்லெண்ட் என்ற படைத் தளபதியை சந்திக்கிறாள். அவர்களுக்குள் காதல் அரும்புகிறது. வாழ்வின் இனிமையை மீண்டும் அறியத் துவங்குகிறாள். எர்லெண்ட் நீதிபதியின் மனைவியான எலைனுடன் சேர்ந்து வாழுகிறவன். அவனுக்குப் பிள்ளைகள் இருக்கிறார்கள் என்ற உண்மையை அறிந்து கொள்ளும் போது அதிர்ச்சி அடைகிறாள்.

ஆனாலும் அவன் மீதான காதலில் இணைந்து வாழ்வது எனமுடிவு செய்கிறாள். எர்லெண்டுடன் அவனது ஹுசாபி எஸ்டேட்டுக்கு செல்கிறார். அது மோசமாக நிர்வகிக்கப்படுவதைக் கிறிஸ்டின் கண்டுபிடிக்கிறாள். தானே பொறுப்பேற்று அதை ஒழுங்கமைக்கத் தொடங்குகிறாள் அவர்கள் புதிய வாழ்வினை துவங்குகிறார்கள். கிறிஸ்டினுக்குக் குழந்தைகள் பிறக்கிறார்கள்.

இந்நிலையில் அரசிற்கு எதிராக எர்லெண்ட் சதி செய்கிறான். அந்த முயற்சி தோல்வி அடையவே அவனது சொத்துகள் யாவும் பறி முதல் செய்யப்படுகின்றன. எல்லாவற்றையும் இழந்த கிறிஸ்டின் மீண்டும் தனது தந்தையின் பண்ணைக்குத் திரும்புகிறாள். அங்கேயும் எர்லெண்டால் பிரச்சனைகள் ஏற்படுகிறது.

காலம் ஒடுகிறது. அவளது பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாகிறார்கள். அவர்களின் திருமணம் நடக்கிறது. தனது மூன்றாவது மகனிடம் பண்ணையை ஒப்படைத்த பிறகு, கிறிஸ்டின் ட்ரொன்ட்ஹெய்முக்குத் திரும்புகிறாள்

நாடெங்கும் பிளேக் நோய் பரவுகிறது. நோய் பாதித்தவர்களுக்குச் சிகிட்சை அளிக்கும் பணியில் ஈடுபடுகிறாள். கடைசியில் அவளையும் பிளேக் தொற்றுகிறது. மரணத்தை எதிர்கொள்ளக் காத்திருக்கிறாள்.

கிறிஸ்டினின் வாழ்க்கைச் சரிதம் போல எழுதப்பட்டுள்ள இந்த நாவல் நார்வேயின் அரசியல், சமூக, வரலாற்று நிகழ்வுகளையும் கதையின் ஊடாகப் பேசுகிறது. குறிப்பாகக் கிறிஸ்துவச் சமயம் முன்வைக்கும் நம்பிக்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களை நாவல் விவாதிக்கிறது.

கிறிஸ்டின் சைமனைத் திருமணம் செய்து கொள்ள ஒத்துக் கொண்டு இன்னொருவனின் காதலை ஏற்றுக் கொள்கிறாள். அவளால் யாரைத் திருமணம் செய்வது என முடிவு செய்ய முடியவில்லை. அவளுக்காக இறந்த காதலனின் நினைவிலிருந்து விடுபடமுடியாமல் தவிக்கிறாள். அச்சமும் ஆசைகளுமே நம்மை வழிநடத்துகின்றன என்கிறாள் கிறிஸ்டின்

மடாலய வாழ்க்கை அவளுக்குப் பொருந்தவில்லை. அவள் எர்லெண்டை காதலிக்க ஆரம்பிக்கிறாள். அந்தக் காதலும் அவள் விரும்பிய வாழ்க்கையை அளிக்கவில்லை. கிறிஸ்டினின் குற்றவுணர்வு நாவலில் அழுத்தமாகப் பதிவாகியுள்ளது.

சிக்ரிட் அன்ட்செட்

கிறிஸ்டினின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளில் பாதிக்கும் மேலாகச் சிக்ரிட் அன்ட்செட் வாழ்வில் நடந்திருக்கிறது. அவளும் இது போலக் காதல் திருமணம் செய்து கொண்டிருக்கிறாள். கணவனால் ஏமாற்றப்பட்டிருக்கிறார். கைக்குழந்தையோடு தனியே வாழ ஆரம்பித்துத் தனக்கென ஒரு வாழ்க்கையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்.

கிறிஸ்டினின் சிறுவயதில் பண்ணையில் நடைபெறும் நிகழ்வுகள். மதநம்பிக்கைகள். சைமனைத் திருமணம் செய்து கொள்வதற்கான நிச்சயம் செய்யும் போது நடக்கும் சடங்குகள். புனித ஒலாவ் பண்டிகை, கிராமப்புற நம்பிக்கைகள். சூனியக்காரிகளுக்கு எந்த வாக்குறுதியும் தந்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கை. கிறிஸ்துவ மடாலயத்தில் நடைபெறும் நிகழ்வுகள் எனப் பல்வேறு ஊடுஇழைகளைக் கொண்டு நாவலை சிறப்பாக உருவாக்கியிருக்கிறார்

கிறிஸ்டின் லாவ்ரான்ஸ்டேட்டர் போன்ற செவ்வியல் நாவல் வெறும் கதையை மட்டும் சொல்வதில்லை. மாறாக வாழ்வின் உண்மையான அர்த்தம் என்ன என்ற கேள்வியை எழுப்புகிறது. நாம் ஆசைப்படுவதற்கும் நமக்குக் கிடைப்பதற்குமான இடைவெளியை விவாதிக்கிறது. வாழ்வின் போக்கினை யார் தீர்மானிப்பது. அது காட்டாறு போலத் தன்னியல்பாகச் செல்லக்கூடியதா என்ற விசாரணையை மேற்கொள்கிறது. நன்மையும் தீமையும் பிரிக்க முடியாத படி ஒன்று கலந்திருப்பதாகக் நாவலில் ஒரு கதாபாத்திரம் சொல்கிறது. தாமஸ் ஹார்டியின் நாவல்களில் வரும் பெண் கதாபாத்திரம் போன்ற சாயலில் கிறிஸ்டின் உருவாக்கபட்டிருக்கிறார். கன்னித்தன்மை என்பதை பற்றிய விவாதத்தை கிறிஸ்டின் வழியாக சிக்ரிட் முன்னெடுக்கிறார்.

நாவலில் கிறிஸ்டினின் கனவுகள் எதுவும் நிறைவேறுவதில்லை. ஆனால் அவள் மகிழ்ச்சியான தருணங்களைத் தானே உருவாக்கிக் கொள்கிறாள். அது நீடிக்க வேண்டும் என்றும் விரும்புகிறாள். ஆனால் அவளது மகிழ்ச்சி நீடிப்பதில்லை. இயற்கை சதா மாறிக் கொண்டேயிருப்பது போலவே அவளது வாழ்வும் மாற்றம் கொள்கிறது.

மகள், காதலி, மனைவி, தாய் என்ற நான்கு நிலைகளில் கிறிஸ்டினிடம் வெளிப்படும் உணர்வுகளையும் அவளது மனப்போராட்டங்களை நாவல் மிகவும் சிறப்பாகச் சித்தரித்துள்ளது.

பெரிய நாவல்களை வாசிப்பதென்பது இன்றைய காலத்தின் வேகவாசிப்பிற்கு மாற்றானது. இது போன்ற நாவல்கள் மலையேற்றதைப் போல நம்மைச் சோதிக்கின்றன. ஆனால் மலையின் உச்சியை அடையும் போது நாம் காணும் விரிந்த, முழுமையான காட்சிகளைப் போல வாழ்வின் பிரம்மாண்டத்தை நாவல் முடியும் போது உணர முடிகிறது. நார்வேயில்,அதுவும் 14ம்நூற்றாண்டில் நடக்கும் கதை என்றாலும் கதையில் இடம்பெற்றுள்ள பல்வேறு நிகழ்வுகள் தமிழ் வாழ்க்கையோடு பொருந்திப் போகின்றன. கிறிஸ்டினின் அன்னை மற்றும் தந்தை நம் ஊரின் மனிதர்களைப் போலவே நெருக்கம் கொள்கிறார்கள்.

கிறிஸ்துவ நம்பிக்கைகள். பைபிள் கதைகள். நார்வேயின் தொல்கதைகள். புராணங்கள். உண்மையான வரலாற்று நிகழ்வுகள், பிளேக் பாதித்த நாட்கள் என நாவலைப் பல்வேறு பின்னல்களால் உருவாக்கியுள்ளார். கதையை வளர்த்துச் செல்வதிலும் கதாபாத்திரங்களின் உணர்ச்சி வெளிப்பாட்டினை எழுதுவதிலும். அபூர்வமான தருணங்களை உருவாக்குவதிலும் சிக்ரிட் அன்செட் மிகச் சிறந்த நாவலாசிரியராக மின்னுகிறார்.

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 11, 2025 06:16

June 9, 2025

வரையப்பட்ட பழங்கள்

 “Poetry is an awareness of the world, a particular way of relating to reality.” என்கிறார் திரைப்பட இயக்குநர் ஆந்த்ரேய் தார்கோவெஸ்கி. அது ஓவியத்திற்கும் பொருந்தக்கூடியதே.

Apple Harvest – Camille Pissarro

காமில் பிஸ்ஸாரோவின் ஆப்பிள் அறுவடை ஓவியம் 1888 ஆம் ஆண்டு வரையப்பட்டது, இந்த ஒவியத்தில் வண்ணங்களின் இணக்கம் மற்றும் துடிப்பு வசீகரமாகவுள்ளது. மரத்தின் சற்றே வளைந்த வடிவம் அதற்குத் தனி அழகை உருவாக்குகிறது. இது போன்ற சற்றே வளைந்த வடிவமாகவே கலைஞனும் இருக்கிறான். அந்த வளைவு இயற்கையாக உருவானது. வளைந்த மரம் என்பதால் அதன் கனிகள் கசந்து போவதில்லை. அந்த வளைவு மரத்திற்குத் தனித்துவத்தை அளிக்கிறது.

ஆப்பிளைச் சேகரிக்கும் பெண்கள் குனிந்திருக்கிறார்கள். அவர்களின் ஆடை வண்ணமே முதலில் கவர்கிறது. ஆப்பிள் பறிக்கும் ஆண் நேர்த்தியாக உடை அணிந்திருக்கிறான். விரிந்து பரந்திருக்கும் சூரிய வெளிச்சத்தை மரத்தின் நிழல்களே சமநிலை செய்கிறது. அதுவும் பின்புலத்தில் காட்டப்படும் வண்டியும் குதிரையும் அத்தனை அழகாக இருக்கிறது.

வழக்கமாக நிழலை வரைவதைப் போலப் பிஸ்ஸாரோ வரையவில்லை. உதிர்ந்த இலைகளின் அடர்த்தியைப் போல வரைந்திருக்கிறார். நீண்ட நேரமாக நடக்கும் அறுவடைப் பணியின் நடுவே இந்தக் காட்சி இடம்பெறுகிறது என்பதைக் குறிப்பது போலச் சேகரிக்கபட்ட பழங்கள் கொண்ட கூடை காணப்படுகிறது.

ஆப்பிள் அறுவடை செய்யும் அன்றாடக் காட்சி ஏன் ஓவியத்தில் முதன்மையாகிறது. இது ஆப்பிள் அறுவடையை மட்டும் குறிக்கவில்லை. மாறாகத் தொடரும் நிகழ்வு ஒன்றின் சிறு துண்டை அடையாளப்படுத்துகிறது. வேறு வேறு இசைத்துணுக்குகள் ஒன்று சேர்ந்து ஓலிப்பது போல இந்தக் காட்சி உருமாறுகிறது. ஆப்பிள் மரமோ, மனிதர்களோ அல்ல பிரகாசமாகச் சூரியனே ஓவியத்தினைச் சிறப்பாக்குகிறது,

ஆப்பிள் அறுவடை என்பது காலமாற்றத்தின் அடையாளம். அது பிஸ்ஸாரோ வின் அகவுணர்வின் வெளிப்பாடாகவும் மாறுகிறது, பாயிண்ட்லிசம் பாணியில் வரையப்பட்ட இந்த ஓவியத்தில் வண்ணப்புள்ளிகள் உயிர்ப்புடன் விளங்குகின்றன.

ஒரு ஆப்பிளையோ, பேரிக்காயினையோ, அல்லது திராட்சை பழங்களையோ ஓவியத்தில் காணும் போது வியப்பான பொருளைப் பார்ப்பது போலிருக்கிறது. பயன்பாட்டிலிருந்து ஒரு பொருளை துண்டித்தவுடன் அது விசித்திரமாகிவிடுகிறது.

பழங்களைப் பொறுத்தவரை அதைக் காலத்தின் குறியீடாகத் தத்துவம் கருதுகிறது. கவிதை அதனைக் கனிவின் வெளிப்பாடாகவும் இச்சையின் வடிவமாகவும் பதிவு செய்கிறது. பழங்களை வரைவதென்பது ஓவியத்தில் முக்கியப் பயிற்சி. குறிப்பாகப் பழங்களின் வடிவம், நிறம் மற்றும் அதன்மீது படரும் வெளிச்சம். நீர்துளிகள் மற்றும் அதன் இருப்பு நுண்மையாக வெளிப்படுத்தபடுகிறது.

மரத்தடியில் உதிர்ந்து கிடக்கும் பழமும், கூடையில் வைக்கப்பட்டுள பழமும் ஒன்றல்ல. இரண்டின் இடமும் இருப்பும் வேறுவேறு பொருள் தரக்கூடியதே. ஓவியம் வாடாத மலர்களை உருவாக்கியதைப் போலக் காலத்தின் பிடியிலிருந்து பழத்தை விடுவிக்கிறது.

கலைவிமர்சகர் டேவன்போர்ட் ஆப்பிள் மற்றும் பேரிக்காய் பற்றி அழகாக எழுதியிருக்கிறார், பேரிக்காய் மனிதனுக்கும் தெய்வீகத்திற்கும் இடையே இணக்கத்தை ஏற்படுத்துகிறது. அதே நேரம் ஆப்பிள் விலக்கப்பட்ட கனியாகக் கருதப்படுகிறது. ஆப்பிள் வழியாகவே தீமை உலகிற்கு அறிமுகமாகிறது. பேரிக்காய் வழியே அது சமன் செய்யப்படுகிறது என்கிறார் டேவன்போர்ட்.

ஆப்பிளும் பேரிக்காயும் ஒன்றாக இடம்பெற்றுள்ள ஒவியம் என்பது குறீயிட்டு பொருள் கொண்டது. டேவன்போர்ட் வீட்டில் இந்த இரண்டு மரங்களும் ஒன்றாகப் பிணைந்து நின்றிருந்தன என்கிறார்கள். நியூட்டனின் காலடியில் ஆப்பிள் விழுந்ததிற்குப் பதிலாகப் பேரிக்காய் விழுந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் எனக் கேள்வி எழுப்புகிறார்.

கருவுறுதல், நல்ல அதிர்ஷ்டம் மற்றும் நீண்ட ஆயுளை ஆப்பிள் குறிப்பதாக நம்புகிறார்கள், கஜகஸ்தானில் பெண்கள் கருவுறுதலுக்காக ஆப்பிள் மரத்தின் கீழ் அடியில் படுத்துக் கொள்வது வழக்கம்.. இது போலவே ஆர்மீனியாவில்மணமக்கள் நல்ல அதிர்ஷ்டத்திற்காக ஒரு ஆப்பிளை வீச கூரையின் மீது ஏறி வீசுகிறார்கள். கிரேக்கப் புராணத்தில் வரும் தங்க ஆப்பிள் என்பது விசுவாசத்தின் அடையாளமாகும்.

மத்திய கிழக்கு நாடுகளில் கதை சொல்லி தனது கதையை முடிக்கும் போது மூன்று ஆப்பிள்கள் சொர்க்கத்திலிருந்து விழுந்தன: ஒன்று இந்தக் கதையைச் சொல்பவருக்கு, மற்றொன்று கதையைக் கேட்டவருக்கு, மூன்றாவது கதையில் வருபவருக்கு என்கிறார். ஆப்பிள் என்பது வான்வுலகின் பரிசாகக் கருதப்படும் மரபது.

Cezanne – Still-life with apples

பிஸ்ஸாரோவின் ஆப்பிள் அறுவடையைப் போலவே செசானின் ஆப்பிள்களும் புகழ்பெற்றவை. செசானின் ஓவியம் 1877 ஆம் ஆண்டு வரையப்பட்டது. அந்த எட்டு ஆப்பிள்கள் மாறாத வாழ்வின் இனிமையை அடையாளம் காட்டுவதாகச் சொல்கிறார்கள். வேறு வேறு ஆப்பிள்களின் இடையே ஒரு இணைப்பு மற்றும் சமநிலை உணர்வை உருவாக்குகிறார் செசான். அவர் வண்ணத்தையும் ஒளியையும் பயன்படுத்தும் அழகு வியப்பூட்டக்கூடியது.

தனது மாடல்களிடம் ஒரு ஆப்பிளாக இருங்கள் என செசான் உத்தரவிடுவார் என்கிறார்கள். ஒருவர் ஆப்பிளாக இருப்பது என்பது அசைவற்ற நிலை மட்டுமில்லை. முழுமையாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் நிலையுமாகும்.. தன்னையே ஆப்பிளுடன் செசான் ஒப்பிட்டுக் கொள்கிறார்.

உலகின் பார்வையில் ஆப்பிள் கொண்டிருக்கும் மதிப்பு பயன்பாடு கருதியது. ஆனால் அதைச் சமயம், வரலாறு, காலமாற்றம். கலையின் முழுமை, உணர்ச்சியின் வடிவம் எனப் பல்வேறு நிலைகளுக்கான அடையாளப் பொருளாக ஓவியமே மாற்றுகிறது. அசைவற்ற நிலையில் உறைந்துள்ள பழங்கள் மகத்தான சிற்பங்களைப் போலவே காட்சியளிக்கின்றன. பரவசம் தருகின்றன

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 09, 2025 22:56

குற்றமுகங்கள் 15 பச்சைக்கண் லிஸ்டர்

1899ம் ஆண்டுப் பச்சைக்கண் லிஸ்டர் என அழைக்கப்பட்ட ஜோசப் லிஸ்டர் பெல்காமில் மருத்துவராகப் பணியாற்றி வந்தார். நாற்பது வயதிருக்கும். தீவிர காளி பக்தராகக் கருதப்பட்ட லெஸ்டர் நெற்றியில் குங்குமம் அணிந்து கொண்டார். மாதம் ஒருமுறை விசேச காளி பூஜைகளை நடத்தியதோடு தானே சிவப்பு ஆடையைக் கட்டிக் கொண்டு காளி நடனம் ஆடியதும் உண்டு.

லெஸ்டரைத் தேடி சாமியார்களும், மாந்திரீகம் அறிந்தவர்களும் வந்து போவது வழக்கம். அவர் பழைய கோட்டையினுள் ஏதோ புதையலைத் தேடிக் கொண்டிருந்ததாக மக்கள் பேசிக் கொண்டார்கள். இயற்கையான புத்திசாலித்தனமும், அப்பாவியான தோற்றமும் கொண்டவரால் மட்டுமே மக்களை ஏமாற்ற முடியும் என லிஸ்டர் அறிந்திருந்தார்.

நகரின் முக்கிய வணிகர்கள், அதிகாரிகளை மகிழ்ச்சிப்படுத்த ஆங்கில நடன நிகழ்ச்சியைத் தொடர்ந்து ஏற்பாடு செய்து வந்தார். அதன் காரணமாக லிஸ்டர் மீது நன்மதிப்பு உருவாகியிருந்தது.

ஒரு நாள் லிஸ்டரின் தவறான சிகிட்சை காரணமாக லெக்கி என்ற கர்ப்பிணிப் பெண் இறந்து போனாள். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் அவரது மருத்துவமனையை உடைத்து நொறுக்கியதோடு அவரையும் தாக்கி கையை உடைத்தார்கள்.

டாக்டர் லிஸ்டர் ஒரு போலி மருத்துவர் என அவரது உதவியாளராகப் பணியாற்றிய முனீம் வாக்குமூலம் அளித்த காரணத்தால் அவர் மீது பொதுவிசாரணை நடைபெற்றது. இதில் அவரிடம் சிகிட்சை பெற்ற நோயாளிகள் சாட்சியம் அளித்தார்கள். ஒருவன் தனது பல்லை லிஸ்டர் பிடுங்கியதில் காது கேளாமல் போய்விட்டதாகப் புகார் செய்தான். இன்னொரு பெண் தனது நாக்கின் நுனியை லிஸ்டர் வெட்டிவிட்டதாகச் சொன்னாள்.

லிஸ்டர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கபட்டார். நீதிமன்றமே மருத்துவர் குழுவை அவரை விசாரிப்பதற்காக நியமித்தது. அதன் தலைவராக டாக்டர் எட்வர்ட் பக்லி நியமிக்கபட்டார். விசாரணையின் போது லிஸ்டர் முன்னுக்குப் பின்னாகத் தகவல்களை வழங்கினார். அது அவர் மீதான சந்தேகத்தை அதிகமாக்கியது. லிஸ்டர் தான் உண்மையான மருத்துவர் என்பதற்கான சான்றுகள் தன்னிடமிருப்பதாகவும் கூறியதோடு ராணுவ மருத்துவமனை அளித்த நற்சான்றிதழ் ஒன்றினையும் சமர்பித்தார்.

பக்லி அதனை நம்பவில்லை. தன்னுடைய கண்முன்னால் அவர் ஒரு குடல்அறுவை சிகிட்சையை நடத்திக் காட்ட வேண்டும் என்று ஆணையிட்டார்.

அறுவைசிகிட்சைக்கான நாள் குறிக்கபட்டது. டாக்டர் பக்லியோடு அன்று டாக்டர் ரால்ப் அலெக்ஸ்க்கும் விசாரணை அதிகாரியாகக் கலந்து கொண்டார்.

அறுவை சிகிட்சை துவங்குவதற்கு முன்பாக லிஸ்டர் தனக்கு மருத்துவம் தெரியாது என்பதை ஒத்துக் கொண்டதோடு, தான் இரண்டு ஆண்டுகள் மீரட் ராணுவ மருத்துவமனையில் மருந்து கொடுக்கும் பணியாளராக வேலை செய்த உண்மையை ஒத்துக் கொண்டார். கடந்த பனிரெண்டு ஆண்டுகளாக அவர் வேறுவேறு ஊர்களில் மருத்துவராக நடித்து ஏமாற்றியிருப்பது தெரியவந்தது.

மருத்துவ மோசடிகளை விடவும் அவர் பழைய கலைப்பொருட்களைத் திருடி விற்ற கதையும், ஏழு பெண்களைத் திருமணம் செய்து கொண்ட விஷயமும் விசாரணையில் தெரிய வந்தது.

போலி மருத்துவர்களுக்கு என்ன தண்டனை அளிப்பது என அன்றைய சட்டத்தில் இல்லை. ஆகவே திட்டமிட்ட மோசடிக்கான அதிகபட்ச தண்டனையை அளிக்க வேண்டும் எனப் பக்லி தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்

லிஸ்டர் திருமணம் செய்து கொண்ட ஏழு பெண்களும் வசதியானவர்கள். அழகிகள். அவர்கள் குடும்பத்துடன் லிஸ்டர் நெருங்கிப் பழகியிருக்கிறார். தான் கர்சன் பிரபுவின் உறவினர் என்றும் இங்கிலாந்தில் தனக்கு மிகப்பெரிய சொத்து இருப்பதாக நம்ப வைத்திருக்கிறார். அவரது காளி பக்தி மற்றும் தரையில் அமர்ந்து சாப்பிடும் பழக்கம் பெண்வீட்டாரை நம்ப வைத்திருக்கிறது.

ஆச்சரியமானதும் ஆனால் நம்பமுடியாதது போலத் தோன்றுவதுமான செய்தி என்னவென்றால் வேறு வேறு ஆண்டுகளில் அவரது ஏழு திருமணங்களும் ஜனவரி 19 அன்றே நடந்தேறியிருக்கின்றன. திருமணம் செய்து கொண்ட பெண்ணோடு ஒன்றோ இரண்டோ ஆண்டுகள் வசித்திருக்கிறார். பின்பு இங்கிலாந்திற்கு அவசர வேலையாகச் சென்று வருவதாகக் கிளம்பியிருக்கிறார். மீண்டும் அவர்களைச் சந்திக்கவேயில்லை.

லிஸ்டர் மீதான விசாரணையின் போது அவரது ஐந்து மனைவிகள் நேரில் வந்திருந்தார்கள். வராத இருவர் அது தனது கணவரில்லை என்று மறுத்தார்கள். எந்தப் பெண்ணும் தன்னை ஏமாற்றித் திருமணம் செய்து கொண்டதாக லிஸ்டர் மீது புகார் தரவில்லை. லிஸ்டருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டது.

விடுதலையாகி வந்த லிஸ்டர் இங்கிலாந்திற்குக் கப்பல் ஏறினார். அந்தக் கப்பலில் வந்த பியாரா என்ற பார்சி பணக்காரப் பெண்ணுடன் பேசிப் பழகி கப்பலிலே திருமணம் செய்து கொண்டார். அந்தத் திருமண விபரம் குறித்து இசபெல்லா கப்பலின் பதிவேடு தெரிவிக்கிறது. ஆறு வாரங்களுக்குப் பின்பு கப்பல் லண்டனை அடைந்த போது பியாரா மட்டுமே தரையிறங்கினார். லிஸ்டரைக் காணவில்லை. கப்பலில் இருந்த லிஸ்டருக்கு என்ன ஆனது என பியாராவால் கண்டறிய முடியவில்லை. ஆனால் அவள் தன் வாழ்நாளின் கடைசி வரை லிஸ்டரின் மனைவியாகவே அறியப்பட்டாள்•

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 09, 2025 21:00

June 8, 2025

அன்பால் மட்டுமே வெல்ல முடியும்

ஸ்டான்லி கிராமர் இயக்கிய Guess Who’s Coming to Dinner 1967ல் வெளியான திரைப்படம். 58 ஆண்டுகளைக் கடந்த போதும் இன்றைக்கும் இது பொருத்தமான படமே.

1967 வரை, அமெரிக்காவின் பதினேழு மாகாணங்களில் கறுப்பின இளைஞனை வெள்ளைக்காரப் பெண் திருமணம் செய்து கொள்வது சட்டவிரோதமாகவே கருதப்பட்டது , அந்தச் சூழலில் தான் இக்கதை நடக்கிறது.

டாக்டர் ஜான் பிரெண்டிஸ் என்ற கறுப்பின இளைஞனைக் காதலிக்கும் வெள்ளைக்காரப் பெண் ஜோயி அவனைத் தனது பெற்றோர்களைச் சந்திக்க அழைத்துச் செல்வதில் படம் துவங்குகிறது. அவர்கள் விமான நிலையத்திலிருந்து உற்சாகமாக வீடு திரும்புகிறார்கள்.

ஹவாய் தீவிற்கு விடுமுறைக்குச் சென்ற போது அங்கே டாக்டர் ஜானை சந்திக்கும் ஜோயி அவனைக் காதலிக்கத் துவங்குகிறாள். பத்து நாட்களில் அந்தக் காதல் திருமணத்தை நோக்கி நகர்ந்துவிடுகிறது. ஜோயியின் தந்தை மாட் நாளிதழ் ஒன்றின் ஆசிரியர். அம்மா கலைக்கூடம் ஒன்றை நடத்தி வருகிறாள். வசதியான குடும்பம்.

ஜோயியின் பெற்றோர் அவர்கள் காதலை எதிர்பார்க்கவில்லை. தங்கள் எதிர்ப்பை வெளிப்படையாகக் காட்டுகிறார்கள். ஆனால் ஜோயி தான் டாக்டர் ஜானைத் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவிக்கிறாள். இதனை ஏற்க முடியாத தந்தை அவளுடன் கோபித்துக் கொள்கிறார்

ஜோயியின் தாயும் தந்தையும் மகளின் பிடிவாதம் குறித்து அறிந்தவர்கள் ஆகவே அவர்கள் டாக்டர் ஜானிடம் வெளிப்படையாகத் தங்களால் அந்த திருமணத்தை ஏற்க முடியாது என்று அறிவிக்கிறார்கள்.

டாக்டர் ஜானிற்கு 37 வயது ஜோயியின் வயதோ 23. ஜானின் தந்தை தபால்காரராக இருந்தவர். ஏழை. இத்தனை வேறுபாடுகளையும் சுட்டிக்காட்டி மகளின் திருமணத்தை ஏற்க மறுக்கிறார் ஜோயி தந்தை.

இதற்கிடையில் டாக்டர் ஜான் தனது தந்தை தாயை ஜோயின் வீட்டில் நடக்கும் விருந்தில் கலந்து கொள்ள வரவழைக்கிறான். ஜான் தனது தந்தையிடம் காதலை மறைக்கிறான். போனில் அதைப்பற்றிப் பேசும் காட்சி அபாரமானது. அவர்கள் விமானத்தில் புறப்பட்டு வருகிறார்கள். அவர்கள் வீட்டிற்குள் நுழையும் போது கண்களிலே தங்கள் மனநிலையை வெளிப்படுத்திவிடுகிறார்கள். குறிப்பாக ஜானின் அம்மா சிறப்பான கதாபாத்திரம். அவர் தன் மனதை வெளிப்படுத்தும் இடமே முக்கிய முடிவை எடுக்க வைக்கிறது.

ஜோயி அழகான இளம் பெண். அவள் தனது காதலில் உறுதியாக இருக்கிறாள். இப்படி ஒரு கறுப்பினத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டால் நாளை உன் பிள்ளைகள் என்ன ஆவார்கள். அவர்களுக்குச் சமூக மதிப்பு கிடைக்காதே என தந்தை மிரட்டுகிறார். அதற்கு ஜோயி உறுதியான பதிலைத் தருகிறாள்.

ஜோயியின் பெற்றோர்களிடம் ஜான் அமைதியாக, பண்பாக நடந்து கொள்கிறான். கறுப்பின இளைஞனாக அவன் சந்தித்து வந்த கடினமான பாதையைப் பற்றி விவரிக்கிறான். மருத்துவத்தில் அவன் பெற்றுள்ள பட்டம். அவனது சேவை மனப்பான்மை, ஐக்கிய நாடுகள் சபையின் மருத்துவக் குழுக்களில் பணியாற்றுகிறான் என்பதையெல்லாம் ஜோயியின் தந்தை அறிந்து கொள்கிறார். ஆனாலும் திருமணத்திற்கு சம்மதிக்க முடியவில்லை..

ஜோயின் பெற்றோர் போலவே டாக்டர் ஜானின் பெற்றோரும் மகனின் காதலை ஏற்கவில்லை. அவர்கள் வெள்ளைக்காரப் பெண்  வேண்டாம் என்கிறார்கள்.  அந்த திருமணம் நிலைக்காது எனப்பயப்படுகிறார்கள்.

ஜோயியின் வீட்டுப் பணிப்பெண் டில்லி கறுப்பினத்தைச் சார்ந்தவள். ஆனால் அவள் டாக்டர் ஜானை ஏற்க மறுக்கிறாள். ஜோயியை விட்டு விலகிப் போய்விடும் படி மிரட்டுகிறாள். அவளின் இந்த வெளிப்பாட்டை டாக்டர் ஜான் நன்றாகப் புரிந்து கொள்கிறார். அதனால் தான் அவளிடம் கோபம் கொள்வதில்லை.

இரண்டு பெற்றோர்களும் பேசிக் கொள்ளும் காட்சி அற்புதமானது. குறிப்பாக டாக்டர் ஜானின் அம்மாவும் ஜோயியின் அம்மாவும் காதலைப் புரிந்து கொள்கிறார்கள். பிள்ளைகளின் ஆசையை நிறைவேற்றி வைக்க வேண்டியது தங்கள் கடமை என உணர்கிறார்கள். ஆனால் இருவரின் தந்தையும் காதலை ஏற்பதில்லை. சமூகக் கட்டுபாடு, பண்பாடு. எதிர்காலம் குறித்த அச்சம் எனத் தயங்குகிறார்கள்.

ஜோயியின் தந்தையோடு கோல்ஃப் விளையாடும் நண்பரான மான்சிக்னர் அபூர்வமான கதாபாத்திரம். அவர் செய்தியை கேள்விபட்டவுடனே அந்தக் காதலை அங்கீகரிக்கிறார். ஜோயியின் தந்தைக்குச் சமூக மாற்றத்தைப் புரிய வைக்க முயற்சிக்கிறார்.

ஜானும் அவரது தந்தையும் பேசிக் கொள்ளும் காட்சி மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக எழுதப்பட்டிருக்கிறது. அவர்களுக்குள் உண்மையான விவாதம் நடக்கிறது. அவர்கள் தங்கள் தலைமுறை வேறுபாடுகளைப் பற்றி விவாதிக்கிறார்கள். சண்டையிடுகிறார்கள். தந்தையிடம் ஜான் மன்னிப்பு கேட்கும் போது நாமும் கலங்கிவிடுகிறோம்.

புரிந்து கொள்ளாத பெற்றோர்களை ஜோயியும் ஜானும் எப்படிச் சம்மதிக்க வைக்கிறார்கள் என்பதை அழகாகக் காட்டுகிறார்கள்.

ஸ்பென்சர் டிரேசி ஜோயியின் தந்தை மாட்டாக நடித்திருக்கிறார். டாக்டர் ஜானாகச் சிட்னி போய்ட்டியர் நடித்துள்ளார். இருவரும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

ஒரு வீட்டில் நடக்கும் இரவு விருந்திற்குள் நடக்கும் மோதல்கள். உணர்ச்சிப்பெருக்கில் நடைபெறும் நிகழ்வுகள். காரசாரமான விவாதங்கள், கண்ணீர் சிந்தும் நிமிஷங்கள் என ஒரு தேசம் சந்தித்த சமூக நிகழ்வுகளின் மறுவடிவமாக படம் மாறியிருக்கிறது. அதுவே இப்படத்தை இன்றும் புதுமை மாறாமல் வைத்திருக்கிறது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 08, 2025 09:53

June 7, 2025

மழையின் தாளம்

மழை தரும் அனுபவத்தின் பல்வேறு பரிமாணங்களைச் சிறந்த இசையோடு கவித்துவமாக விவரித்துள்ளது இந்த ஆவணப்படம். 1967ல் பூனே திரைப்படக் கல்லூரியில் பயின்ற ஆர்.கே. ராமச்சந்திரன் இயக்கிய டிப்ளமோ பிலிம்.

பல்வேறு வகையான வாழ்க்கைச் சூழல் கொண்டவர்கள் மழையை எதிர்கொள்ளும் விதம் அற்புதமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. . மழைத் தண்ணீரில் விளையாடியபடி செல்லும் பள்ளிச்சிறார்கள். மழைக்கு முன்பும் பின்புமான மனநிலை. தாகத்தில் தண்ணீர் குழாயினை உறிஞ்சும் நாய். பேனா விற்பவர், கடைச்சிப்பந்தி, அழகான பெண்ணுக்கு இடம் தரும் இளைஞன், வீடு திரும்பும் கணவர், என மழையின் காட்சிகளை சிறந்த இசையோடு கலைநேர்த்தியாக ராமசந்திரன் உருவாக்கியுள்ளார்

இணைப்பு

https://youtu.be/CSULb4W_8As?si=cN0NNcL8J66IblCv

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 07, 2025 05:59

June 6, 2025

தற்செயலின் மாயம்

தேசாந்திரி யூடியூப் சேனல் சார்பாக வெளியாகியுள்ள எனது புதிய உரை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 06, 2025 22:33

June 5, 2025

விட்டோரியோ ஸ்டோராரோ : ஒளியின் ஞானம்.

உலகப் புகழ்பெற்ற சினிமா ஒளிப்பதிவாளர் விட்டோரியோ ஸ்டோராரோ தனது திரையுலக அனுபவத்தையும் ஒளி பற்றிய ஞானத்தையும் பகிர்ந்து கொள்ளும் சிறப்பான உரை. ஒளிப்பதிவாளருக்கு இருக்க வேண்டிய அடிப்படை ஈடுபாடுகள், காட்சிகளை உருவாக்குவதில் வெளிப்படும் உன்னத கலையாற்றல் பற்றி விவரிக்கிறார்.

இளம் ஒளிப்பதிவாளர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் அவசியம் காண வேண்டிய காணொளி.

இதில் ஸ்டோராரோ இருளுக்கும் ஒளிக்குமான தொடர்பை, உணர்ச்சிகளுக்கும் வண்ணங்களுக்குமான தொடர்பை மிக அழகாக விவரிக்கிறார். பிளேட்டோவின் ஞானம் மற்றும் காரவாஜியோ ஒவியங்களிலிருந்து தான் கற்றுக் கொண்ட பாடங்களைச்  சொல்கிறார். அவரது புகழ்பெற்ற திரைப்படங்களான தி கன்ஃபார்மிஸ்ட் தி லாஸ்ட் எம்பரர், ரெட்ஸ் அபோகாலிப்ஸ் நவ் படங்களின் ஒளிப்பதிவு குறித்தும் சிறப்பாக விவரிக்கிறார்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 05, 2025 21:06

June 4, 2025

நடமாடும் சினிமா

நான்ஸி நிமிபுட்ரின் இயக்கியுள்ள ONCE UPON A STAR என்ற தாய்லாந்து திரைப்படத்தைக் காணும் போது எனது சிறுவயது நினைவுகள் பீறிட்டன.

எனது கிராமத்தில் பீடிக்கம்பெனி சார்பாக இலவசமாகத் திரையிடப்படும் திரைப்படங்களைக் கண்டிருக்கிறேன். ஒரு வேனில் பீடி விளம்பரம் செய்தபடியே கிராமத்தை சுற்றிவருபவர்கள் இரவில் ஊர் மைதானத்தில் திரைக்கட்டி படம் போடுவார்கள். 16mm ஃபிலிம் புரொஜெக்டர் பயன்படுத்துவார்கள். எம்.ஜி.ஆர் படமா, சிவாஜி படமா என்பது எந்தப் பீடிக்கம்பெனி என்பதற்கு ஏற்ப மாறுபடும்.

வா ராஜா வா, கோமாதா என் குலமாதா, காவல்காரன். தாய்க்கு தலைமகன், சவாலே சமாளி போன்ற திரைப்படங்களைத் திரையிட்டுப் பார்த்திருக்கிறேன்.

மாலை ஆறு மணிக்கெல்லாம் திரைக்கட்டி விடுவார்கள். ஆனால் என்ன படம் என்று சொல்ல மாட்டார்கள். பீடி விளம்பரத்திற்கான நோட்டீஸ். இலவச பீடி விநியோகம் நடந்து முடிந்த பின்பே படத்தைத் திரையிடுவார்கள். ஆபரேட்டர் அருகில் அமர்ந்து கொண்டு ஓடி முடித்த ரீல்களைப் பத்திரமாக மரப்பெட்டிக்குள் வைப்பதற்கு உதவி செய்வான் கூடப் படித்த முத்துராமன். இதற்காக அவனுக்கு எட்டணா கிடைக்கும்.

படம் ஆரம்பிக்கும் முன்பாக இடம் பிடிக்க ஊர்மக்கள் பாய் அல்லது சாக்குக் கொண்டு வந்து விரித்துவிடுவார்கள். மாட்டுவண்டியை ஒரமாகப் போட்டு அதில் அமர்ந்து படம் பார்ப்பவர்களும் உண்டு. சைக்கிளில் அமர்ந்து பார்ப்பவர் உண்டு. கயிற்றுகட்டிலைக் கொண்டு வருகிறவர்கள் ஒரமாகப் போட்டுக் கொள்ள வேண்டும் என்பது கட்டுப்பாடு. பீடி விளம்பரத்திற்கும் கோமாதா என் குலமாதாவிற்கும் என்ன தொடர்பு எனத் தெரியவில்லை. அதை நிறைய முறை போட்டிருக்கிறார்கள்.

ஒருமுறை மின்சாரம் துண்டிக்கபட்ட போது இருட்டிற்குள் யாரோ ஒரு ரீலைத் திருடிக் கொண்டுபோய்விட்டார்கள். பீடிக் கம்பெனி ஆட்கள் ஊர் முழுவதும் தேடியும் அந்த ரீல் கிடைக்கவில்லை. அந்த வருஷத்தோடு அந்த பீடிக்கம்பெனி வருவது நின்று போனது.

மருந்துக் கம்பெனி விளம்பரத்திற்காக ஊர் ஊராகச் சென்று படம் காட்டும் குழுவினரைப் பற்றியதே ONCE UPON A STAR திரைப்படம்.

இன்று திரைப்படங்களில் ஒரு நடிகருக்கு பதிலாக வேறு ஒருவர் டப்பிங் பேசுவது போல இவர்கள் மௌனப் படத்தைத் திரையிட்டு அதில் வரும் எல்லாக் கதாபாத்திரங்களுக்கும் குரல் கொடுக்கிறார்கள். பெண் குரலில் கூட ஆணே பேசுகிறான்.

ஒரு பழைய வேன். அதற்குள் ஒரு 16mm ஃபிலிம் புரொஜெக்டர், படப்பெட்டி, மைக், திரை மற்றும் இதர உபகரணங்கள். விற்பனைக்கான மருந்துகள். நான்கு பேர் அதில் தொலை தூர கிராமங்களை நோக்கி பயணம் செய்கிறார்கள்.

காவோ, மனித் மற்றும் மேன் என மூவர் அந்தப் பயணக்குழுவில் இருக்கிறார்கள். மூவரில் மனித் மட்டுமே அனைத்து வேலைகளையும் செய்கிறான். அவன் திறமைசாலி. சினிமாவில் சாதிக்க வேண்டும் எனக் கனவு காணுகிறவன்.

புகழ்பெற்ற திரைப்பட நடிகர் மித்ர் சாய்பாஞ்சா படங்களை அதிகம் காட்டுகிறார்கள். அவருக்கு மனித் குரல் கொடுக்கிறான் இலவசமாகத் திரையிடப்படும் படத்தின் இடைவேளையில் தங்களின் மருந்துகளை விற்பனை செய்கிறார்கள். அதன் வசூலுக்கு ஏற்ப அவர்களுக்கு ஊதியம் தரப்படுகிறது.

மருந்துக் கம்பெனிகளுக்குள் போட்டி என்பதால் எந்த நடிகருக்கு யார் சிறப்பாகக் குரல் கொடுப்பவர். எந்தப் படத்திற்குக் கூட்டம் அதிகமாகச் சேர்கிறது என்பதில் பலத்த போட்டி ஏற்படுகிறது.

மனித்தின் குழுவில் ருவாங்கே என்ற இளம்பெண் இணைந்து கொள்கிறாள். கதாநாயகிக்கு குரல் கொடுக்கிறாள். அது மிகுந்த வரவேற்பை பெறுகிறது. அதன்பிறகு அவர்கள் ஜோடியாகச் செயல்பட ஆரம்பிக்கிறார்கள். தன்னை யாரும் நெருங்க கூடாது என்பதற்காகத் தனக்குச் சிபிலிஸ் நோய் இருப்பதாகப் பொய் சொல்கிறாள் கே.

காவோவும் மனித்தும் கேயைக் காதலிக்கிறார்கள், அவள் யாரை விரும்புகிறாள் என்பதை அறிந்து கொள்ளத் தனித்தனியாக அணுகுகிறார்கள், கே தனது எதிர்காலத்திற்கெனத் திட்டம் வைத்திருக்கிறாள். அதை அறிந்து கொள்ளும் மனித் அவள் தனது விருப்பத்தின்படி செயல்பட அனுமதிக்கிறான்.

நால்வரின் பயண அனுபவமும், அவர்களுக்குள் ருவாங்கேயை காதலிப்பதில் ஏற்படும் போட்டியும், திரையிடுவதில் ஏற்படும் பிரச்சனையும் சிறப்பாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. தீரவத் ருஜிந்தமின் ஒளிப்பதிவும் மனித் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சுகோல்லாவத் கனாரோட் நடிப்பும் சிறப்பானது.

1960களின் பிற்பகுதியில் தாய்லாந்தின் கிராமப்புற பார்வையாளர்கள் எப்படியிருந்தார்கள். அன்றைய திரையுலகம் எவ்வாறு இயங்கியது என்பதைப் படம் உண்மையாக விவரிக்கிறது. திரை நட்சத்திரத்தின் வாழ்க்கையும் குரல் கொடுப்பவரின் வாழ்க்கையும் ஒரே புள்ளியில் இணைகின்றன.

தாய்லாந்தின் அழகிய கிராமப்புறப் பகுதிகள் வழியாகச் செல்லும் இந்தச் சினிமா பயணம் தாய்லாந்து சினிமாவின் புகழ்பெற்ற நட்சத்திரம் மித்ர் சாய்பாஞ்சாவுக்குச் சிறப்பான அஞ்சலியை செலுத்துகிறது

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 04, 2025 05:10

June 3, 2025

குற்றமுகங்கள் 14 ஜோரூ தொங்கா

கன்யாகுமரி முதல் கஞ்சம் வரையிலான பரந்த பகுதியை உள்ளடக்கிய மதராஸ் பிரசிடென்சியில் 986 காவல் நிலையங்கள் இருந்தன. அத்தனை காவல்நிலையங்களும் ஜோரூ தொங்காவை அறிந்திருந்தன. அவன் காவல் நிலையங்களில் மட்டுமே திருடுவான். அதுவும் காவலர்கள் வசூல் செய்து வைத்துள்ள தண்டத்தொகை, லத்தி, வாள், மைக்கூடு, தொப்பி, பதிவேடு போன்றவற்றைத் திருடிக் கொண்டுவிடுவான்.

போலீஸிடம் திருடுவது என்பது பகிரங்கமான சவால். அதில் வெற்றி பெறுவதைத் தனது அசாத்திய திறமையாக ஜோரூ தொங்கா நினைத்தான். போலீஸ் நிலையத்தில் திருடு போய்விட்டால் அதை வெளியே சொல்ல மாட்டார்கள். உயர் அதிகாரிகளுக்குத் தெரிவதற்கு முன்பாகத் திருடிய பொருளை மீட்டுவிட முயலுவார்கள். சில சமயம் ஜோரூ தொங்காவிடமே களவுக்கூலி கொடுத்து பொருளை மீட்டுப் போவதும் உண்டு.

ஜோரூ தொங்கா சித்தூரில் வளர்ந்தவன். அவனது அப்பா நாடக கலைஞர்களுக்கு ஒப்பனை செய்தவர். அம்மா ஒரு நடிகை என்றார்கள். ஜோரூவிற்கு மூன்று வயதாக இருக்கும் போது அவனது அம்மா தற்கொலை செய்து கொண்டுவிட்டாள். ஆகவே ஜோரூவை தன்னால் வளர்க்க முடியாது எனப் பாட்டி வீட்டில் கொண்டு போய்விட்டார் அவனது தந்தை. பின்பு அவன் தனது தந்தையைக் காணவேயில்லை. சித்தூரில் வசித்த பாட்டி இறந்த பின்பு அவன் மரம்செடி கொடிகள் போலத் தானாக வளர்ந்து விட்டான்

ஜோரூ இரண்டு மூன்று முறை காவலர்களால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறான். எங்கேயும் அவன் தனது குற்றங்களை மறுத்ததில்லை. “போலீஸ்காரர்களுக்குப் போதுமான கவனம் இல்லை. அதை நிரூபிக்கவே திருடினேன்“ என்பான். நீதிபதி தியோபால்ட் அதைக் கேட்டுச் சிரித்திருக்கிறார்.

“திருடிய பொருட்களை எங்கே வைத்திருக்கிறான்“ என வழக்கறிஞர் கேட்டபோது அதுக்குத் துப்புக்கூலி கொடுக்க வேண்டும் எனக் கையை நீட்டினான் ஜோரூ.

அந்தக் காலக் காவல்நிலையங்களில் இரண்டே அரிக்கேன் விளக்கு இருந்தன. இரவு ரோந்து சுற்ற தீப்பந்தங்களைப் பயன்படுத்தினார்கள். காவலர்களுக்குத் துப்பாக்கி வழங்கப்படவில்லை. நடந்து தான் ரோந்து சுற்ற வேண்டும். அதிகாரிகளுக்குக் குதிரை வழங்கப்பட்டிருந்தது.

சில காவல்நிலையங்களில் அவர்களே உணவு தயாரித்துக் கொள்ளவும் வேண்டும். ஸ்டேஷனிலே உறங்குவதற்கான போர்வை தலையணை வைத்திருப்பார்கள். காவல்நிலையத்தின் துப்பரவு பணிக்கென ஆட்களை வைத்திருந்தார்கள். அவர்களுக்குச் சம்பளம் கொடுக்க மாட்டார்கள்.

புகார் கொடுக்க வரும் கிராமவாசிகளிடமிருந்து காய்கறிகள், தேங்காய் நாட்டுகோழி, வாத்து துவங்கி ஆடு மாடுகள் வரை இனாமாக வாங்கிக் கொள்வார்கள். அப்படி வாங்கிய ஆடு மாடுகளை ஸ்டேஷன் வாசலில் ஏலமிடுவார்கள். சந்தை வியாபாரி கோல்சா அதைக் குறைந்த விலைக்கு வாங்கிக் கொள்வான். அப்படிக் காவலர்களால் இனமாகப் பெறப்பட்ட இரண்டு ஆடுகளைக் கூட ஜோரூ தொங்கா திருடியிருக்கிறான்.

திருடிய ஆட்டை காட்டுக்கோவிலில் வெட்டி ஊருக்கே கறிச்சோறு போட்டான். அந்தக் கறிச்சோறு சாப்பிடுவதற்காகக் காவலர்களும் வந்திருந்தார்கள். அவர்கள் சாப்பிட்டு முடித்தபின்பே அது தங்களிடம் திருடிய ஆடு என்பதைத் தெரிந்து கொண்டார்கள்.

காட்டில் ஒற்றை யானையைப் பார்ப்பது ஆபத்து என்பது போலத் தனியே வரும் காவலருக்கு ஜோரூ தொங்காவை பார்த்தால் பயம். வாயில் ஏதோவொரு பச்சிலையை மென்று கொண்டிருப்பான். அந்த எச்சிலை காவலர் கண்ணில் துப்பிவிடுவான். அடுத்த நிமிஷம் பார்வை மறைந்துவிடும். காவலரின் பொருட்களைப் பறித்துக் கொண்டு மாயமாகி விடுவான். கண்விழித்துப் பார்க்கும் காவலர் ஒரு வெற்றிலையில் களிம்பு போல ஏதோ இருப்பது தெரியும். அதை ஜோரூ விட்டுப் போயிருப்பான். அந்தக் களிம்பை கண்ணில் போட்டுக் கொண்டால் பார்வை மீண்டும் இயல்பாகிவிடும்.

ஜோரூ எப்போதாவது பிடிபட்டு விடுவான். அப்போது வேறுவேறு ஊர்களில் இருந்து காவலர்கள் தேடிவந்து அவனை ஆசை தீர அடிப்பார்கள். அப்போது ஜோரூ வலியை மறைத்துக் கொண்டு சிரிப்பான். அத்தோடு “அடிப்பதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது, நன்றாக அடிக்கட்டும்“ என்றும் சொல்லுவான்.

“இவ்ளவு அடியும் உதையும் வாங்கிச் சிறைக்குப் போகிறாயோ. இந்தத் திருட்டில் உனக்கு என்ன லாபமிருக்கிறது“ என இன்ஸ்பெக்டர் நானாபாய்க் கேட்டிருக்கிறார். “இதெல்லாம் ஒரு விளையாட்டு, இருட்டு இல்லேன்னா நட்சத்திரத்தால ஜொலிக்க முடியாது, அப்படித் தான் திருடனும் போலீசும்“ என்றான் ஜோரூ.

இப்படியே ஜோரூ தொங்காவை விட்டுவைத்தால் காவல்துறை மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போய்விடும் என நினைத்த போலீஸ் சூப்பிரண்டன்ட் டைரெல் அவனது இரண்டு பாதங்களையும் அம்மிக்கல்லால் நசுக்கி நடக்க முடியாமல் செய்தார். அவனால் கால்களைத் தரையில் ஊன்றவே முடியாமல் போனது.

அதன்பிறகான காலத்தில் வாரம் ஒருமுறை ஜோரூ தொங்கா கைகளைத் தரையில் ஊன்றி இழுத்து இழுத்து ஊர்ந்து வந்து காவல்நிலையத்தின் முன்பாகச் சப்தமிடுவான்.

அவனது குரலைக் கேட்ட மாத்திரம் ஏதாவது ஒரு காவலர் வெளியே வந்து அவனது சோற்றுச் செலவிற்கான சில்லறைகளைக் கையில் கொடுத்து அனுப்பி வைப்பார்.

அப்போது காவலரை குனியச் சொல்லி அவரது தொப்பியை எடுத்து வானை நோக்கி வீசி “காக்கா தூக்கிட்டுப் போயிருச்சி“ என்று சிரிப்பான் ஜோரூ.

செல்லமாக அவனது தலையில் தட்டி “உன்னைத் திருத்தமுடியாதுடா“ என்று மண்ணில் விழுந்த தொப்பியை எடுத்து அணிந்து கொள்வார் காவலர்.

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 03, 2025 00:40

S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.