Pa Raghavan
நாளை (மே 12) காலை பத்து மணிக்கு, சென்னை தேவநேயப் பாவாணர் மாவட்ட மைய நூலக வளாக அரங்கில் நடைபெறும் கல்லூரி மாணவர்களுக்கான எழுத்துப் பயிற்சி முகாமில் கலந்துகொள்கிறேன்.
பதிநான்கு நாள்கள் நடைபெறும் இம்முகாமில் உரைநடைப் பிரிவில் முதல் வகுப்பினை நான் எடுக்கிறேன். சிறந்த உரைநடை எழுத்தின் அடிப்படை இலக்கணங்கள் என்பது எனக்குத் தரப்பட்டுள்ள கருப்பொருள்.
கல்லூரி மாணவர்களிடையே தமிழில் எழுதும் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக நூலக இயக்கம் முன்னெடுக்கும் இம்முயற்சி மிக முக்கியமானது. தமிழில் எழுதுவதும் வாசிப்பதும் ஈராயிரக் குழவிகளின் தலைமுறையில் கணிசமாகக் குறைந்து வருகிற சூழலில், மனுஷ்யபுத்திரன் நூலக ஆணைக் குழுத் தலைவராக இருப்பதனால் இதெல்லாம் அங்கே சாத்தியமாகிறது.
நாளை காலை பத்து மணி முதல் பதினொன்றரை மணி வரை என் வகுப்பு. பிறகு அடுத்தடுத்த பாடங்கள், அடுத்தடுத்த ஆசிரியர்கள். முழுமையான விவரங்களைக் கீழே தந்துள்ள அழைப்பிதழில் (பெரிதாக்கிப் பார்த்துப்) பெறலாம்.
வருக.
பிகு: வகுப்பில் கலந்துகொள்ளப் பதிவு செய்த கல்லூரி மாணவர்கள் மட்டுமல்லாமல், எழுத்துக் கலையைப் பயில்வதில் ஆர்வமுள்ள பிறரும் வரலாம் என்று மனுஷ்யபுத்திரன் சொல்லியிருக்கிறார். சென்னையில் உள்ளவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்க.
All rights reserved. © Pa Raghavan - 2022
Published on May 10, 2025 17:30